Wednesday, November 9, 2016

என்னுரை

தமிழ் நாடகங்களின் பால் எனக்கு வெறித்தனமான பற்று உண்டு

எனது பத்தாவது வயதில், பெண் பாத்திர மேற்று நடித்தவன் நான்

கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து ஆண்டுகள்..ஆர்ப்பாட்டமின்றி..தமிழ் நாடகங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் பங்கேற்று வந்த பெருமை எனக்கு உண்டு

சங்ககாலம், சிலப்பதிகார ,மணிமேகலை காலங்களிலிருந்தே, நாடகங்களுக்கான சில வரைமுறைகள் இருந்து வருகின்றன.அதை இன்றளவும் பின் பற்றி வருவதே நம் நாடகங்களின் சிறப்பாகும்

நம் நாடு சுதந்திரம் அடைவத்ற்கு முன்னரே ..பல நாடகக் கலைஞர்கள்..த்ங்கள் நடிப்பாலும், பாடும் திறமையினாலும் மக்களிடையே, சுதந்திர உணர்ச்சியை ஊட்டினார்கள்.சுதந்திரம் அடைய, கலைஞர்கள் ஆற்றிய பணியினை மறக்கவோ..மறுக்கவோ முடியாது

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், பல நாடகக் குழுக்கள் தோன்றின.சமுக நாடகங்கள்,நகைச்சுவை நாடகங்கள்,சரித்திர நாடகங்கள் என நாடகங்கள் அரங்கேறின.குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியை, நாடகங்களின் பொற்காலம் எனலாம்

தொலைக்காட்சி வந்ததற்குப் பின்...நாடகங்கள் சற்று நலிவடைந்தன என்பதை ஒப்புக் கொண்டாலும்..நாடகங்களை அழித்துவிட முடியாது என்பத்ற்கு தமிழகத்தில் விடாமல் நாடகங்களை நடத்திவரும் குழுக்களே சான்று

அக்குழுக்கள் பற்றியும் சிறு குறிப்புகளை  இந்நூலில் கொடுத்துள்ளேன்

நாடகக்கலையை இன்று கட்டிக் காத்துவரும் பெரும்பான்மையான குழுக்கள் தொழில்முறைக் கலைஞர்களைக் கொள்ளாததால், வாழ்வாதாரத்திற்கு பணத்தை நாடகங்கள் மூலம் எதிர்ப்பார்க்காது கலைச்சேவையை மட்டுமே குறிக்கோ ளாகக் கொண்டு பணியாற்றி வருகிறார்கள் எனலாம்

தமிழ் நாடக வரலாறு குறித்து..வளர்ச்சிக் குறித்து ஒரு அணில் பங்கேனும் பணியாற்றிட வேண்டும் என்ற என் அவாவே இந்நூல் உருவாகக் காரணம் எனலாம்

இந்நூல், பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், ஆய்வு மேற்கொள்வோர் ஆகியோருக்கு பயன்படும் வகையில் உருவாகியுள்ளது எனலாம்

இந்நூலைப் படித்து அனைவரும் பயனடைய வேண்டும் என்பதே என் அவா


நன்றி



க்ஷேத்ரா அடுக்ககம்                                                          டி.வி.ராதாகிருஷ்ணன்
53-எச், பீச் ரோடு
கலாக்ஷேத்ரா காலனி,
பெசன்ட் நகர், சென்னை - 90


Friday, May 20, 2016

33 - நாட்டியக் கலை

                                 


ஒரு நடிகன் எப்படி தன் நடிப்பின் மூலம், வெட்கம்,வீரம், கருணை,அற்புதம்,சிரிப்பு,பயம்,அருவருப்பு,கோபம்,அமைதி ஆகிய நவரசங்களை வெளிப்படுத்த முடியுமோ...அதே அளவு ஒரு பரத நாட்டியக் கலைஞனாலும் அதை செய்யமுடியும்.

நாட்டிய அரங்குகளில் விறுவிறுப்புத் தோன்றுவதற்காக முதன் முதலாக ஆடப்படும் நடனம் அலாரிப்பு ஆகும். ஐந்து நிமிடத்திற்குள் ஆடப்படும் இது தத்தகார சொற்கட்டுகளால் ஆனது. இறைவனுக்கும், குருவுக்கும், சபையோருக்கும் வணக்கம் செலுத்தும் வகையில் இது அமைந்திருக்கும். அலாரிப்பை முகசாலி என்றும் கூறுவார்கள். இறுதியில் சிறு தீர்மானத்துடன் முடிக்கப்படும். தீர்மானம் என்பது பல அடவுகளை கோர்வையாக செய்து மிருதங்க சொற்களுக்கு ஏற்ப தாளத்தைப் போடுவது ஆகும்.

ஜதி என்பது அடவின் சொற்களை மிருதங்க சொல்லாக சொல்வதாகும். அலாரிப்புக்கு அடுத்தபடியாக ஆடப்படும் ஜதீஸ்வரம் ஸ்வர வரிசைகளைக் கொண்டதாகும். இது இசையுடன் அமைந்த தொனிப்பாதலால் ஜதீஸ்வரம், என்றும், துவக்கத்தில் அல்லது இறுதியில் ஜதிகள் இணைக்கப்பட்டிருப்பதால் ஜதீஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஜதீஸ்வரத்திற்கு அடுத்தபடியாக ஆடக்கூடிய சப்தத்தில் தான் முதல்முதலாக அபிநயம் வெளிப்படுத்தப்படுகிறது. சப்தம் என்றால் சொல் என்று பொருள். இதற்கான சாஹித்தியங்களில் தெய்வம், அரசன் அல்லது தலைவன் புகழ் பாடி அவர்களுக்கு வணக்கம் செலுத்துவதாக முடிவுறும். சப்தத்தில் ஆட்டத்திற்கான ஜதிகளும் சாஹித்திய அடிகளும் கலந்து வரும். அநேகமான சப்தங்கள் தெலுங்கு மொழியிலேயே அமைந்துள்ளன. சாகித்திய வரிகளை பாடும்போது ஆடல் நங்கை அதற்கான பாவங்களைப் பற்பலவித அபிநயங்களுடன் தெளிவாக வெளிப்படுத்துவாள். இதில் நர்த்தகியின் மனோதர்மத்தையும், கலைத்திறமையையும் அளவிட முடிகின்றது. மண்டுக சப்தம், கோதண்டராமர் சப்தம் போன்ற சப்தங்கள் மிகவும் பிரபலமானவை. அநேகமான சப்தங்கள் காம்போதி ராகத்திலேயே பாடப்பட்டவையாகும். இன்று பல தமிழ் சப்தங்களை மற்ற ராகங்களிலும் பாடி ஆடி வருகின்றனர்.
சப்தம், வர்ணம், பதம் போன்றவை அபிநயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவையாக அமைந்திருக்கும்


