Tuesday, March 29, 2016

22 - கிரேசி மோகன்

                       

நடிகர், நாடக எழுத்தாளர், திரைக்கதை வசனம் எழுதுபவர், நாடகத்தயாரிப்பாளர்...இப்படி பன்முகம் கொண்ட திரு ரங்காச்சாரி மோகன் ஒரு பொறியியல் பட்டதாரி.சுந்தரம் கிளேட்டனில் சில காலம் வேலைசெய்து வந்தார்.அத்தருணத்தில் கேபி அவரைத் திறமையைக் கண்டு திரையுலகிற்கு அழைக்க, மோகனால் வேலைப்பளு காரணமாக ஒப்புக் கொள்ள இயலவில்லை.

மோகன் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே...1972ஆம் ஆண்டு கல்லூரி விழாவிற்காக Great Bank Robbery என்ற நாடகம் எழுதினார்.அதற்காக சிறந்த எழுத்தாளர், சிறந்த நடிகருக்கான விருதை அன்று நாடகத்திற்கு வந்திருந்த கமல்ஹாசன் தர பெற்றுக் கொண்டார்.

பின்னர் தனது தம்பிக்காக ..பாலாஜி படித்த விவேகானந்தா கல்லூரி விழாவிற்காக நாடகங்களை எழுதிக் கொடுத்தார்.

1976ல் எஸ்.வி.சேகர் நாடகக் குழுவிற்காக, "கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்" என்ற நாடகம் எழுதினார்.நாடகத்தின் வெற்றியே பின்னாளில் கிரேசி என்ற சொல்லை அவர் பெயருக்கு முன்னால் சேர்த்தது.ஆம்..இனி அவர் கிரேஸி மோகன்.பின்னர் அவர் சேகரின் நாடகப்பிரியாவிற்காக "டெனண்ட்ஸ் கம்மேண்ட்மெண்ட்ஸ்"  எழுதினார்.
ஒன் மோர் எக்ஸார்சிஸ்ட் எழுதினார்.பின்னர் டிவி வரதராஜன்-சீனா குழுவிற்கு, 36 பீரங்கி லேன் நாடகமும், காத்தாடி ராமமூர்த்திக்கு அப்பா அம்மா அம்மம்மா போன்ற நாடகங்களை எழுதினார்.

1979ல் தான் ஒரு சொந்தக்குழுவை ஆரம்பித்து...இதுவரை 30க்கும் மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றினார்.இவரது நாடகங்கள் ஆயிரக்கணக்கான முறைகள் நடந்துள்ளன.இவரது நாடகங்களில் சாக்லேட் கிருஷ்ணா என்ற நாடகம் மட்டும் இதுவரை 900 முறைகள் நடந்துள்ளது.இவர் நாடகங்களில் இவரது தம்பி பாலாஜி, தொடர்ந்து மாது என்ற கதாநாயகன் பெயரிலேயே நடித்து வருவதால் மாது பாலாஜி ஆனார்.ரமேஷ் என்னும் நடிகர் அப்பா வேடத்திலேயே நடித்து வருவதால் அப்பா ரமேஷ் ஆனார், சுந்தரராஜன் என்பவர் பாட்டி வேடத்திலேயே நடிப்பதால் பாட்டி சுந்தர்ராஜன் ஆனார்.ஒருவர் நடிக்கும் பாத்திரம் அவர் பெயருடன் சேரும் பெருமையை இவரது நாடகத்தில் நடித்தவர்கள் பெற்றது...கிரேசியின் பாத்திர படைப்புகளுக்குக் கிடைத்த வெற்றி எனலாம்.

இவரது வெற்றி நாடகங்களில் சில..

அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும், மேரேஜ் மேட் இன் சலூன்,மாது பிளஸ் டூ, மாது மிரண்டால், மீசை ஆனாலும் மனைவி, கிரேசி கிஷ்கிந்தா, ஒரு பேபியின் டயரிக் குறிப்பு, ஜுராசிக் பேபி. இவரது சமீபத்திய நாடகம் "கூகுள் கடோத்கஜன்:

நாடகங்கள் நடத்திவந்த போதே, கிளேட்டன் வேலையை விட, மீண்டும் பாலசந்தர் அழைக்க இம்முறை இவரது மேரேஜ் மேட் இன் சலூன் நாடகத்தை இயக்குநர் சிகரம் திரைப்படமாக எடுத்தார்.

கமல்ஹாசனுடன் சேர்ந்து கிரேசி 'சதி லீலாவதி, மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், அபூர்வ சகோதரர்கள்,ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதியதுடன் சில வேடங்களில் நடிக்கவும் செய்தார்.

இதனிடையே 7 தொலைக்காட்சி நாடகங்களையும் எழுதினார்.

இவரது நாடகங்களை தொடர்ந்து மௌலி அவர்களின் சகோதரர் எஸ்.பி.காந்தன் இயக்கி வருகிறார்.இவரையும் கிரேசி "ஜெர்ரி" என்னும் திரைப்படத்தில் இயக்குநர ஆக்கினார்

இவரது நாடகங்கள் மூலம், மக்களை கவலைகள் மறந்து சிரிக்க வைப்பது கிரேசின் மாபெரும் சாதனை எனலாம்.
இவர் நாடக உலகில் பெற்ற வெற்றியைப் போல வேறு கலைஞர்கள் பெற்றிருப்பார்களா? என்பதற்கான பதில்...கன்டிப்பாக இல்லை என்பதாகவே இருக்கும்.

Sunday, March 27, 2016

21 - எஸ்.வி.சேகரும்...நாடகங்களும்

                 


எஸ்.வி.சேகரும்...நாடகங்களும்

இன்றைய காலகட்டத்தில் நகைச்சுவை நாடகங்கள் என்றாலே...எஸ்.வி.சேகரும்,கிரேசி மோகனும் தான்.

எஸ்.வி.சேகரின் நாடகங்களில், நகைச்சுவையும்...அந்தந்த நாளுக்கு ஏற்ப அரசியல் நையாண்டியும் இருக்கும்.இவரது குறிக்கோளே..நாடகம் நடக்கும் 100 மணித்துளிகளில் 200 சிரிப்புகள்.

இதனிடையே, பல சமூக சேவைகள், மக்கள் நலப் பணிகள் என சேகர் செய்து கொண்டிருந்தார்.யாருக்கும் பயப்படாது மனதில் தோன்றியதை அப்படியே சொல்லிவிடுவதுதான்..இவரின் பிளஸ் மற்றும் மைனஸ் பாயிண்டுகள். முதல் காரணமாகவே  அதிமுகவில் மைலாப்பூர் தொகுதியில் சட்டசபைக்கு வெற்றிகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இரண்டாவது காரணத்தாலேயே அதிமுக விலிருந்து வெளியேறினார்.

மெக்கானிக்கல் இஞ்சினீரிங் பட்டயப் படிப்பும், ஏர்கண்டிஷன் மற்றும் ரெஃப்ரிஜெரேஷன் பட்டய படிப்பும் முடித்த சேகர் பிரபல இசை மேதையான ஜி.ராமனாதனின் பேத்தி உமாவை மணந்தார்.

​1960 ல் இவரது நாடகப்பணி ஆரம்பமானது. 70 களில் தன தந்தை திரு எஸ் வி வெங்கடராமன் அவர்களின் கற்பகம் கலா மந்திர் நாடகக்குழுவில் மேடை நிர்வாகியாகவும்,ஸ்பெஷல் ஒலி அமைப்பாளராகவும் பணியாற்றினார். திரு வி.கோபாலகிருஷ்ணன் இவருக்கு பொட்டு வைத்து நடிகராக்கினார். 1973இல் தன் சொந்த நாடக்குழு 'நாடகப்ப்ரியா'' என்று ஆரம்பித்தார். இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் கிரேசி மோகன் ,கோபு பாபு, கிருஷ்ணகுமார் ,நிலா ஆகியோர்.

இவரது நாடகங்கள் பல வெளிநாடுகளிலும் நடந்துள்ளது. 1985 ஆம் ஆண்டு...காலை 7-47 முதல் இரவு 1-49 வரை இவரது நாடகங்கள் தொடர்ந்து சென்னையில் நடந்து, லிம்கா புக் ஆஃப் ரிகார்ட்ஸில் சாதனையாகியுள்ளது

மைலாப்பூர் அகடெமி. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இவரை சிறந்த நகைச்சுவை நடிகராகத் தேர்ந்தெடுத்துள்ளது. தமிழக அரசின் "கலைவாணர் விருதும்" கலைமாமணி விருதும் இவருக்குக் கிடைத்துள்ளது.தவிர்த்து, சென்னை சபாக்கள் பல இவருக்கு பலபட்டங்கள் அளித்து கௌரவித்துள்ளன.

​(2003) + ​2015ல் மத்திய அரசு சினிமா தணிக்கைக் குழுவில் உறுப்பினராக இவரை நியமித்துள்ளது.இவரது திறமையைப் பார்த்து கே.பாலசந்தர் , "வறுமையின் நிறம் சிவப்பு", "நினைத்தாலே இனிக்கும்" ஆகிய படங்களில் நடிக்க ​இவரை அறிமுகப்புடுத்தினார்..

சேகர் இதுவரை கிட்டத்தட்ட​95 படங்கள் நடித்துள்ளார். இவரது நாடகப்பிரியா நடத்தியுள்ள நாடகங்களில் சில...

கண்ணாமூச்சி, காதுல பூ, ஒன் மோர் எக்சார்சிட், காட்டுல மழை, 1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி, யாமிருக்க பயமேன், தத்துப்பிள்ளை. மகாபாரதத்தில் மங்காத்தா" வால் பையன், 'யாமிருக்க பயமேன், ​'​​​சிஎம்​'​ ஆ ​'​பிஎம்​'​ ஆ"
​இது வரை 24 நாடகங்களும் 6200 காட்சிகளும் நடத்தியுள்ளார்.​

இவருக்கான நாடகங்களை இவரைத் தவிர்த்து,  கே.கே.ராமன்​ சாரதி, வெங்கட், , ஆகியோர் எழுதியுள்ளனர்.