கதாபாத்திரங்களுக்கு ஏற்ப கருத்துகளையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் கலையே , இங்கு அபிநயம் எனப்படும்.அதாவது ஒரு கதையிலோ, பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த்தையிலும் கருத்தினை வாயினால் கூறாது கையினாலும், தலை, கண், கழுத்து முதலிய அங்கங்களாலும், பார்ப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லப்படும் செய்கையே அபிநயம் ஆகும்.

கண்ணீர் சிந்துவது போல நடிப்பது நாடக வழக்கமாகும்.ஆனால், அபிநயத்தில் நடிப்பு, பா(B)வம், பல்வேறு அங்க நிலைகள் போன்றவை ஆடுபவரின் மன எழுச்சிகளை உணர்த்தப் பயன்படுகின்றன.நவரசங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அமைவதே நடனத்தில் சப்தம்,வர்ணம் ,பதம் ஆகும்

பலவிதமான இந்திய நாட்டியக்கலை வடிவங்களில் பரதநாட்டியம்,கதகளி,மோகினியாட்டம்,குச்சிப்பிடி,ஒடிசி,கதக்,சத்ரியா மற்றும் மணிப்புரி ஆகிய எட்டு கலை வடிவங்களும் இந்திய நாட்டியங்கள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒருபுறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யேகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார்.


பரதநாட்டியம், தென்னிந்தியாவிற்கே...அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும்.இது, பரதமுனிவரால் உருவாக்கப்பட்டதாலேயே பரதம் எனப் பெயர் வந்ததாகக் கூறுவர்.அதேநேரம்..
ப - (B)பாவம்
ர-ராகம்
த- தாளம்

ஆகிய மூன்றையும் குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது.இதில் (B)பாவம் உணர்ச்சியையும்,ராகம் இசையையும் குறிக்கும்.இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனமே பரதநாட்டியமாகும்.நன்கு தேர்ச்சி பெற்ற நாட்டியக் கலைஞரே முகபாவனையையும் நவரசங்களையும் கொண்டுவர முடியும்.

முக்கியமாக இந்நடனத்தை ஆடுபவர்கள் பெண்களாகவே உள்ளனர்.ஆனாலும் ஆண்களும் இதனை ஆடுவதுண்டு.முழுமுதல் கடவுள் சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் ஆடியுள்ளதாக உள்ளது..சிவன் ஆடும் நடனம் தாண்டவம் ஆகும்.மகிழ்ச்சியில் அவர் ஆடுவது ஆனந்த தாண்டவம் ஆகும்.கோபத்தில் ஆடுவது ருத்ரதாண்டவம் ஆகும்.மென்மையான அசைவுகள் "லாஸ்யா" எனப்படுகிறது.

உடல் அசைவுகளும், கைமுத்திரைகளும் அடவு எனப்படும்.பல அடவுகள் ஜதி ஆகும்.இவை 120 உள்ளன.இவற்றில் 80தான் பயன்பாட்டில் உள்ளன.சிதம்பரம் ஆலயத்தில் இவை சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

வடுவூர் ராமய்யாபிள்ளை, திருநாளப்புத்துர் சுவாமிநாத பிள்ளை, தனஞ்செயன், அடையார் லட்சுமணன், கலாநிதி நாராயணன் ஆகியோர் இந்நடனம் பயிற்றுவைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

பத்மா சுப்ரமணியம், சித்ரா விஷ்வேஷ்வரன், வைஜயந்தி மாலா ஆகியோர் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர்கள்.

பரதநாட்டியத்தில்...கைமுத்திரைகள் முதன்மையாகும்.பாடலின் பொருளை முத்திரைகள் காட்டும்.கை முத்திரைகள் வழி கண் செல்லும்.கண்கள் வழி மனம் செல்லும்.மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும். இதையே கம்பர்.....

கைவழி நடனஞ் செல்லக்
கண்வழி மனமும் செல்ல
மனம் வழி பாவமும்
பாவ வழி ரசமும் சேர....

என்கிறார்.

(பரதம்..மற்றும் அதைச்சார்ந்துள்ளவைப் பற்றி ஒரு முழு புத்தகமே எழுதலாம்.,ஆனால் நாடகக்கலை பற்றிய இந்நூலில் பரதக் கலைப்பற்றியும் குறிப்பு இருக்க வேண்டும் என எண்ணியதால் இதைப் பற்றி சுருக்கமாகச் சொல்லியுள்ளேன்)

Sunday, April 24, 2016

32- தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்

                               

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை வளர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட அரசு அமைப்பு இதுவாகும்

1955ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த மைப்பு 27-11-1956ல் சங்கங்களின் பதிவு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டது.

1973ஆம் ஆண்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இவ்வமைப்பின் மூலம் நாட்டுப்புற கலைகள், நாடகம்,தெருக்கூத்து  , பரதம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடத்டப்படுகிறது.கலத்துறையைச் சேர்ந்த கலைஞர்களுக்கு கலைமாமணி என்ற சிறப்பு விருதும் வழங்கப்பட்டு வருகிறது.இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் இவ்விருதினைப் பெற்றுள்ளனர்.

நவிவுற்ற கலைஞர்களுக்கு மாத உதவித் தொகை, நலிவுற்ற கலைஞர்களின் குடும்பத்தினருக்கு மாத உதவித் தொகை போன்ற பல திட்டங்கள் மூலம் கலைஞர்களுக்கு உதவி அளிக்கப்பட்டு வருகிறது.

தவிர்த்து, கலைஞர்கள் வெளியூர்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்தச் சென்றால், அவர்கள் ரயிலில் பயணம் செய்ய ரயில் கட்டணச் சலுகைப் பெற ரயில்வேக்கு பரிந்துரை செய்கிறது.