தொலைக்காட்சிக்கான இவரது நாடகங்கள் வண்ணக்கோலங்கள் பாகம் 1 ,பாகம்-2, நம் குடும்பம்​,டாக்சி டாக்சி ​ ஆகியவை.

சபாக்களின் வசூல் சக்கரவர்த்தியானவர் ​எஸ்.வி.​சேகர் என்பது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.



Saturday, March 26, 2016

20 - மௌலி அண்ட் ஃப்ரண்ட்ஸ்

                               

பிரபல புகழ் பெற்ற ஹரிகதா உபாசகர் திரு டி.எஸ்,பாலகிருஷ்ண சாஸ்திரிகளுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள்.

மகன்களில் மூத்தவரான சந்திரமௌலிக்கு, சிறு வயது முதலே கலை ஆர்வம் மேலிட...பள்ளியில் ஆண்டு விழா நாடகங்களில் நடித்து வந்தார்.அப்படி அவர் சிறு வயதில் நடித்த நாடகம், தமிழாசிரியர் திரு ஸ்ரீனிவாசன் பிள்ளை என்பவர் சொல்லித்தர..அரு.ராமநாதனின், "இராஜ ராஜ சோழன்' நாடகமும் ஒன்றாகும்.

பின்னர் நண்பர்கள் (என்னையும் சேர்த்து) , நடிகர் திலகத்திற்கு பத்மஸ்ரீ விருது கிடைத்த போது அம்பத்தூரில் பாராட்டு விழா நடத்தினோம். சிவாஜிகணேசன் முன்னிலையில் அன்று சந்திரமௌலி எழுதிய "காதலுக்குக் கண்ணில்லை" என்ற நகைச்சுவை நாடகத்தை நடத்தினோம்.சிவாஜிகணேசன் அவர்கள் நாடகத்தை மிகவும் ரசித்தார்.

அடுத்து சி.வி.ஸ்ரீதர் , டிகேஏஸ் நாடகக் குழுவிற்கு எழுதிய ரத்தபாசம்  நாடகத்தை அனுமதி பெற்று அம்பத்தூரில் நடத்தினோம்.அடுத்து மௌலியாய் மாறிய சந்திரமௌலி  எழுத "bon voyage" என்ற நகைச்சுவை நாடகத்தை வாணிமகாலில் நடத்தினோம்.அன்று அந்நாடகத்திற்குத் தலைமை தாங்கியவர் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் திரு ஏ.எல்.ஸ்ரீனிவாசன் அவர்கள்.மௌலியின் எழுத்தையும், நடிப்பையும் பாராட்டிய அவர், பின்னாளில் இவர் திரைப்படத்தில் பிரகாசிப்பார் என்றார்.அது உண்மையாகியது.

மௌலி, பி.டெக்., படிக்கும் போதே கல்லூரியிலும் பல நாடகங்கள் போட்டார்.பின்னர் ஒய் ஜி பி குழுவினருக்காக ஃபிளைட் 172, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா" பத்மவியூகம் ஆகிய நாடகங்களை எழுதிக் கொடுத்ததுடன் முக்கிய வேடம் எற்று நடித்தார்.நவரசா குழுவிற்காக நாகேஷ் நடிக்க "அந்தப்புரம்" நாடகம் எழுதினார்.

பின்னர் அக்குழுவிலிருந்து விலகி மௌலி அண்ட் ஃபிரண்ட்ஸ் என்ற குழுவை ஆரம்பித்து,"ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது" , "அம்மி மிதிக்க போலீஸ் வந்தது" ஆகிய நாடகங்களையும் அரங்கேற்றினார்.இவர் நாடகத்தில் நடித்தவர்களில் மணிமாலாவும் ஒருவர்.

பின்னர் வெள்ளித்திரை இவரை கைநீட்டி அழைக்க கை நிறைய காசு என்ற படம் வந்தது.பின்ன சிவாஜி நடித்த "ஹிட்லர் உமானாத" படத்திற்கு வசனம் எழுதினார். பின் தெலுங்கில் கிட்டத்தட்ட 32 படங்களை இயக்கினார்.

தமிழில் இவர்கள் வித்தியாசமானவர்கள்,அண்ணே அண்ணே,புல்லாங்குழல் அடுப்பூதுகிறது என படங்கள் தொடர்ந்தது.

கமலின் "பம்மல் கே.சம்பந்தம்" மற்றும் 'நள தமயந்தி" ஆகிய படங்களுக்கான திரைக்கதை, வசனம் இயக்கம் இவருடையதே

தொலைக்காட்சித் தொடரான, நாதஸ்வரம், குலதெய்வம் ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.

இவரது சகோதரர் திரு எஸ்.பி.காந்தன்..ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார்.கிரேசி மோகனின் நாடகங்களை இயக்கி வருகிறார்

Thursday, March 24, 2016

19- விசுவின் நாடகங்கள்

                         

எம் ஆர்,விஸ்வநாதன், எம்.ஆர்.ராஜாமணி, எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி,ஆகிய மூன்று சகோதரர்கள், பி.சந்திர மௌலி, கணேஷ், நான் ஆகிய அனைவரும் நண்பர்கள்.அம்பத்தூர்வாசிகள்.

 அனைவரும் ஒன்று சேர்ந்து, யங்க்ஸ்டர்ஸ் கல்சுரல் அகடெமி என்ற சபையை ஆரம்பித்தோம்..சிவாஜிகணேசன் பத்மஸ்ரீ விருது பெற்ற போது அவருக்கு பாராட்டுவிழா நடத்தினோம்.அதில், மௌலி முதன் முதலாக எழுதிய
காதலுக்கு கண்ணில்லை நாடகம் நடத்தினோம்.

பின், ரத்தபாசம் நாடகத்தை அனுமதி பெற்று வாங்கி  நடத்தினோம்

முதல் மூவர் தான் பின் திரைப்படத்திலும் பிரகாசித்த விசு, ராஜாமணி, கிஷ்மூ ஆவர்.

சந்திரமௌலி, மௌலி ஆகி நாடகம், திரைப்படம் என வெற்றிக் கொடி நாட்டினார்.

கணேஷ், பிரியதரிஷினி என்ற நாடகக் குழு ஆரம்பித்து வெற்றிக் கொடி நாட்டினார்.

நான், வங்கி ஒன்றில் வேலை செய்து வந்ததால்...முழு வீச்சுடன் இயங்க முடியவில்லை.ஆனாலும், பின்னர் ஒரு சபாவும், ஒரு நாடகக் குழுவையும் ஆரம்பித்தேன்..வெள்ளித் திரைக்கு ஆசைப்படவில்லை.

இனி, விசு அவர்களின் நாடகப்பணியைப் பார்ப்போம்...

இயக்குநர் கே.பாலசந்தரிடம் பயின்ற அனைவரும் சோடைபோகாதவர்கள்.விசு மட்டும் விதி விலக்கா என்ன..

விஸ்வசாந்தி என்ற பெயரில் நாடகக் குழு ஆரம்பித்து பலவெற்றி நாடகங்களை நடத்தினார். "உறவுக்குக் கை கொடுப்போம்", "ஈஸ்வர அல்லா தேரே நாம்", "பாரத மாதாவுக்கு ஜே", 'குடும்பம் ஒரு கதம்பம்"அவர்களுக்கு வயது வந்துவிட்டது", "அவள் சுமங்கலிதான்""மோடி மஸ்தான்" ஆகிய நாடகங்களைக் குறிப்பிடலாம்.

பிறநாடகக் குழுக்களுக்கும் விசு சில நாடகங்களை எழுதினார்.அவற்றில் காத்தாடி ராமமூர்த்திக்கு எழுதிய "பட்டிணப்பிரவேசம்" டௌரிகல்யாணம் 'நாடகங்களும்,ஏ,ஆர்.எஸ் நடித்துக்கொண்டிருந்த வாணி கலா மந்திருக்கு  எழுதிய:தேவியர் இருவரும்..குறிப்பிட வேண்டியவை,

இவரது நாடகங்களைப் பார்த்த கேபி இவரை தன் யூனிட்டில் வசனகர்த்தாவாக சேர்த்தார்.பின், இவர் தன் திறமையால், நடிப்பால், வசனத்தா;' ஆபாசமற்ற நகைச்சுவை வசங்களால் மக்களைக் கவர்ந்தார்.

இவரது சகோதரர்கள் ராஜாமணியும், கிஷ்மூ வும்..இவர் நாடகங்களில் நடித்தனர்.ராஜாமணி தனிக்குழு ஆரம்பித்து, குரிய கோஸ் ரங்கா எழுதிய "கீழ்வானம் சிவக்கும்" நாடகத்தை நடத்தினார்.பின்னர் அது சிவாஜி நடிக்க திரைப்படமானது.

விசுவின் நாடகங்கள் அனைத்தும் படமாயின.மோடிமஸ்தான் நாடகமே "மணல்கயிறாக" திரைப்படமாகியது.உறவுக்குக் கை கொடுப்போம், சம்சாரம் ஒரு மின்சாரம் என்ற பெயரில் படமாகி தேசிய விருது பெற்று சாதனை படத்தது.குடும்பம் ஒரு கதம்பம் நாடகம் திரைப்படமாகி விசு சிறந்த நடிகர் என்பதை உறுதிச் செய்தது.

பின்னர்...நாடகம் போடுவதை நிறுத்தினார்..பட வாய்ப்புகளும் சற்று குறைய , சன் டீவியில் அரட்டை அரங்கம் என்ற விவாத நிகழ்ச்சியைத் துவக்கி பல ஆண்டுகள் சிறப்பாக நடத்தினார்.

நாடகப் பற்று குறையாத இவர் சமீபத்தில் "கொஞ்சம் யோசிங்க பாஸ்" என்ற நாடகத்தை அரங்கேற்றினார்

 நண்பர் கணேஷ், பிரசன்னாவுடன் சேர்ந்து பிரியதர்ஷினி என்றொரு குழுவை ஆரம்பித்து, வெங்கட் எழுதிய "தாம்பத்யம் ஒரு சங்கீதம்", வேதம் புதிது கண்ணன் எழுதிய சுப முகூர்த்தப் பத்திரிகை, ரமணி எழுதிய, "நவீன சுயம்வரம்" ஆகிய நாடகங்களை நடத்தினார்

Wednesday, March 23, 2016

18 - "கோமல்" சுவாமினாதன்

                           
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோமல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். பள்ளி ஒன்றில் தமிழாசிரியராக தனது வாழ்நாளைத் தொடங்கியவர்.1935ல் பிறந்தவர்.

பின்னர், "கோமல் சுவாமிநாதன்" என அறியப்பட்ட இவரை புதுமைப்பித்தனின் எழுத்துகள் கவர்ந்தன.எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜில் சேர்ந்த இவர் அவர்களுக்காக எழுதிய முதல் நாடகம் "புதிய பாதை"

பின்னர், 1971ல் தனது நாடகக் குழுவான ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸைத் துவக்கினார்.பொதுவுடமைக் கொள்கைகளில் மிகவும் பற்றுக் கொண்டவர் கோமல்.
1979களில் நான் எனது சௌம்யா நாடக்குழுவை ஆரம்பித்தேன்.அது முதல் அவரிடம் எனக்குப் பழக்கம் உண்டு.நாடகம் நடைபெறும் நாட்களில் சைக்கிள் ரிக்க்ஷாவில் வருவார்.இதுபற்றி ஒருமுறை நான் கேட்ட போது "சைக்கிள் ரிக்க்ஷா தொழிலாளி வாழ்க்கையை ஓட்ட உழைத்து சம்பாதிக்கிறான்.அவன் சம்பாதியத்திற்கு ,அவனது தன்மான உணர்வுக்கு என்னால் ஆன உதவி இது" என்றார்.எப்படிப்பட்ட சிந்தனை!

தவிர்த்து, ஐசிஎஃப் அரங்கில் அவரது "செக்கு மாடுகள்" நாடகம் நடந்த போது  இரு வெளிநாட்டவர் வந்திருந்தனர்.அவர்களுக்கு புரியாத இடத்தில் ஆங்கிலத்தில் விளக்கும் வேலையை அன்று நாடகம் பார்க்க வந்த எனக்குக் கொடுத்ததை என் வாழ்நாளில் கிடைத்த பேறாகவே கருதுகிறேன்.

இவர் எழுதிய 33 நாடகங்களில் சில...

"சன்னதி தெரு","பெருமாளே சாட்சி", "யுத்த காண்டம்".கோடு இல்லாத கோலங்கள்",ஆட்சி மாற்றம்", செக்கு மாடுகள்", "ஒரு இந்திய கனவு"

1980ல் இவர் எழுதிய, "தண்ணீர் தண்ணீர்" மாபெரும் வெற்றி நாடகமாகும் 250 முறைகளுக்கு மேல் நடந்துள்ளது.இந்நாடகத்தில் வாத்தியாராக வந்த "ராமன்"  பின்னாளில், கோமலின் இணைபிரியா நண்பர் ஆனார்."வாத்தியார் ராமன்" என்றே மக்களால் அழைக்கப்பட்டார்.கோமலின் நாடகக் குழுவில் நடித்த மேலும் சில நடிகர்கள்"ராஜ் மதன், ஏ.கே.வீராச்சாமி, சாமிக்கண்ணு ஆகியோர்.

தண்ணீர் இல்லா ஒரு கிராமத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட நாடகம் இது.  அரசியல் தலைவர்களாலும், அரசு அதிகாரிகளாலும் கிராமத்து மக்கள் படும் துயரம்...தீவிரவாதம் ஏன் உருவாகிறது ஆகியவற்றை நயம்பட இந்நாகத்தில் சொல்லியுள்ளார்.

1981ல் இந்நாடகத்தை கே.பாலசந்தர், திரைப்படமாக எடுத்தார்.இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது

பின் 1982ல் கோமல் மேடையேற்றிய "ஒரு இந்திய கனவு" நாடகமும் திரைப்படமானது.இப்படத்தை கோமலே இயக்கினார்.

முன்னதாக இயக்குநர் கே.எஸ் கோபாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கோமல், "கற்பகம்", கைகொடுத்த தெய்வம் "பேசும் தெய்வம்"ஆகிய படங்களில் கதை வசனத்தில் பெரும் பங்காற்றினார்.
தண்ணீர் தண்ணீர் " நாடகம், எஸ்.சங்கர் என்னும் ஆங்கிலப் பேராசிரியரால் மொழிபெயர்க்கப்பட்டு. பி.சி.ராமகிருஷ்ணா இயக்கத்தில் மெட்ராஸ் பிளேயர்ஸால் நாடகமாக நடத்தப்பட்டது.

தன் குழுவைத் தவிர , வேறு சில குழுக்களுக்கும் நாடகம் எழுதித் தந்துள்ளார் கோமல்.

மேஜர் சுந்தரராஜன் நடித்த, "அவன் பார்த்துப்பான்" அவற்றில் ஒன்று.

தவிர்த்து, "என் விடு என் கணவன் என் குழந்தை;' நாடகம் தொலைக்காட்சியில் மனோரமாவில் நடிக்கப்பட்டு புகழ் பெற்றதாகும்.

சுபமங்களா என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் கோமல் சிறிது காலம் பணியாற்றினார்.

தமிழக அரசின் "கலைமாமணி" விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர் இவர்.

1995ல் கோமல் நம்மைவிட்டுப் பிரிந்தார். 

Tuesday, March 22, 2016

17 - கேபி யின் ராகினி ரெக்ரியேஷன்ஸ்

                           



கே.பாலசந்தர் 1953ஆம் ஆண்டிலிருந்தே  நாடகங்கள் எழுதி நடித்து இருக்கிறார்.இவர் ஏ ஜி ஸ் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த நேரத்திலேயே அங்கு இருந்த அலுவலர்   சங்கத்திற்காக இருபதிற்கும் மேற்பட்ட தமிழ்...ஆங்கில நாடகங்களை எழுதி நடித்து..இயக்கி இருக்கிறார்.

புஷ்பலதா....என்றொரு நாடகம்.இந்நாடகத்தில் புஷ்பலதா என்றொரு கதாபாத்திரம்.அது பற்றி அனைவரும் பேசுவர்.ஆனால் அந்த பாத்திரம் மேடைக்கே வராது,அந்தப் பாத்திரத்தின் வெற்றியே பாலசந்தரை தன் மகளுக்கு புஷ்பா என்ற பெயரை வைக்க வைத்தது என்றால்....அவரின் நாடகப் பற்றை என்னவென்று சொல்வது?

பின், மேஜர்  சந்திரகாந்த் என்ற நாடகத்தை ஆங்கிலத்தில் எழுதினார்.அந்த நேரத்தில், தமிழ் நாடகங்களுக்கு இருந்த ஆதரவைப் பார்த்து..அந்த நாடகத்தை தமிழில் எழுதி..தன் ராகினி ரெக்ரியேஷன்ஸ் குழு சார்பில் அரங்கேற்றினார்.

கேபியின் நண்பரும், தோலைபேசி நிலையத்தில் அதிகாரியாய் வேலை பார்த்தவருமான  சுந்தரராஜன் என்ற நண்பரை..அந்நாடகத்தில் ஓய்வு பெற்ற ராணுவ  அதிகாரி வேடத்தில் நடிக்க வைத்தார்.இந்நாடகத்திற்குப் பிறகு, அந்த நண்பர் அனைவராலும் மேஜர் சந்திரகாந்த் என்றே அழைக்கப்பட்டார்.ஒன் செட்   நாடகமான இதில் செட் டிசைன் பண்ணும் வேலையை ரங்கநாதன் என்ற ரங்கண்ணா அமைத்தார்.பின் பல நாடகங்களில் இவர் கைத்திறன் போற்றப்பட்டது.இந்நாடகத்தில் பெண் கதாபாத்திரமே கிடையாது.நாடகம் சூபர் ஹிட்

பின்னர் தொடர்ந்து சர்வர் சுந்தரம்,மெழுகுவர்த்தி,நீர்க்குமிழி,நாணல்,எதிர் நீச்சல் என வெற்றி நாடகங்கள் அரங்கேறிய வண்ணம்  இருந்தது.இவரது நாடகங்கள் அனைத்தும் திரைப்படமானது.

இவரது நாடகங்களில் மேஜர் சுந்தரராஜனைத் தவிர, நாகேஷ்,ஸ்ரீகாந்த், சௌகார் ஜானகி, மனோரமா, எஸ்.என்.லட்சுமி ஆகியோர் நடித்தனர்.

இவரது நாடகங்களைக் காண வந்த ரசிகர்கள் பலர் டிக்கெட் கிடைக்காது திரும்பினர்.தவிர்த்து...இவரது நாடகங்களுக்கு பிளாக்கில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன என்பது..இங்கு பதிவு செய்யப் பட வேண்டியது அவசியம்.

வி.எஸ்.ராகவன் அவர்களுக்கும் பாலசந்தர் நாடகங்களை எழுதிக் கொடுத்துள்ளார்.

பாலசந்தரின் அனைத்து நாடகங்களுமே மனித உறவுகளிடையே ஆன சிக்கல்கள், பிரச்னைகள் ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு அமைந்தன எனலாம்.

நாடகம், நாடகக் கலைஞர்கள் என்றால் பாலசந்தருக்குக் கடைசிவரை பிரியம் இருந்தது.