வெளிமாநிலங்களிலிருந்து கலைஞர்களை வரவழைத்து அம்மாநில நிகழ்ச்சிகளையும், நம் மாநிலக் கலைஞர்கள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி நம் நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது.

சிறந்த கலாச்சார நிறுவனங்கள் என 27 நிறுவனங்களுக்கும், சிறந்த நாடகக் குழுவென 18 குழுக்களுக்கும் கேடயம் அளித்து கௌரவித்துள்ளது

சில அரசு கலாச்சார நிகழ்ச்சிகளை பொறுப்பேற்று நடத்துகிறது.

தமிழக அரசின் மூலம் அறிவிக்கப்படும் தலைவர், செயலாளர்கள் இம்மன்றத்தின் செயல்பாடுகளைக் கவனிக்கின்றனர்.இவர்கள் பதவிக் காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

தற்போது இம்மன்றம் செயல்பட்டுவரும் முகவரி

"பொன்னி"
31, குமாரசுவாமி ராஜா சாலை
சென்னை-600028

Sunday, April 17, 2016

33 - இன்றைய நாடகங்களின் நிலை



சினிமா, தொலைக்காட்சி ஆகியவை மக்களை ஈர்த்துள்ள அளவிற்கு  இன்று, நாடகங்கள் மக்களை ஈர்க்கவில்லை.

முழுநேர நாடகக் குழுக்கள் நாடகத்தை நம்பி வாழ முடியாத நிலை.அமெச்சூர் நாடகக் குழுக்கள்தான் இன்று நாடகங்கள் நசிந்துவிடாமல் காத்து வருகின்றன என்றால் மிகையில்லை.

ந.முத்துசாமி, கூத்துப்பட்டறை என்ற அமைப்பை நிறுவி முழு நேர கலைஞர்களை தயார் செய்து வருகிறார்.உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நடிகர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.ஒரளவு வெற்றியுடன் இந்த மைப்பு செயல் பட்டு வருகிறது

நாற்காலிக்காரர், உந்திச்சுழி, நிரபராதிகளின் காலம், கடைசி ஐந்து வினாடிகள் ஆகியவை இவர்கள் தயாரிப்பில் வந்த நிகழ்ச்சிகள் ஆகும்.

இதே போன்று ஞாநி அவர்களின் "பரிக்க்ஷா" குழுவினரும் நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றனர்.வீதி என்ற நாடகக் குழுவும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.

இவை, சபா நாடகங்களுக்கு மாற்றாக இலக்கிய உணர்வு கொண்ட நாடகங்களை நடத்தி வருகின்றன.

இதே முறையில், மதுரையில், "நிஜ நாடக இயக்கம்", திருச்சியில் நாடக சங்கம், பாண்டிச்செரியில் , "கூட்டுக்குரல்கள்", ஆழி நாடகக் குழு, தன்னானே குழு, திருவண்ணாமலையில் "தீட்சண்யா", சென்னையில் "ஆடுகளம்" ஐக்கியா" "பல்கலை அரங்கம்", தில்லியில் "யதார்த்தா". ஆகிய குழுக்கள் நாடக இயக்கத்தை உருவாக்குவதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தஞ்சை தமிழ்ப்பல்கலைககழகம் மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக் கழகங்களில் நாடகத்துறை அமைக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடகத்திற்கான மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.பேராசிரியர் ராமானுஜம், எஸ்.பி.ஸ்ரீனிவாசன் ஆகியோரின் பங்கு போற்றற்குரியதாகும்.

இனி நாடகத்தின் நிலை என்ன?

நாடகம் என்பது சிறு சிறு துகளாக மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த வடிவம்.ஆகவேதான் உலகம் ஒரு நாடக மேடை...அதில் நாமெல்லோரும் நடிகர்கள் என்றனர்.

இன்று சினிமா, தொலைக்காட்சி ஆகியவை அசுர வலிமையுடன் ஒரு சேரப் பலரைச் சென்றடையும்.ஆனால், நாடகம் மட்டுமே ஒரு யதார்த்தத்தை..ஒரு கனவை, நாம் இழந்து போன கணங்களை நம் முன்னே நிறுத்துகிறது எனலாம்.எந்திரமயமாக மாறிக்கொண்டிருக்கும் உலகம் மனிதனின் கற்பனைகள், படைப்புகள் ஆகியவற்றை நசுக்கிக் கொண்டிருக்கிறது.

நாடகம் ஒருவனின் கற்பனைகளை மீட்டெடுக்கும்/
ஒரு கவிதையை அவன் வசப்படுத்தும்
அவன் வாழ்க்கையை...இன்னும் அதிகக் கற்பனையுடன்..இன்னமும் அதிக கற்பனையுடன் ...இன்னமும் அதிக படைப்பு மனசுடன் அவனை எதிர் கொள்ள வைக்கும்.

ஆரோக்கியமான கலை வளர்ச்சிக்கு பொறுப்பேற்று, ஒரு அரசு முயன்றால்தான் நாடகங்கள் மீண்டும் மறுமலர்ச்சி அடையும்.
நாடகங்கள் சிறப்புடன் இயங்க....பாடத்திட்டத்தில்...நாடகங்களையும் ஒரு சிறப்புப் பாடமாக ஆக்க வேண்டும்.

ஊடகங்கள் நாடக வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

ஒருகாலகட்டத்தில் அனைத்து தினசரிகளும், பத்திரிகைகளும், புதிதாக அரங்கேறும் நாடகங்களை விமரிசித்தன. அவற்றைப் பார்த்து, நாடகங்களுக்கான ஆத்ரவும் பெருகியது.
 உதாரணமாக    ஆனந்தவிகடனில் வீயெஸ்வி விமரிசனம் வந்தால் அந்நாடகம் நூறு முறை அரங்கேறும் வாய்ப்பைப் பெற்றன.அதேபோல  ஹிந்து, எக்ஸ்பிரஸ், தினமணி ஆகியவையும் தொடர்ந்து விமரிசனங்கள் வெளியிட்டன.ஆனால் அப்பணியை ஹிந்து பத்திரிகையைத் தவிர வேறு யாரும் செய்வதில்லை.