மௌலி. விசு ஆகியவர்களின் நாடகங்களைப் படமாக்கியதுடன்...அவர்களை திரைப்பட இயக்குநர்களாகவும் ஆக்கினார்.

தனது 80ஆவது வயதிலும் இவர் எழுதி மேடையேற்றிய நாடகங்கள் பௌர்ணமி, ஒரு கூடை பாசம்.

ஷ்ரத்தா நாடகக் குழுவிற்காக எழுதிக் கொடுத்த நாடகம் இடியுடன் கூடிய மழை

தமிழ் நாடக உலகம் மறக்கமுடியா கலைஞன் கே.பாலசந்தர். 

Monday, March 21, 2016

16 - திருவல்லிக்கேணி ஃபைன் ஆர்ட்ஸும்...கலாநிலையமும்

                                   

திருவல்லிக்கேணி இளைஞர்கள் சிலர் சேர்ந்து 1946ல் Triplicane Fine Arts என்ற குழுவைத் தொடங்கினர்.இக்குழுவை ஆரம்பிக்க முக்கியமாய் இருந்த இரு இளைஞர்கள் கே.எஸ்.நாகராஜனும், என்.எஸ்.நடராஜனும் ஆவார்கள்.இருவரும் சேர்ந்து பல நாடகங்கள் நடத்தினர்.பல நடிகர்கள் இவர்கள் மூலம் நாடகக் குழுக்களுக்குக் கிடைத்தனர்.

கே எஸ் நாகராஜன் முன்னதாக பம்மல் சம்பந்த முதலியாரின், "வேதாள உலகம்" மனோகரா" ஆகிய நாடகங்களில் நடித்தவர்.அரசுப்பணியிலும் இருந்தார்.பின்னர் கலாநிலையம் என்ற நாடகக்குழுவையும் ஆரம்பித்தவர்.

 தேவன், சாண்டில்யன்,சாவி,வித்வான் லட்சுமணன்,மெரினா, கல்கி தாசன்,அனுராதா ரமணன், சுஜாதா ஆகியோர்கள் எழுதிய நாடகங்கள் அரங்கேறின.வாஷிங்டனில் திருமணம், தனிக்குடித்தனம்,ஊர் வம்பு,கால்கட்டு, வட பழனியில் வால்மீகி ஆகிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கன.

வீரராகவன், (மேஜர்)சுந்தரராஜன்,பூர்ணம் விஸ்வநாதன்,ஜெமினி மகாலிங்கம், மணக்கால் மணி, கூத்தபிரான்,கரூர் ரங்கராஜன்,சந்திரசேகரன்(சந்துரு) ஆகியோர் இவர்களால் உருவாகியவர்கள் எனலாம்.

இந்நிலையில் இக்குழுவிலிருந்து பிரிந்து மெரினா, பூர்ணம் விஸ்வநாதன், கோவை பத்மநாபன், கூத்தபிரான் ஆகியோர் தனித்தனி குழுவாகினர்.ஆனாலும் மெரினாவின் நாடகங்களையும், வாஷிங்டனில் திருமணத்தையும் அனைவரும் நடத்தினர்.

கிட்டத்தட்ட 70 நாடகங்களுக்கு மேல் கலாநிலையம் அரங்கேற்றியுள்ளது.இவர்களது "குறிஞ்சி மலர்" நாடகத்தில் 113 கலைஞர்கள் நடித்தது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.கல்கிதாசனின் அம்பிகையின் கல்யாணம் மாபெரும் வெற்றி நாடகம்.

1996க்குப் பிறகு கே.எஸ்.நாகராஜனின் மகன் கே.எஸ்.சுந்தர் கலாநிலையம் பொறுப்பை ஏற்றார்.

சுந்தர், 1958ஆம் ஆண்டே, அவருக்கு பத்து வயதாய் இருந்த போதே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தவர்.தேவனின் துப்பறியும் சாம்புவில் என்.எஸ்.நடராஜன் சாம்புவாய் நடிக்க சுந்தர் சாம்புவின் மகன் சுந்துவாய் நடித்தவர்.

சுந்தர் "கலாநிலையத்திற்காக எழுதியுள்ள சில நாடகங்கள், "காதல் கல்யண வைபோகமே" வி ஆர் எஸ்ஸோ வி ஆர் எஸ்., ஆயிரம் காலத்துப் பயிர்< யார் பையன், அனுபவ ஆராதனை.

தவிர்த்து இவர் சில நாடகக் குழுக்களுக்கும் நாடகம் எழுதித் தந்துள்ளார்.

கலாநிலையத்திலிருந்து வந்த கூத்தபிரான் (நடராஜன். என்ற பெயருள்ள இவர்அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தவர்) நவபாரத் தியேட்டர்ஸ் என்ற பெயரில் குழு தொடங்கி பல நாடகங்கள் நடத்தினார்.ஜெயசங்கர் இவரது நாடகங்களில் நடித்துள்ளார். இப்போது இக்குழுவை இவரது மகன் என்.ரத்தினம் நடத்தி வருகிறார். இவர் எழுதிய "ரோபோவின் டயரி" ஓடி விளையாடு தாத்தா, சொப்பனக்குழந்தை. காளீஸ்வரபவன் ஆகிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கன.

பூர்ணம் விஸ்வநாதன் தனியே வந்து பூர்ணம் தியேட்டர்ஸ் என்ற பெயரில் நாடகங்கள் நடத்தினார்.பல வெற்றி நாடகங்களைத் தந்த இவரது நாடகங்கள் சில சுஜாதா எழுதிய டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, கடவுள் வந்திருந்தார்.

பூர்ணம் குறித்து இங்கு பதிவு செய்யப்பட வேண்டிய மற்றொரு செய்தி....தில்லியில் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராய் இருந்த இவர்தான் நாம் நாடு சுதந்திரம் அடைந்த செய்தியை வாசித்தவர்.

மெரினா, மெரினா தியேட்டர்ஸ் என்ற பெயரில் தனது நாடகங்களை நடத்தி வந்தார்

நாகராஜனுடன்..திருவல்லிக்கேணி ஃபைன் ஆர்ட்ஸ் ஆரம்பித்த என்,எஸ்.நடராஜன்...அவர்கள் நடத்திய தேவனின் நாடகங்களில் நடித்து வந்தார்.துப்பறியும் சாம்பு நாடகத்தில் சாம்புவாக அவர் நடிக்க பின்னர் சாம்பு நடராஜன் என்றே அழைக்கப்பட்டார்.இவர் பின்னர் என்.எஸ்.என்., தியேட்டர்ஸ் என் ஆரம்பித்து நாடகங்களை நடத்தினார்.இவர் நாடகங்களில் ஜெயசங்கர், வீரராகவன் ஆகியோர் நடித்தனர்.பின், வீரராகவன் தன் உறவினர் (மேஜர்) சுந்தரராஜனை அறிமுகப்படுத்த அவரும் இக்குழுவில் நடிக்க ஆரம்பித்தார்.டைகர் வரதாச்சாரி  நாடகம் குறிப்பிடத்தக்க நாடகம் ஆகும். நடராஜனுக்கு வயதான காரணத்தால் அக்குழுவின் பொறுப்பை சுந்தரராஜன் ஏற்றார். குழுவிற்கும் பத்மம் ஸ்டேஜ் எனப் பெயரிட்டார்.இவர்கள் குழுவில், சிவகுமார், ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இவர்களால் மேடையேற்றப்பட்ட சில நாடகங்கள்...அப்பாவி, சந்ததி,சொந்தம், கல்தூண்,அச்சாணி. தீர்ப்பு ஆகியவை ஆகும்.

வியட்நாம் விடு சுந்தரம் இவர்களுக்காக "ஞானஒளி" நாடகத்தை எழுதினார்.பின்னாளில் நாடகத்தில் சுந்தரராஜன் ஏற்ற பாத்திரத்தை சிவாஜி ஏற்க...வீரராகவன் நடித்த இன்ஸ்பெக்டர் பாத்தைரத்தை திரைப்படத்தில் சுந்தரராஜன் ஏற்றார்.

திருவல்லிக்கேணி ஃபைன் ஆர்ட்ஸும்...கலாநிலையமும் நாடக உலகிற்கு பல திறமையுள்ள நடிகர்களை உருவாக்கித் தந்தனர் என்றால் அது மிகையல்ல

திரு கே.எஸ்.நாகராஜன் அவர்களின் நூறு வயது பூர்த்தியானதை சென்னையில் பிரம்மாண்டமாய் சமீபத்தில் கொண்டாடினர்.எந்த ஒரு கலைஞனுக்கும் கிடைக்காத வாய்ப்பு.. 

Sunday, March 20, 2016

15 - ஒய்ஜிபி என்ற ஆலமரம்

                           
   


அரசு அதிகாரியாய் இருந்த ஒய்.ஜி.பார்த்தசாரதி அவர்கள், தன் நண்பர் பத்மநாபன் (பட்டு) என்பவருடன் சேர்ந்து 1952ல் ஒரு நாடகக் குழுவை ஆரம்பித்தார்.அக்குழுவிற்கு, யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட் என்று பெயரிட்டார்.

பெற்றால் தான் பிள்ளையா? இம் பர்ஃபெக்ட் மர்டெர், போன்ற நாடகங்களை நடத்தினார்.பின், வியட்நாம் வீடு சுந்தரம் எழுதிய கண்ணன் வந்தான் என்ற நாடகத்தை அரங்கேற்றினார்.ஒரு பாரிஸ்டரின் கதை.அடடா...ஒய்.ஜி.பி., அந்த பாத்திரமாகவே மாறிவிட்டார்.அவரது ஜூனியர் ஆக திரு ஏ.ஆர்.ஸ்ரீனிவாசன் (ஏஆர் எஸ்) நடித்தார்.
(இந்நாடகமே பிறகு சிவாஜி இரு வேடங்களில் நடிக்க கௌரவம் என்ற திரைப்படமாக வந்தது).நாடகத்தில் கோர்ட் காட்சிகள் , விசாரணை யெல்லாம் மிகவும் தத்ரூபமாக அமைந்தது.அடுத்து, சுந்தரம் எழுதிய "நலந்தானா" என்ற நாடகம்.

மௌலி இவர்கள் குழுவில் நடித்து வந்தவர்.அவர் எழுதிய, ஃபிளைட் 172, பத்ம வியூகம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா , வெங்கட் எழுதிய ரகசியம் பரம ரகசியம்,ஆகிய நாடகங்களும் அரங்கேறின.அனைத்து நாடகங்களும் வெற்றி நாடகங்கள்.ஃபிளைட் 172 இன்றும் பேசப்படும் நாடகமாக உள்ளது.பின்னர்..மௌலி தனியாகக் குழு அமைக்க யுஏஏ வெங்கட் எழுதிய பல நாடகங்களை அரங்கேற்றியது.

யுஏஏ வில் பல பிரபல நடிகர்கள் நடித்து புகழ் பெற்றனர்.

நாகேஷ்,ஏ ஆர் எஸ்., சோ, மௌலி, விசு, ராதாரவி,சந்தியா (ஜெயலலிதாவின் தாயார்)
ருக்மணி (லட்சுமியின் தாயார்), லட்சுமி, ஐஸ்வர்யா (லட்சுமியின் மகள்) ( மூன்று ஜெனெரேஷன்),, வைஷ்ணவி, ஸ்ரீகாந்த் ஆகியோர் இவர்களில் சிலர்.
ஜெயலலிதா முதன் முதல் இவர்கள் நாடகத்தில் தான் நடித்தார்.(பின்புதான் வெள்ளித்திரை)
தவிர்த்து...ஒய்,ஜி.பி., ஒய்.ஜி.எம்., இவர்களுடன் ஒய்ஜிஎம் மனைவி சுதா மஹேந்திராவும் ஒன்றாக நாடகத்தில் நடித்துள்ளனர்.
பிரபல இசையமைப்பாளராக இருந்த காமேஷ்-ராஜாமணி குழுவினருடன் தேவா வும் சேர்ந்து இவரது நாடகங்களுக்கு இசையமைத்துள்ளனர்.
இப்படி பலப்பல சாதனைகள்



ஆமாம்...ஒய்ஜி மகேந்திரனை இவர்கள் லிஸ்டில் ஏன் சேர்க்கவில்லை. ஏனென்றால் அவரது சிறு வயதிலிருந்தே நாடக ஆர்வம் மிக்கவராய் இருந்தார்.மீன்குஞ்சு..நீந்த கற்றுக் கொடுக்க வேண்டுமா? என்ன?

ஒய்ஜிபியின் மறைவிற்குப் பின் நாடகக் குழுவின் பொறுப்பை ஒய்ஜிஎம் ஏற்றார்.ஏசி காலேஜ் ஆஃப் டெக்னாலஜியில் பி.டெக்., பட்டம் பெற்றபின் எம்பிஏ வும் முடித்த இவர்...தந்தையின் நாடகக் குழுவில் சிறு வயதிலிருந்தே நடித்து வந்தார்.

நாடகக் குழுவின் பொறுப்பை ஏற்றது முதல் இன்றுவரை திறம்பட நடத்தி வருகிறார்.இவரது சிறந்த நாடகங்கள்..

இது நியாயமா சார்,வெங்கடா3 (இந்நாடகத்தில் மூன்று வேடங்களில் நடித்தார்),சுதேசி ஐயர்,தந்திரமுகி,காதலிக்க நேரமுண்டு, சொப்பன வாழ்வில்  ..

எல்லா நாடகங்களும் நூற்றுக் கணக்கன முறை நடந்துள்ளன.

நாடகக் கலைஞர்களின் துன்பங்கள், நாடகம் அரங்கேறும் முன் இருக்கும் படபடப்பு என அனைத்தையும் ஒரு கலைப்படத்திற்கான இலக்கணத்துடன் "நாடகம்" என்ற பெயரிலேயே ஒரு நாடகத்தையும் அரங்கேற்றி சாதனைப் படைத்தார்.

இவருக்கான நாடகங்களை வெங்கட், கோபு-பாபு, சித்ராலயா ஸ்ரீராம் ஆகியோர் எழுதியுள்ளனர்.

ஒய்ஜிபி ,நடித்து பின்னர் சிவாஜி நடிக்க திரைப்படமாக வந்த நாடகம் பரீட்சைக்கு நேரமாச்சு .இதில் ஒய்ஜிபியின் மகனாக வருவார் ஒய்ஜிஎம்.,

சமீபத்தில் இந்நாடகத்தை மீண்டும் மேடையேற்றினார் ஒய்ஜிஎம்.தந்தை ஒய்ஜிபி நடித்த தந்தை பாத்திரத்தை தான் ஏற்றார்.(திரைப்படத்தில் சிவாஜி ஏற்ற பாத்திரம்)

வியட்நாம் வீடு சுந்தரம் எழுதி, சிவாஜி நாடகமாக நடித்து, திரைப்படமும் ஆன "வியட்நாம் வீடு" நாடகத்தை
 திரும்ப மேடையேற்றி சிவாஜி பாத்திரத்தில் ஒய்ஜிஎம் நடித்தார்.

சித்ராலயா கோபு எழுதி..யூனிடி கிளப் சார்பில் முத்துராமன் நடித்த காசேதான் கடவுளடா 1970களில் வெற்றிநாடகம்.பின்பு, வெள்ளித்திரையிலும் வெற்றி பெற்றது.அந்நாடகத்தை மீண்டும் ஒய்ஜிஎம் அரங்கேற்றி மீண்டும் அதை வெற்றி நாடகம் ஆக்கினார்

இயக்குநர் சிகரம் கேபி யின் திரைக்காவியம் "சிந்து பைரவி" யின் இரண்டாம் பாகத்தை "சகானா" என்ற பெயரில் தொலைக்காட்சி நாடகமாக்கினார் கேபி.அதில் திரைப்படத்தில் சிவகுமார் நடித்த ஜேகேபி பாத்திரத்தை   ஒய்ஜிஎம் ஏற்றார்.

சாதனை மேல் சாதனை....எந்தக் கலைஞனுக்குக் கிடைக்கும் இந்த பேறு.

ஒய்ஜிஎம் (நாடகத்) தந்தைஒய்ஜிபிக்கும் நடிப்பின் தந்தைசிவாஜிக்கும் காணிக்கையாக பரீட்சைக்கு நேரமாச்சு 100ஆவது நாடகவிழாவைக் கண்டது.

தன் நாடகம், தன் குழு என சுயநலமில்லாமல்"பாரத் கலாச்சார்" என்ற சபாவைத் தொடங்கி அனைத்துக் குழுக்கள், கலைஞர்கள் ஆகியோருக்கு அவரது படைப்புகளை மக்கள் காணும் வாய்ப்பைத் தந்து வருகிறார்.

250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், உறவுக்குக் கை கொடுப்போம், கதை கதையாம் காரணமாம்" ஆகிய இரு படங்களை இயக்கியும் உள்ளார்

தமிழக அரசின் கலைமாமணி விருது, கலைவாணர் விருது.சிறந்த ஆல் ரவுண்டருக்கான மயிலாப்பூர் அகடெமியின் (மூன்று முறை) விருது ஆகியவை இவர் பெற்ற பல விருதுகளில் சில.

ஒய்ஜிஎம்மின் மகள் மதுவந்தியும் மகம் எண்டெர்பிரைஸஸ் என்ற குழைத் தொடங்கி நாடகங்கள் நடத்தி வருகிறார்,.இவரது 'பெருமாளே" நாடகம் நூறுமுறைகளுக்கு மேல் நடந்துள்ளது.

இவ்வளவு குறிப்பிட்ட நான் இன்னொன்றையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்...

இவரது தாயார் திருமதி ராஜலக்ஷ்மி பார்த்தசாரதி (ராஷ்மி) ஒரு கல்வியாளர்.பத்ம சேஷாத்ரி பள்ளிகளின் தாளாளர்.பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

ஆமாம்...ஒய்ஜிபி ஒரு ஆலமரம் என்ற தலைப்பு ஏன்....

ஏனென்றால்...இன்று நாடகமேடையில் பல நாடகக்குழுக்களின் மூலாதாரத்தில் ஏதோ ஒருவகையில் ஒய்ஜிபி இருப்பார்.அந்த அலமரத்தின் விழுதுகளே இவர்கள்

14 - விவேகா ஃபைன் ஆர்ட்ஸ்

                                   

சோ ராமசாமி ஒரு நடிகர், பத்திரிகை ஆசிரியர்,நாடக ஆசிரியர், வக்கீல் என பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர்.அரசியல் நையாண்டி இவரது ஸ்பெஷாலிட்டி.

இவருக்கு சோ என்ற பெயர் வரக் காரணம் என்ன?

பகீரதன் எழுதிய "தேன்மொழியாள்" என்ற நாடகத்தில் அவர் ஏற்ற பாத்திரத்தின் பெயர் சோ.அதனால்தான் அவருக்கு அப்பெயரே நிலைத்துவிட்டது.

திரு பட்டு அவர்கள் எழுத சோ நடித்த 'பெற்றால்தான் பிள்ளையா" என்ற நாடகம் சிவாஜி நடிக்க "பார் மகளே பார்:"திரைப்படமாக ஆன போது இவர் நாடகத்தில் ஏற்ற பாத்திரத்திலேயே திரையிலும் நடிக்க நேர்ந்தது.

வக்கீலான இவர் 1957 முதல் 1962 வரை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்தார். பின்னர் டிடிகே நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக இருந்தார்.