மீண்டும் நாடகங்கள் தழைக்க ஊடகங்கள் ஒத்துழைக்க வேண்டும்

சமண...புத்தகாலத்தில் நாடகங்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி திரும்ப வேண்டாம்.

நாடகத்தை ஆதரிப்போம்///நாடகத்தைப் போற்றுவோம்

வாழ்க நாடகக் கலை
வளர்க நாடகங்கள்

Wednesday, April 13, 2016

29 - எனது சௌம்யா நாடகக் குழு

                                             

                                                   (நூல் வேலி நாடகத்தில் எங்கள் நடிகர்கள்)


பள்ளியில் படிக்குக் காலத்திலேயே நாடகத்துறையில் பேரார்வம் கொண்டிருந்த நான், எனது பத்தாவது வயதில் "பிரேமாவின் சபதம்" என்ற நாடகத்தில் பிரேமா வாக நடித்தேன்.இதுதான் எனது முதல் நாடகப் பிரவேசம்.

பின்னர், வீட்டுத் திண்ணையில் அப்பாவின் வேட்டியை திரையாக்கி, வீரபாண்டிய கட்டபொம்மனாக முழங்கினேன்.பள்ளி ஆண்டு விழாவில், "ராஜ ராஜ சோழன்" நாடகத்தில் நகைச்சுவைப் புலவர் "மேதீனிராயரா"க நடித்தேன்.

1967ல் யங்க்ஸ்டர்ஸ் கல்சுரல் அஸோசியேஷன்ஸ்  என்ற சங்கத்தை நண்பர்களுடன் துவக்கி, நான், விசு, மௌலி ஆகியோர் ரத்தபாசம், லவ் ஈஸ் பிளைண்ட்" (மௌலி எழுதிய முதல் நாடகம்) ஆகிய நாடகங்களைப் போட்டோம்.

1973ல் அம்பத்தூர் கல்சுரல் அகடெமி என்ற சபாவைத் தொடங்கி, நான்கு ஆண்டுகள், அதன் அங்கத்தினர்களுக்காக பல பிரபல நடிகர்களின் நாடகங்களைப் போட்டேன்.

1979ல் பிரபல நடிகர் அமரர் எம்.கே.ராதா, குத்துவிளக்கு ஏற்ற சௌம்யா நாடகக் குழுவைத் துவக்கினேன்.

எனது குழுவிற்கு என்னைத் தவிர்த்து, கே.கே.ராமன், பரத், வெங்கட் ஆகியோர் நாடகங்களை எழுதித்தந்தனர்.

இதுவரை 22 நாடகங்களை எனது குழு நடத்தியுள்ளது எங்களது நாடகங்கள் சில..

யாரைத்தான் கொல்லுவதோ? (கே.கே.ராமன்) புதியதோர் உலகம் செய்வோம், நெஞ்சங்கள் வாழ்தத்ட்டும் (பரத்), குடும்பம் ஒரு சிலம்பம் (வெங்கட்)

நான் எழுதிய சில நாடகங்கள், காயத்ரி மந்திரம்,பத்மவியூகம், சொல்லக் கொதிக்குது நெஞ்சம், மாண்புமிகு நந்திவர்மன்< பாரதரத்னா" நூல்வேலி, காத்தாடி, என்றும் அன்புடன்.எனது மழையுதிர்காலம் என்ற நாடகத்தில், மூன்றே மூன்று பாத்திரங்கள்.அத்துடம் மழையும் ஒரு பாத்திரமாகவே வரும்.

பல விருதுகளை எனது நாடகங்கள் பெற்றுத் தந்திருந்தாலும்.....சிறந்த நாடகமாகக் கோடை நாடக விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல்லக் கொதிக்குது நெஞ்சம் பெற்ற விருதையும், இலக்கியச் சிந்தனை அமைப்பினர் சிறந்த நாடகம் என எனது "பாரத ரத்னா" நாடகத்தையும் தேர்ந்தெடுத்ததையும் எனது வாழ்நாளில் மறக்கமுடியாது.

என் குழுவினரைத் தவிர்த்து, கோவை பத்து, அமிர்தம் கோபாலின் கீதாஞ்சலி ஆகிய குழுவினருக்கு நாடகம் எழுதியுள்ளேன்.

எனது நாடகங்களில், மணிபாரதி, ஒருவிரல் கிருஷ்ணா ராவ், ஓமக்குச்சி நரசிம்மன், ராம்கி, பி.டி.ரமேஷ், குட்டி பத்மினி, கமலா காமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.




30 - "குட ந்தை மாலி" என்னும் சாதனையாளர்




என்.மகாலிங்கம் என்ற குடந்தை மாலி 58ஆண்டுகளுக்குமுன் 1959ல் துர்கா டிரமாடிக் அசோசியேஷன்ஸ் ஆரம்பித்தார்.பின்னர் அக்குழு நாடகமித்ரா என்று பெயர் மாறியது.அந்தக் குழு இன்று மாலிஸ்டேஜ் என்ற பெயரில் நாடகங்களை நடத்தி வருகிறது.மகாலிங்கத்தை, குடந்தை மாலி என்று ஆக்கியவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.ஆவார்

இதுவரை இக்குழு 34 நாடகங்களை நடத்தியுள்ளது.அவற்றுள் பல 100 காட்சிகளைத் தாண்டிய வெற்றி நாடகங்கள்.20 நாடகங்களுக்கான கதை, வசனம், இயக்கம் மாலியினுடையது..மீதம் 14 நாடகங்கள் பிறர் எழுதியது.

பிரபல எழுத்தாளர்களான நா.பார்த்தசாரதியின் "குறிஞ்சி மலர்", ஆர்.சூடாமணியின் ஆழ்கடல்,திருப்பூர் கிருஷ்ணனின் பொய் சொல்லும் தேவதைகள், ஷ்யாமளாராவின் மன்னிக்க வேண்டுகிறேன் ஆகியவற்றை நாடகமாக்கிய பெருமை மாலிக்கு உண்டு

இவர்களைத் தவிர்த்து, சௌந்தர்யன்,சுந்தர்,நாணு, மெரினா, மணிமோகன் ஆகியோர் இவருக்கான நாடகங்களை எழுதியுள்ளனர்

திரைப்பட நடிகை சுந்தரி பாய், ஜான்சி ராணி, திரிசக்தி சுந்தரராமன்,நவாப் கோவிந்தராஜன் ஆகியோர் இவர் குழுவில் நடித்துள்ள சில நடிகர்கள்.