விவேகனந்தா கல்லூரியில் படிக்கும் போது 1957லிருந்து நாடகங்களில் நடித்து வந்த இவர், தான் படித்த கல்லூரி பெயரிலெயே "விவேகா ஃபைன் ஆர்ட்ஸ்" என்ற நாடகக் குழுவை ஆரம்பித்தார்.தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்களே நடிகர்கள்

இவரது நாடகங்கள் சில, "ஒய் நாட், மெட்ராஸ் பை நைட்,கோ வாடிஸ், சம்பவாமி யுகே யுகே, மனம் ஒரு குரங்கு, யாருக்கும் வெட்கமில்லை, நேர்மை உறங்கும் நேரம், சரஸ்வதி சபதம், என்று தணியும் இந்த சுதந்திர தாகம், முகமது பின் துக்ளக்"..அனைத்து நாடகங்களும் பல நூறு முறைகள் நடந்துள்ளன.

இவரது முகமது பின் துக்ளக்...அன்றைய அரசியல் வாதிகளை கிண்டல் செய்யும் வகையில் இருந்தது...அதுவே...சமீபத்தில் மேடையேறிய போதும் இன்றும் பொருந்துவதாக இருந்தது.

22 நாடகங்களை எழுதி நடித்துள்ள இவர், 14 திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.எங்கே பிராமணன், ராமாயணம், மகாபாரதம் என எட்டு புதினங்களையும் எழுதியுள்ளார்.

1999 முதல் 2005 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.

Saturday, March 19, 2016

13 - நேஷனல் தியேட்டர்ஸும் ஆர்.எஸ்.மனோகரும்

                                 

பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து முடித்ததும் அஞ்சல்துறையில் வேலையில் அமர்ந்தார் லட்சுமி நரசிம்மன்.படிக்கும் போதே தேசிய சிந்தனைகளும், கலை ஆர்வமும் கொண்டிருந்தார்.

திருவல்லிக்கேணியில் அவர் தங்கியிருந்த ஒட்டலில் , தங்கியிருந்த மற்ற இளைஞர்கள் நாடகத்தில் ஆர்வம் கொண்டிருந்ததைக் கண்டார் , லட்சுமி நரசிம்மன்.1959ஆம் ஆண்டில் சென்னையில் பிரபல வழக்குரைஞராக இருந்தபடியே, அமெச்சூர் நாடகங்களை நடத்தி வந்த வி.சி.கோபாலரத்தினம் என்பவர் குழுவில் பங்கேற்று நடித்தார்.தோட்டக்கார விஸ்வனாதன் என்பவர் நடத்திய முழுவிலும் நடித்தார்.

இந்நிலையில், கே.பி.ரங்கராஜு வழியாக "ராஜாம்பாள்' என்ற படத்திற்கு புதுமுகங்கள் தேடிய போது அப்படத் தயாரிப்பாளர் லட்சுமி நரசிம்மனுக்கு, மனோகர் என்று பெயர் வைத்து திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார்.300 படங்களுக்கு மேல் மனோகர் நடித்துள்ளார்

முழுநேர நடிப்பை மனோகர் மேற்கொண்டப் பிறகு நேஷனல் தியேட்டர்ஸை மனோகர் துவக்கினார்.மிக பிரம்மாண்டமான அரங்க அமைப்புகளை அமைத்து மக்களை வியப்பில் ஆழ்த்தினார்.இவரது பல நாடகங்கள் ஒரே ஊரில் பல நாட்கள் நடந்ததுண்டு.

இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தில்  இராவணனாக நடித்து புகழ்பெற்ற இவர் பெயருக்குமுன் இலங்கேஸ்வரன் ஒட்டிக் கொண்டது.

இடையே...திரைப்படங்களில் பிரபலமாகி நடித்து வந்தார் மனோகர்.ஆயினும், நாடகத்தின் பால் இவருக்கான ஈர்ப்பு குறையவில்லை.சேலத்தில் கண்காட்சியில் இவரது நாடகத்தைப் பார்த்த, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம், இவரது நடிப்பு, தோற்றம், வசன உச்சரிப்பு இவற்றைக் கண்டு தங்கள் தயாரிப்பில் கிட்டத்தட்ட 18 படங்களில் இவரை நடிக்க வைத்தார்.

இவரது நாடகங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி நாடகங்கள்.இவர் நாடகங்களின் சிறப்பு அம்சமே...பிரம்மாண்டமான செட் போட்டு பார்ப்போரை திரைப்படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துவதுதான்.

தவிர்த்து, மக்கள் வில்லனாகக் கருதும் கதாபாத்திரங்களை ஹீரோவாக ஆக்கி நாடகமாக்கினார்.இலங்கேஸ்வரன், சாணக்கிய சபதம்,சிசுபாலன், காடக முத்தரையன் ஆகியவை இதற்கு உதாரணங்களாகும்

இன்றும் என் நினைவில் நிற்கும் இவரது நாடகங்கள், இலங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், சிசுபாலன், இந்திரஜித், சுக்கிராச்சாரியார்,நரகாசுரன், திருநாவுக்கரசர்,ஆகியவை

தமது குழுவின் மூலம் 32 நாடகங்களை 7950 முறைகள் மேடையேற்றி நாடக உலகில் ஒரு இமாலய சாதனை புரிந்துள்ளார்.

எதிரொலி எழுப்பும் "எக்கோலிட்" என்ற கருவியை முதன் முதலாகப் பயன் படுத்தியவர் மனோகர்.நாடகத்தில் சிங்கத்தையும், ஐந்து தலை நாகத்தையும் 3டி அமைப்பில் மேடையேற்றி மக்களை மிரள வைத்தவர்.நாடகத்தன்று நெருப்பாய் இருக்கும் இவர் மற்ற நேரங்களில் நகைச்சுவை உணர்வு மிக்கவர்.சககலைஞர்கள் மீது அளவில்லா பிரியம் வைத்திருந்தார்.

இவருக்கான நாடகங்களை துறையூர் மூர்த்தி, கே.பி.அறிவானந்தம் போன்றோர் எழுதினர்.

இலங்கேஸ்வரன், சாணக்கிய சபதம்,துரோணர்,மாலிக்காஃபீர் ஆகிய நாடகங்களை துறையூர் மூர்த்தி எழுதினார்

சூரபத்மன்,சிசுபாலன்,சுக்கிராச்சாரியார், சிவதாண்டவம்,ஒட்டக்கூத்தர் ஆகியவற்றை இரா.பழனிசாமி எழுதினார்

விஸ்வாமித்திரர் நாடகத்தை ஏ எஸ் பிரகாசம் எழுதினார்

பரசுராமர்,நரகாசுரன்,இந்திரஜித்,துர்வாசர்,திருநாவுக்கரசர் ஆகிய நாடகங்களை அறிவானந்தம் எழுதினார்

இந்திரஜித்தை எழுதிய அறிவானந்தம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்/.....

"எம்.ஆர்.ராதாவின் குழுவில் நான் சேர்ந்து ரத்தக்கண்ணீர், தூக்குமேடை போன்ற நாடகங்களில் நடித்து வந்தேன்.ஒருநாள் மனோகரைப் பார்த்து இந்திரஜித் கதையைக் கூற அதை நாடகமாக எழுதச் சொன்னர்..பிறகு அவருடன் பணி புரிந்து....அவருக்காக

இந்திரஜித், பரசுராமர்,நரகாசுரன்,துர்வாசர், திருனாவுக்கரசர், வரகுணபாண்டியன் ஆகிய நாடகங்களுக்கு கதை ,வசனம் எழுதினேன் இந்திரஜித் நாடக அரங்கேற்றம் போது, பத்திரிகையாளர்கலிடம், "என்னைப் பற்றி எதுவும் எழுதாவிட்டாலும் பரவாயில்லை.வளர்ந்துவரும் இந்நாடக ஆசிரியர் அறிவானந்தம் பற்ரி எழுதுங்கள்' என்றார் .இது அவரது பெருந்தன்மைக்கு ஒரு உதாரணம்."

(இப்போது எழுபதுகளில் இருக்கும் அறிவானந்தம் இன்றும் நாடகங்கள் எழுதி நடித்து வருகிறார்)

மனோகர், 2006 ஜனவரி மாதம் 10ஆம் நாள் நம்மை விட்டு மறைந்தார்.

ஆனாலும், இன்றும் அவர் குழுவில் நடித்தவர்கள் நாடகங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

12 - சிவாஜி நாடக மன்றம்

                                               
                                             
                                                 சிவாஜி கட்டபொம்மனாக

1928ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நாள் சின்னைய்யா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் மகனாய்ப் பிறந்தார் கணேசன். பள்ளிக் கூடத்தில் படிக்கையிலேயே நடிப்பதிலும், பாடுவதிலும் கணெசனுக்கு ஆர்வம் அதிகம் இருந்தது.ஏழுவயதிலேயே நாடகக் கமெபெனியில் சேர்ந்து நடிகரானார்.

யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் "மதுரை ஸ்ரீ பால கான சபா" அப்போது நாடகங்களை நடத்தி வந்தது.இந்தக் குழுவில், தான் ஒரு அனாதை என்று கூறி சேர்ந்தார் கணேசன்.இந்த சபையில்தான் காகா ராதாகிருஷ்ணனும் இருந்தார்.புது நடிகர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வாத்தியாராக பொன்னுசாமி படையாச்சி என்பவர் இருந்தார்.அவர், கணேசனுக்கு, நடிப்புப் பயிற்சியை அளித்தார்.பின்னாளில் கணேசன், "சின்ன பொன்னுசாமிதான் என் நாடகக் குரு" என்றுள்ளார்.

கணேசன் நடித்த முதல் நாடகம் "ராமாயணம்". அதில், அவர் போட்ட வேடம் சீதை."யாரென இந்தப் புருஷனை அறிகிலேன்" என்று பாட்டுப் பாடி...ஆட்டம் ஆடி நடித்தார்.நாட்கள் ஆக..ஆக.. பலப்பல புது வேடங்களை ஏற்றார்.இப்படி சிறுவனாக இருந்த போதே பல வேடங்களில் நடிக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது.பின்னர், எம்.ஆர்.ராதாவும் இக்குழுவில் இணைய "பதிபக்தி" என்ற நாடகத்தில், கணேசன் "சரஸ்வதி" என்ற பெண் வேடத்திலும்...எம்.ஆர்..ராதா வில்லனாகவும் நடித்தனர்.