இவரது "ஞானபீடம்" மிகவும் புகழ் பெற்ற நாடகம் .115 முறைகளுக்கு மேல் மேடையேறியுள்ள இந்நாடகம், இன்றும் நடைபெற்று வருகிறது.

ஆனந்தவிகடன் வெள்ளிவிழா ஆண்டில் பரிசு பெற்ற ஏ.கே.பட்டுசாமியின் கடவுள் எங்கே? என்ற சற்றே சர்ச்சைக்குரிய கதையை அந்த நாட்களிலேயே மேடையேற்றியவர் இவர்.

அன்னை சாரதா தேவியின் 150ஆம் பிறந்த நாள் விழாவில் அவரது வாழ்க்கையை  "அன்னை சாரதா தேவி" என்ற பெயரில் நாடகமாக்கினார்.நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் அந்நாடகத்தை இயக்கினார்.

இவரது சில நாடகங்கள்..."மாப்பிள்ளை முறுக்கு, சங்கல்பம்,கடலை சேரும் நதிகள், கோபுரம் தாங்கும் பொம்மைகள் (இந்நாட்கம் 350 முறை நடைபெற்றுள்ளது),நம்மவர்கள், ஆத்ம விசாரணை,நிதர்சனம், சம்மதம் ஆகும்

மாலி தமிழ் நாடக உலகில் ஒரு சாதனையாளர் என்று சொல்லலாம்.இவருக்கு 20க்கும் மேற்பட்ட விருதுகளை சபாக்கள் வழங்கியுள்ளன.

31 -ஷ்ரத்தா
-----------------

                           
2010 ஆம் ஆண்டு டி.டி.சுந்தரராஜன்,சிவாஜி சதுர்வேதி, பிரேமா சதாசிவம் ஆகியோர் ஷ்ரத்தா என்ற குழுவினை ஆரம்பித்து...பிரம்மாண்டமான நாடகங்களை நடத்தி வருகின்றனர்.மூன்று மாதங்களுக்கு ஒரு நாடகம்.

இவர்களுக்காக விவேக் ஷங்கர் எழுதிய தனுஷ்கோடி நாடகத்தில், மழை பொழிவதை...லாரிகளில் தண்ணீர் வரவழைத்து...சுழற்சி முறையில் மேடையில் மழையைக் காட்டினர்.

பின்னர், வாத வீரான் நாடகத்தில்...பாதாளச் சிறையைக் காட்டியதுடன் நில்லாது, மேடையிலேயே குதிரையைக் கொணர்ந்து காட்டினர்.கன்னையா காலத்திற்குப் பிறகு விலங்கு ஒன்றை மேடையில் காட்டியது இவர்கள் மட்டுமே எனலாம். இந்நாடகம் பற்றி ஒரு பத்திரிகை தனது விமரிசனத்தில் " அண்மைக்காலத்தில் இது போன்ற ஒரு நாடகத்தை கண்டிருக்கமுடியாது,நாடகங்கள் மறுமலர்ச்சிக்கு இந்நாடகம் ஒரு படிகல்லாய் அமையும் " என்றுள்ளது.

ஆனந்த ராகவ் இவர்களுக்காக எழுதிய நாடகங்களில் சில தூஸ்ரா மற்றும் சதுரங்கம். சதுரங்கம் என்ற நாடகத்தில் மிசோராம் பகுதி காட்டு எல்லையை தத்ரூபமாகக் காட்டினர்

ஸ்ரீவத்சன் எழுதிய நாடகங்கள்  வலை,ஹனுமான், நல்லதோர் வீணை

இயக்குநர் சிகரத்தின் "இடியுடன் கூடிய அன்பு மழை"யும் இவர்கள் அரங்கேற்றிய நாடகங்கள்.

விஜய் டெண்டூல்கரின் "bobbychi ghostha' வின் தமிழாக்கமான பாரதி இவர்கள் நாடகங்களில் மிகச்சிறந்த நாடகங்களில் ஒன்று எனலாம்.
வருடங்களில், 20 நாடகங்கள்  11 எழுத்தாளர்கள் இவர்களது சாதனை.

Shraddha's focus has been two aspects - quqlity and originality. இதுவே இவர்கள் தாரக மந்திரம் எனலாம்.

இவர்கள் குழுவில் டெக்னிகல் அட்வைசராய் இருக்கும் திரு ஜி.கிருஷ்ணமூர்த்தியின் பணி அளப்பரியது எனலாம்.

இவர்கள் நாடகங்களைக் காண்பவர்கள்....தமிழ்மேடை நாடகங்களுக்கு அழிவு வரவே வராது என்று கண்டிப்பாகச் சொல்வார்கள்.

மிகுந்த பொருட்செலவில்...நாடக முன்னேற்றம் ஒன்றே  குறிக்கோள் என்று பணியாற்றும் இக்குழுவைச் சேர்ந்த அனைவரும் பாராட்டுதலுக்குரியவர்கள்

  

Sunday, April 10, 2016

28 - "நல்லி" குப்புசாமி செட்டியார்

                               


சென்ற நூற்றாண்டின் பின்பாதி தமிழ் நாடகங்களின் பொற்காலம் என முன்னரே குறிப்பிட்டிருந்தேன்.

1990 களுக்குப் பிறகு....பல சபாக்கள் மூடப்பட்டன. நாடகங்களுக்கு வரும் மக்கள் குறைந்தனர்.சபாக்களில் போதுமான அங்கத்தினர்கள் இல்லாததால், பொருள் வரவு பாதிக்கப்பட, நஷ்டத்தில் இயங்க முடியாது என பல சபாக்கள் மூடப்பட்டன.

இதற்கெல்லாம் காரணம்...

பல தனியார் தொலைக்காட்சி சேனல்கள் உருவானதே! இவை பல நாடகங்களை ஒலி/ஒளி பரப்பின.திரைப்படங்களை ஒலி/ஒளி பரப்பின.பணம் செலவு செய்து வெளியே சென்று நாடகங்களைப் பார்ப்பதைவிட...மக்கள் தங்கள் வீட்டின் வரவேற்பறையிலேயே செலவு செய்யாமல் நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆரம்பித்தனர்.அரங்குகளில் நாடகங்கள் குறைந்தன.சபாக்கள் மூடப்பட்டன.பல நாடகக் குழுக்கள் காணாமல் போனது.முன்னர், சாதாரண குழுக்களும் நூறு முறைகளுக்கு மேல் நாடகம் போட்ட நிலை மாறி...பிரபல குழுக்கள் நாடகங்கள் போடவும் திணறின.

இப்படிப்பட்ட நிலை தொடர்ந்தாலும்....நாடகக் கலை அழியவில்லை.முக்கியக் காரணம் அமெச்சூர் நாடகக் குழுவினர் என உறுதியாகச் சொல்லலாம்.இன்றும் சில சபாக்கள் நாடகங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

நாடகங்கள் அழியாமல் இருக்க இன்று முக்கியக் காரணங்களில் ஒன்று.....ஸ்பான்சர்ஸ்....ஆம்....நாடகங்கள் நடத்துவதற்கான செலவுகளை ஏற்பவர்கள்,சில தொழில் நிறுவனங்கள் இந்த நற்பணியாற்றி வருகின்றன.அந்த நாட்களில் அரசர்கள் கலைஞர்களை ஆதரித்தனர்....இந்நாளில் அநத வேலையை ஸ்பான்சர்ஸ் செய்கிறார்கள் என்று சொன்னால் மிகையல்ல

அப்படி, நாடகங்கள் நடக்க உதவி வருகிறவர்களில், "நல்லி" குப்புசாமி செட்டியாரின் பங்கு அளப்பரியது எனலாம்.

1940 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் நாள் பிறந்த குப்புசாமி செட்டியார்....1958ல் அவரது தாத்தாவின் மறைவிற்குப் பின் அவர் செய்து வந்த ஜவுளித்துறையின் பொறுப்பை ஏற்றார்.வெறும் 200 சதுர அடியில் இருந்த வியாபாரம் குப்புசாமி செட்டியாரின் கடின உழைப்பால் 30000 சதுர அடியில் இயங்கும் நிறுவனமானது. இன்று உலகம் முழுதும் "நல்லி" சில்க்ஸ் பிரபலம்.

இவர், இன்று இசை, நாடகங்களுக்கு உதவுவதுடன்..கல்விக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உதவி வருகிறார்,

ஸ்ரீ கிருஷ்ண கான சபா, ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா, பிரம்ம கான சபா,பைரவி கான சபா, முத்ரா, மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், சென்னை கல்சுரல் அகடெமி ஆகிய சபாக்களின் தலைவர் பொறுப்பை எற்றுள்ளார்.

தவிர்த்து, மெட்ராஸ் ஃபிலிம் சொசைட்டியின் உப தலைவர்

பாரதீய வித்யா பவன், சென்னைக் கிளையில் நிர்வாகக்குழுவில் உள்ளார்.

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் வருடந்தோறும் நடத்தும் கோடை நாடக விழாவில் இவரது பங்கு அளப்பரியது.

தமிழ், தெலுங்கு,ஆங்கிலம், ஹிந்தி மொழிகள் அறிந்த நல்லி செட்டியார் பல நூல்களை எழுதியுள்ளார்.அவற்றில் இரு நூல்களுக்கு தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது,

தமிழக அரசின் கலைமாமணி விருதும், மத்திய அரசின் பத்மஸ்ரீ தேசிய விருதும் பெற்றுள்ளார்

ஈத லிசைப்பட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு

(கொடைத்தன்மையும், குன்றாத புகழும் தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவும் இல்லை)

என்ற குறளுக்கு ஏற்ப நடந்து வருபவர் நல்லி குப்புசுவாமி செட்டியார் எனலாம் 

Saturday, April 9, 2016

27 - நாடக சபாக்கள்



கார்த்திக் ராஜகோபால்

நாடகக் குழுக்கள் நாடகம் நடத்துவதற்கான அரங்கினைத் தேர்ந்தெடுத்து, அவர்களே டிக்கெட்டுகளை விற்று....என அனைத்து பொறுப்புகளையும் ஏற்று வந்த நிலைமை 1950களில் மாறத் தொடங்கியது எனலாம்.

சென்னையிலும், பிற நகரங்களிலும் சபாக்கள் தோன்ற ஆரம்பித்தன.இவற்றின் நோக்கம் இயல், இசை,நாடகங்களை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது.

இந்த சபாக்கள் அங்கத்தினர்களைச் சேர்த்தனர்.அந்த அங்கத்தினர்களுக்கு மாதா மாதம்  இசை, நாடகம் என இரண்டு மூன்று நிகழ்ச்சிகளைக் காண ஏற்பாடு செய்தனர்.
நாடகங்களை நடத்தும் குழுக்களுக்கு, அவர்களது படைப்புகள் மக்களை அடைய சந்தர்ப்பங்களை உருவாக்கித் தந்தனர்.இந்த நிலை 1990வரை நீடித்தது எனலாம்.அந்தக் காலம் தமிழ் நாடக உலகின் பொற்காலம் ஆகும்.

சென்னையில் மட்டும் 130 சபாக்களும், தமிழ்நாடு முழுதும் முக்கிய நகரங்களில் சபாக்கள், தமிழ்ச் சங்கங்கள் உருவாகின.தவிர்த்து பிற மாநிலங்களிலிருந்தும் தமிழ் நாடகங்களுக்கு சந்தர்ப்பங்கள் வந்தன.

சாதாரண அமெச்சூர் குழுவினரின் படைப்புகளும் நூறு முறைகளுக்குமேல் நடந்தன.

இப்படிப்பட்ட சபாக்கள் பற்றி எழுதுகையில்...கடைசிவரை நாடகங்களே தன் மூச்சு என வாழ்ந்த கார்த்திக் ராஜகோபாலை மறந்துவிட முடியாது.இவரின் நாடகத்தீற்கான சேவையை அளவிட முடியாது.

மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் பணி புரிந்து வந்த ராஜகோபால் தன் நண்பர்களுடன் சேர்ந்து, 1951ல் மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற சபாவினைத் தோட்ங்கி 23 ஆண்டுகள் சேவை புரிந்தார்.பின்னர், தவிர்க்க முடியா காரணங்களால் அச்சபாவிலிருந்து விலகி 1975ஆம் ஆண்டு "கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ்" என்ற சபாவை ஆரம்பித்தார்.இவருக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள்...எம்.ஆர்.கிருஷணமூர்த்தி, ராமானுஜம், சங்கு, ஏ.வி.ஜெயராம் ஆகியோர்.

சென்னை நகரின் முன்னணி சபாக்களில் ஒன்றாக மாறியது கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ்.

நாடகக் குழுக்கள் , இந்த சபாவில் தங்கள் நாடகங்கள் அரங்கேறுவதையே விரும்பின.நாடகத்துறைக்கு ராஜகோபால் அளித்து வந்த ஊக்கத்தால் பல பிரபலங்கள் பின்னாளில் திரைப்படத்திலும் ஜொலித்தனர் எனலாம்.அவர்களில் சிலர், சோ, பாலசந்தர், விசு, மௌலி, கோமல் சுவாமினாதன், கிரேசி மோகன், எஸ்,வி. சேகர், காத்தாடி ராமமூர்த்தி.

1990ஆம் ஆண்டிலிருந்து கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-மே மாதங்களில் கோடை நாடகவிழாவினை நடத்தி...பல பரிசுகளை நாடகங்களுக்கு வழங்கி வருகின்றனர்.


தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார் ராஜகோபால்.எங்களது சௌம்யா குழுவினர் சார்பில், அவருக்கு 1989ஆம் ஆன்டு..கே.பாலசந்தர் தலைமையில் நாடகப்பேரரசு என்ற பட்டத்தை அளித்த பேறு பெற்றோம்.

2014 ஆம் ஆண்டு தனது 91ஆவது வயதில் ராஜகோபால் நம்மை விட்டு மறைந்தார்.

இன்றும் அவர் விட்டுச் சென்ற பணியினை ...திரு.சபாரத்தினம்..தலைமையில், ஏ.வி.எஸ்.ராஜா, ஏ.வி.ஜெயராம், ராஜகோபால் சேகர், வெங்கடசுப்ரமணியம் ஆகியோர் தங்களது மற்ற நண்பர்களுடன் சேர்ந்து தொடர்ந்து வருகின்றனர்.

நாரத கான சபா

சென்னை சாபாக்களில் மற்ரொரு முக்கிய சபா நாரத கான சபாவாகும்.

1958ல் ஆரம்பித்த இந்த சபா, முதலில், மைலாப்பூர் வி.எம்.தெருவில் ஒரு தற்கால அரங்கிலும் பின்னர் மியூசிக் அகடெமி அரங்கிலும் அங்கத்தினர்களுக்காக தங்கள் நிகழ்ச்சிகளை நடத்தினர்.

பின்னர் 1972ல் ஆள்வார்பேட்டையில் இடம் வாங்கி, தங்களுக்கான குளிர்பதன அரங்கை 1988ல் கட்டி முடித்தனர்.அக்காலகட்டத்தில் செயலர் ஆர்.கிருஷ்ணசுவாமியின் பங்கு அளவிடமுடியாது.இன்று...பல கலாசார விழாக்களும், நிறுவனங்களின்  பங்குதாரர்களுக்கான நிகழ்வுகளும், உபந்யாசங்களும் இந்த அரங்கில் நடைபெறுகின்றன.சென்னையின் பெயர் சொன்னால் உடனே நினைவிற்கு வரும் கட்டிடங்களில் இந்த அரங்கமும் ஒன்றாக ஆகிப்போனது.

இயல், இசை, நாடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த சபா இயங்கி வருகிறது.

இந்த அரங்கிற்கு சத்குரு ஞானானந்த ஹால் என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது

ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா
-------------------------------------------------------

இந்திய கலை ,கலாச்சாரததைப் போற்றிப் பேணவும், பிரபலப்படுத்தவும் மணி திருமலாச்சாரியார் என்ற கலை ஆர்வலர் 1896ல் சங்கீத வித்வத் சபையை ஆரம்பித்தார்.

இச்சபை, 1990ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோயிலில் பள்ளி கொண்டுள்ல பார்த்தசாரதி பெருமாள் பெயரில் பதிவு செய்யப்பட்டது.

முதன் முதலில் தோன்றிய சபா இதுவே எனலாம்.மைசூர் திவாங்களும், திருவாங்கூர் அரசவையைச் சேர்ந்தோரும், உயர் நீதி மன்ற நீதிபதிகளும் இதன் உறுப்பினர்களாக இருந்தார்கள். ஜி.என்.பாலசுப்பிரமணியனின் தந்தை நாராயனசுவாமி முதல் செயலாளராக இருந்தார்.

கர்னாடக சங்கீதம் மட்டுமன்றி ஹரிகதை,நாடகம், நாட்டியம் ,ஆன்மீக உபந்நியாசங்கள் நடந்தன.

நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, எஸ்.வி.ஸகஸ்ரநாமம்,சிவாஜி கணேசன், ஆர்.எஸ்.மனோகர் ஆகியோர் நாடகங்கள் நடத்தப்பட்டன.

திருமதி ஜெயலலிதாவின் நாட்டிய நாடகம் "காவிரி தந்த கலைச்செல்வி" முதலில் இந்த சபாவில்தான் நடந்தது.

இன்றும் பல நாடகக் குழுக்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோருக்கு வாய்ப்பளித்து வருகின்றனர்.

திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறந்த பணியாற்றி வருகிறார்.

பிரம்ம கான சபா
--------------------------------

தொழிலதிபர்  சித்ரா நாராயணசாமியை தலைவராகக் கொண்டு 1969ல் ஆரம்பிக்கப் பட்டது இந்த சபா.திருவாளர்கள், முத்து, சேதுராமன் ஆகியோர்கள் அன்றைய செயலாளர்கள்.இயல், இசை, நாடகம் ஆகிய
வற்றிற்கு இன்றளவும் ஆதரவளித்து வரும் இந்தசபாவின்  இன்றைய காரியதரிசியாக ரவிசந்திரன் திறம்படச் செயல்பட்டு வருகிறார்.இன்றைய தலைவர் நல்லி குப்புசாமி செட்டியார் ஆவார்
மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்
-----------------------------------------------------

1951ல் ஆரம்பித்தது இந்த சபா. இந்த சபாவிலும் நாடகங்கள் அரங்கேற்ற குழுக்கள் விரும்பின.திரு ராஜகோபால், வெங்கட்ராமன் ஆகியோர் தலைமையில்  நாடகங்கள் நடந்தன.
இன்றும் நாடக விழாக்கள் மூலமும், அங்கத்தினர் மாத நிகழ்ச்சியாகவும் நாடகத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
திரு வரதராஜன், பத்மனாபன் ஆகியோர் இன்றைய செயலாளர்கள் ஆவர்.


ஸ்ரீகிருஷ்ண கான சபா

1953ல் திரு யக்னராமன் முயற்சியில் தியாகராய நகர் கிரிஃப்ஃபித் தெருவில் (இன்று மகராஜபுரம் சந்தானம் சாலை) உருவானது.தொடர்ந்து அங்கத்தினர்களுக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.இன்றைய செயலர் ஒய்.பிரபு ஆவார்

ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா

1945ல் தியாகராய நகரில், ஜி.என்.செட்டி சாலையில் துவங்கப் பட்டது இந்த சபா.வாணிமகால் என அனைவராலும் அழைக்கப்பட்டது.இச்சபா ஆரம்பிக்க மூல காரணமாகவும், உதவியாகவும் இருந்தவர் திரைப்பட நடிகர் அமரர் ஸ்ரீ சி.வி.நாகையா ஆவார்.இன்றும் திரு டெக்கான் கிருஷ்ணமூர்த்தி, திரு எஸ்,வி.எஸ்.மணி ஆகியோர் சாபவை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்

ஆர்.ஆர்.சபா- சென்னை
----------------------------------------------

சென்னை மைலாப்பூரில் . ஏ.கே.ராமசந்திர ஐயர், லோகநாத நுதலியார், நடேச ஐயர் ஆகியோரால் 1929ல் துவக்கப்பட்டது ஆர்.ஆர்.சபா என அனைவராலும் அறியப்பட்ட ரசிக ரஞ்சனி சபா.இயல், இசை, நாடகம் என அனைத்துத் துறையினருக்கும் வாய்ப்பளித்து கலைச்செவையை இன்றும் தொடர்ந்து வருகிறது

முத்ரா
----------------

பாஸ்கர் தன்மனைவி திருமதி ராதா பாஸ்கருடன் இணைந்து முத்ரா என்ற சபாவை 1995ல் ஆரம்பித்தனர். இயல், இசை,நாடகம் என அனைத்து கலைஞர்களுக்கும் சந்தர்ப்பம் அளித்து வருகின்றனர்.இசை விழா, நாடக விழா வும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.

இவற்ரை தவிர்த்து, ரிகார்டிங்,பிரிண்டிங், ஸமுத்ரா என்ற பத்திரிகை, வெப் டெலிகாஸ்டிங் என அனைத்துத் துரையிலும் பாஸ்கர் மாஸ்டராகத் திகழ்கிறார் எனலாம்

பாரத் கலாச்சார்
-----------------------------

திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி வழிகாட்டலின் படி, ஒய்.ஜி.மகேந்திரன், திருமதி சுதா மகேந்திரன் பாரத்கலாச்சார் என்ற சாபா மூலம் கலை நிகழ்ச்சிகளை அளித்து வருகின்றனர்.இதில், ஒய்.ஜி.மதுவந்தியின் பங்கும் குறிப்பிடத்தக்கது.

குரோம்பேட்டை கல்சுரல் அகடெமி
----------------------------------------------------------------

சென்னையில் புறநகர் பகுதியாக இருந்த குரோம்பேட்டையில் திரு சிவகுமார் தன் நண்பர்களுடன் சேர்ந்து குரோம்பேட்டை கல்சுரல் அகடெமி என்ற சாபவை ஆரம்பித்தனர்.நிகழ்ச்சிகளை நடத்த கூடவே "காமாக்ஷி கலை அரங்கம்" என்ற அரங்கு/ கல்யாண மண்டபத்தையும் நிறுவினர்.கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக இயல், இசை, நாடக சேவையை அங்கத்தினர்களுக்குத் தந்து கொண்டிருக்கின்றனர்.
பாபு, வெங்கட்ராமன் இருவரும் இன்றைய முக்கிய நிர்வாகிகள் ஆவர்

சென்னை கல்சுரல் அகடெமி
-----------------------------------------------------
லயன் நடராஜன் வழிகாட்டலில், இச்சபா பல ஆண்டுகளாக நாடகங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

பொள்ளாச்சி தமிழ்ச் சங்கம்
--------------------------------------------------
தொழிலதிபரும் ஆன்மீகவாதியுமான பொள்ளாச்சி மகாலிங்கத்தின் ஆதரவுடன் பொள்ளாச்சி தமிழ்ச் சங்கம் 45 ஆண்டுகலூக்கு முன் தன் கலைச்சேவையைத் துவக்கியது.இன்றுவரை அநேக குழுக்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்கி வருகிறது .ஆரம்பநாள் ,முதல் இன்றுவரை தமிழ்ச் சங்கத்திற்கு தனது அயராத உழைப்பைத் த்ந்து கொண்டிருப்பவர் இராம.வெள்ளையப்பன் ஆவார்.இவரது சேவையைப் பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது அளித்து கௌரவித்துள்ளது

திருச்சி ரசிக ரஞ்சனி சபா
---------------------------------------------

1914ல் ஆரம்பிக்கப்பட்ட திருச்சி ரசிக ரஞ்சனி சபா, இன்றும் நாடகக் கலைஞர்களுக்கு ஆதரவு அளித்து நாடக நிகழ்ச்சிகளை அளித்து வருகிறது.இதன் நிறுவனர் நடேச ஐயர் ஆவார்.இன்று சேகர் கௌரவச் செயலாளராய் இர்டுந்து சபையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.


இந்த சபாக்களைத் தவிர்த்து, மதுரை தமிழ்ச் சங்கம், காலாசாகரம் ஹைதராபாத், வாசி ஃபைன் ஆர்ட்ஸ் மும்பை, ஷண்முகானந்த சபா மும்பை, கல்கத்தா ஃபைன் ஆர்ட்ஸ், தில்லி தமிழ்ச் சங்கம், நாரதகான சபா கரூர் போன்றவையும் அவ்வப்போது நாடக நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்