பன்னிரெண்டு வயதில் நாடகக் குழுவிலிருந்து வீடு வந்தார் கணேசன்.அப்போது ஒருநாள், இவரைத் தேடி எம்.ஆர்.ராதா வந்தார்.பொன்னுசாமி பிள்ளை கம்பெனியிலிருந்து , தான் விலகி விட்டதாகவும், சொந்தமாக நாடகக் கம்பெனி ஆரம்பிக்கப் போவதாகவும், அதில் கணேசன் சேர வேண்டும் என்றும் கூறினார்.

"சரஸ்வதி கான சபா" என்ற பெயரில் நாடகக் குழு ஆரம்பிக்கப் பட்டது..அதில் , "லட்சுமிகாந்தன்","விமலா அல்லது விதவையின் கண்ணீர்" ஆகிய நாடகங்கள் நடந்தன.ஈ,வெ.ரா.பெரியாரின் வீட்டருகே நாடகக் கம்பெனி இருந்ததால், கணேசனுக்கு அண்ணா, ஈ.வெ.கி.சம்பத் ஆகியோர்  அறிமுகமாயினர்.

இந்நிலையில் ராதா தன் நாடகக் கம்பெனியை பங்குதாரர்களிடம் ஒப்படைத்துவிட்டு விலகினார்.கணேசனோ, அக்கம்பெனியிலேயே தொடர வேண்டியிருந்தது.
"மனோகரா" நாடகத்தில் மனோகரனாக நடித்தார்.

மீண்டும் சில காலம் இடைவெளி..

பின், "பால கான சபா",  என்ற யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் கம்பெனியை என்.எஸ்.கிருஷ்ணன் வாங்கினார்..இதில்,கணேசன் நடிக்க ஆரம்பித்தார். ஏற்கனவே இதில் கே.ஆர்.ராமசாமி, டி.வி.நாராயணசாமி ஆகியோரும் நடித்துவர, கணேசனுக்கு பெண் வேடமே கிடைத்து வந்தது.

இவ்வேலையில், என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு வழக்கில் கைதானார்.தன் குழுவை கே.ஆர்.ராமசாமியில் ஒப்படைக்காமல், எஸ்.வி.சஹஸ்ரநாமத்திடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார் கிருஷ்ணன்.அதனால் கம்பெனியில் பிளவு ஏற்பட, கணேசன் கே.ஆர்.ராமசாமியுடன் சென்றார்.

1945 ஆம் ஆண்டு திராவிடர் கழக 7ஆவது சுய மரியாதை மாநாடு நடந்தது.அதில், அண்ணாவின் "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்" நாடகம் நடந்தது.இந்நாடகத்தைக் கண்ட பெரியார் சிவாஜியாகவே மாறியதுபோன்ற கணேசனின் நடிப்பைப் பாராட்டி "சிவாஜி" என்ற பட்டத்தையும் அவருக்கு அளிக்க....அந்நாள் வரை வி.சி.கணேசனாகவே அறியப்பட்டவர்...சிவாஜி கணேசன் என்று புகழப்பட்டார்.

சக்தி நாடக சபா ஆதரவில் "சக்தி கிருஷ்ணசாமி' என்பவர் எழுதிய வீர பாண்டிய கட்டபொம்மன் நாடகம்  சேலம் கண்காட்சியில் அரங்கேற...சிவாஜி கணேசன் கட்டபொம்மனாக நடித்தார்.இந்நாடகம் 116 முறைகளுக்கு மேல் நடந்தது.பி.ஆர்.பந்தலு இதைத் திரைப்படமாக எடுக்க நினைத்ததால் நாடகம் நிறுத்தப்பட்டு திரைப்படமானது.லண்டனிலும் இந்நாடகம் நடந்தது.

கட்டபொம்மன் நாடகக் காட்சி ஒவ்வொரு நாளும் நடந்து முடிந்த பின்னர் , களைப்பு,சிரமம் ஏற்பட்டாலும் மக்கள் பாராட்டை நேரடியாகப் பெரும் பாக்கியம் கிடைத்தது.இம்மகிழ்ச்சிக்கு ஈடு இணை யில்லை என்றார் சிவாஜி.

உண்மை...ஒரு கலைஞனுக்கு...தன் திறமைக்கு எந்த விருது கிடைத்தாலும் அது தரும் மகிழ்ச்சியைவிட...தன் நடிப்பிற்கு, ஆற்றலுக்கு மக்கள் அளிக்கும் கரவொலி மூலம் கிடைக்கும் ஆதரவுக்கு சமம் வேறு ஒன்றுமில்லை

ஆகவேதான் திரையுலகில் மாபெரும் நடிகரான பின்னரும் நாடக மேடையை விடவில்லை சிவாஜி.

பின்னர் தனது நாடக நீண்டநாள் நண்பர் எஸ்.ஏ.கண்ணன் இயக்க, சிவாஜி நாடக மன்றத்தின் சார்பில், "தேன் கூடு", ஜகாங்கீர்" நாடகங்களும், தஞ்சைவாணன் எழுதிய "களம் கண்ட கவிஞன்" கவிதை நாடகமும் நடந்தது.

அம்பத்தூர் டன்லப் கம்பெனியில் சுந்தரம் என்ற இளைஞர் வேலை செய்து வந்தார்.இவர் தன் நண்பர்களுடன் ஒரு நாடகத்தை நடத்தினார்.அந்நாடக் கதையைப் பற்றி அறிந்த சிவாஜி ,அந்த இளைஞரைக் கூப்பிட்டு அந்நாடகத்தை "வியட்நாம் வீடு" என்ற பெயரில் அரங்கேற்றினார்.
மகேந்திரன் என்பவர் நடிகர் செந்தாமரைக்காக 'இரண்டில் ஒன்று" என்று ஒரு நாடகம் எழுத, அதைப் பார்த்த சிவாஜி அந்நாடகத்தை தான் நடந்த விரும்புவதாகக் கூறினார்.அதுவே எஸ்.பி.சௌத்ரி என்ற போலீஸ் அதிகாரியாக   சிவாஜி நடித்த :"தங்கப் பதக்கம்" நாடகம்.

வியட்நாம் வீடு, தங்கப்பதக்கம் மட்டுமல்ல கிட்டத்தட்ட 20 நாடகங்கள் திரைப்படமாக ஆக அதில் சிவாஜி நடித்தார் என்பதை இங்கு பதிவு செய்தாக வேண்டும்.

மாபெரும் நடிகரான பின்னரும் நாடக மேடையை மறக்காத சிவாஜி கணேசன், ஒவ்வொரு நாடக தினத்தன்றும் மிகவும் சிரத்தையாக நடித்தார்.நாடகத்தன்று மாலை ஏழு மணி நாடகத்திற்கு 3 மணிக்கே வந்து சரிபார்த்துக் கொள்வார்.

தனது நடிப்புத் தொழிலுக்கு இவரைப் போல மரியாதைக் கொடுத்தவர்கள் மிகச்சிலரே !

இதேபோன்று மக்கள் திலகம் அவர்களும் பல நாடகங்களில் நடித்திருந்தாலும், அவர் நடித்த "இன்பக் கனவு" "அட்வகேட் அமரன்" ஆகிய நாடகங்கள் சிறப்பானவையாகும்.
இருமாபெரும் நடிகர்களின் நடிப்பின் மீதான பக்தியை சொல்ல வார்த்தையில்லை எனலாம். 

Thursday, March 17, 2016

11- அண்ணாவும்...கலைஞரும்

             

தமது பேச்சாற்றல் மூலம் மக்களை ஈர்த்தவர் பேரறிஞர் அண்ணாத்துரை,மக்களால் அன்பாக அண்ணா என அழைக்கப்பட்டவர்.இவர் தனது நாடகங்கள் வாயிலாகவும் கொள்கைகளை பரப்பியவர்.

ஏராளமான நாடகங்களை எழுதியுள்ளார்.

"ஓர் இரவு", "சொர்க்க வாசல்","சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்","நீதிதேவன் மயக்கம்"."நல்ல தம்பி", "வேலைக்காரி","சந்திரோதயம்". ஆகியவை குறிப்பிடத்தக்க நாடகங்களாகும்.

சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியத்தில் வி.சி.கணேசன் என்ற இளைஞர் நடித்தார்.ஒருநாள் நாடகத்தைப் பார்க்க வந்த பெரியார், கணேசனின் நடிப்பைப் பார்த்து..சிவாஜி நீதாண்டா என மனமார பாராட்டினார்.அன்று முதல் கணேசன்...மக்களால் சிவாஜி கணேசன் என்று அழைக்கப்பட்டார்

ஓர் இரவு நாடகத்தை ஒரே இரவில் எழுதி முடித்தாராம்.இந்நாடகத்தை கண்டுக் களித்த கல்கி அவர்கள்..

"தமிநாட்டுப் பெர்னாட்ஷா" என்றார் அண்ணாவை.. அண்ணா எழுதிய நாடகங்கள் கே.ஆர்.ராமசாமியின் கிருஷ்ணன் நாடக சபைக்கு புகழ் சேர்த்தன.

"நாடக மேடையில், இவரது அழகு தமிழ் நடனம் ஆடிற்று, உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பியது. தன்மான உணர்வைத் தூண்டியது.தமிழ் மொழியின் பெருமையைப் பேசியது.மாற்றாரை எள்ளி நகையாடியது.பிற்படுத்த பட்டவரிடையே நமக்கு ஒரு நல்லத் தலைவன் கிடைத்தான். என்ற மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது" என்கிறார் பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன் தனது நூல் ஒன்றில்.

கலவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோரை திராவிட இயக்கத்தில் சேர்த்த பெருமை அண்ணாவின் நாடகங்களுக்கு உண்டு எனலாம்.




"திராவிடக் கழகக் கொள்கைகளை நாட்டு மக்களுக்குப் பரப்புவதில் அண்ணாவிற்கு இணையாக விளங்கியவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

எண்ணற்ற நாடகங்களை எழுதிக் குவித்த கலைஞரின் "பராசக்தி" மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது எனலாம்.

கடவுள் பெயரைக் கூறி இழிவான செயல் புரிபவர்களின் பித்தலாட்டங்களை வெளிக் கொணர்ந்தது "பராசக்தி" நாடகம்.பின்னர் சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சஹஸ்ரநாமம் நடிக்க படமாக வந்து. மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

பெண்களின் உரிமைக்காக இவரால் எழுதப்பட்ட நாடகம் "நச்சுப் பொய்கை"

கலைஞர் எழுதிய "தூக்கும் மேடை". ஒரே முத்தம்" பழக்கூடை" "வெள்ளிக் கிழமை" ,"காகிதப்பூ", போர்வாள்", ஆகிய அனைத்துமே சீர்திருத்த நாடகங்கள் ஆகும்.காகிதப் பூ நாடகத்தில் கலைஞரும் நடித்தார்.

இணையற்ற நாடக ஆசிரியர், இலக்கியவாதி, பாடலாசிரியர்,கதை வசனகர்த்தா, படத் தயாரிப்பாளர்,நாவலாசிரியர்,தொல்காப்பிய பூங்கா சமைத்தவர், குறளோவியம் கண்டவர், என அனைத்துத் துறையிலும் கோலோட்சி நின்றதுடன்...இணையில்லா மக்கள் தலைவராகவும் திகழ்கிறார்.

இந்த அதிசயம் வேறு எந்த எழுத்தாளர்களுக்கோ...தலைவர்களுக்கோ கிடைக்காத பேறு எனலாம்

கே ஆர் ராமசாமி
-------------------------------
                     
அண்ணா, கலைஞர் பற்றி படிக்கும் போதே நாடக உல்கில் நம் ஞாபகத்திற்கு வர வேண்டிய ஒரு நடிகர் கே ஆர் ராமசாமி ஆவார்,


மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் தனது 11 வயதிலேயே நடிக்க வந்தவர்.அந்த நாட்களில் இப்படிப்பட்ட நாடக குழுவில் நடிக்க வரவேண்டுமாயின் ஆறு தகுதிகள் இருக்க வேண்டும்.அப்படி ஆறு தகுதிகளையும் கொண்டவராகத் தகழ்ந்தவர்களில் குறிப்பிடத் தக்கவர் இவராவார்.

ஆமாம்..அந்த ஆறு தகுதிகள் என்ன..

வயது,தோற்றப் பொலிவு,குரல் வளம்,பாடும் திறன்,இசை ஆர்வம்,நடிப்புத் திறன் ஆகியவையே ஆகும்

கே ஆர் ராமசாமி, அண்ணா எழுதிய வேலைக்காரி நாடகத்தை பின்னாளில் கிருஷ்ணன் நாடகக் குழு என ஒரு குழுவினை ஆரம்பித்து நடத்தினார்.இந்நாடக்ம் ஓராண்டு, தஞ்சை ராமநாதன் செட்டியார் ஹாலில் நடைபெற்றது

பின்னர், அண்ணாவின் ஓரிரவு நாடகம்.இந்நாடகப் போஸ்டர்களில் கே ஆர் .ராமசாமி, கதை-வசனம் அறிஞர் அண்ணாத்துரை என போட்டார் என்பது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

இவரது, தந்தை காலமான அன்று கூட காலை இறுதிக்கடன் களை முடித்துவிட்டு, மாலை ராமாயணம் நாடக்த்தில் ஹனுமனாக நடித்தவர் இவர்

வி.கே.ராமசாமி-------

                   
----------------------வி கே ராகசாமி போற்றத்தக்க வேண்டிய நாடக நடிகர் ஆவார்.ருத்ர தாண்டவம், பம்பாய் மெயில் போன்ற பல நாடகங்களை நடத்தினார்.இவர் சிறு வயது முதலிலிருந்தே..வயதான பாத்திரங்களில் நடித்து வந்தார் என்பதே சிறப்பாகும் 

10- என்.எஸ்.கே., மற்றும் எம்.ஆர்.ராதா

                     

"மங்கள பால கான சபா" என்ற குழுவை நாடக ஆசிரியர் டி.பி.பொன்னுசாமி பிள்ளை நிறுவினார்."இழந்தகாதல்". விதவையின் கண்ணீர் நாடகங்களை நடத்தினார்.இந்த நாடக சபையில்தான் வி.சி.கணேசன் (பின்னாளில் சிவாஜிகணேசன்) நடித்தார்.

இந்த சபையை எ,எஸ்.கிருஷ்ணன் வாங்கி பெயரை "என்.எஸ்.கே.நாடக சபை" என மாற்றினார்.

ஒரு சமயம் ஒரு வழக்கு சம்பந்தமாய்  என்.எஸ்.கே., கைதானார்.அப்போது எஸ்.வி.சகஸ்ரநாமம் அச்சபையை தன் பொறுப்பில் ஏற்று. ப.நீலகண்டன் எழுதிய "நாம் இருவர்" என்ற நாடகத்தையும், தானே எழுதிய "பைத்தியக்காரன்" என்ற சமூக சீர்திருத்த நாடகத்தையும் நடத்தினார்.என்.எஸ்.கே., விடுதலையாகி வந்ததும் குழுவை அவரிடம் ஒப்படைத்தார்

                                   

தமிழ் நாடகமேடையில் ஒரு புரட்சியை உண்டாக்கியவர் எம்.ஆர்.ராதா எனப்பட்ட ராதாகிருஷ்ணன் ஆவார்.

இவர் ஆரம்ப காலத்தில் நாடகத்தில் பாலகிருஷ்ணனாக நடித்தார்.வசனம் ஏதும் கிடையாது. பின்னர் பல நாடகக் குழுக்களில் சேர்ந்து நடித்தார்.நடிப்பில் பல பாராட்டுகளைப் பெற்ற ராதா, தானே ஒரு நாடக சபையை ஏற்படுத்தினார்."சரஸ்வதி கான சபா" எனப் பெயரிட்டார்.

"இராஜ சேகரன்" "இலட்சுமிகாந்தன்" போன்ற நாடகங்கள் அரங்கேறின.

இவரது நாடகங்களில் பெரிய மேடை,அலங்காரங்கள் கிடையாது.நடிப்பிற்கே முதலிடம்.இவரது சீர்திருத்த நாடகங்கள் அனைவரையும் கவர்ந்தது.ஆனாலும், இன்றலவும் பேசப்படும் நாடகமாக அமைந்தது, மறக்கமுடியாத "ரத்தக் கண்ணீர்". இந்நாடகத்தி ராதாவின் நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை எனலாம்.இந்நாடகம் மட்டுமே 5000 முறைகளுக்கு மேல் நடந்ததாகத் தெரிகிறது.

இந்நாடகம் அவருக்குப் பிறகும், அவரது மகன்கள் எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி ஆகியோரால் நடத்தப்பட்டது.

Wednesday, March 16, 2016

9 = எஸ்.வி.சஹஸ்ரநாமம்

                             

டி.கே.எஸ்., சகோதரர்களின் நாடகக் குழுவையும், அதில் அற்புதமாக நடிக்கும் டி.கே.சண்முகம் நடிப்பையும், அதற்கு மக்களிடம் இருந்து கிடைத்த கை தட்டல்களும் கண்டு நாடகங்கள் மீது தீராத மோகம் கொண்டான் அந்தச் சிறுவன்.

பொள்ளாச்சியில் அவனது பெரியப்பா வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்த 13 வயதே ஆன அச் சிறுவன், அருகில் உள்ள கோவைக்கும் டி.கே.எஸ்., குழுவினர் வந்துள்ள சேதி கேட்டு...அவர்களைக் காண ரயிலேறினான்.

அந்தக் காலத்தில் நாடகத்தில் நடிப்பது மிகவும் சிரமமான காரியம்.நாடகக் குழுவில் ஒருவன் இருக்கிறான் என்றால், அவனுக்கு மூன்று கலைகள் தெரிந்திருக்க வேண்டும்.

உயர்வு..தாழ்வு பாராதௌ எல்லா வேலைகளையும் முகம் சுளிக்காது செய்ய வேண்டும்.
ஊருக்கு ஊர் குழுவினர் மாறும்போது, அனைத்து காட்சிப் பொருள்களையும் மூட்டை..மூட்டையாய்க் கட்டிக் கொண்டு ஊருக்கு பயணிக்கத் தயாராய் இருக்க வேண்டும்
இவ்வளவு செய்தாலும் நிரந்தர வருமானம் என எதுவும் கிடைக்காது என உணர்ந்திருக்க வேண்டும்

பொள்ளாச்சியிலிருந்து கோவை வந்து சேர்ந்த பையனைத் தேடி வந்த அவனது தந்தை, "உனக்கு படிப்பு வேண்டுமா? இல்லை நடிப்பா?" என வினவ..சற்றும் தயக்கம் இல்லாது பையன், "நடிப்புத்தான் வேண்டும்" என்றான்.

பையனின் உறுதியைக் கண்ட தந்தை"சரி..உன் தலையெழுத்து அப்படியெனில் அதன் படியே நடக்கட்டும்" என்று கூறி சென்றார்,

அந்தச் சிறுவனே எஸ்.வி.சஹஸ்ரநாமம் ஆவார்,கோவை சிங்கானல்லூரில் 29-11-1913ஆம் ஆண்டு பிறந்தார்.

நாடக நுணுக்கங்களை அக்குழுவில் இருந்த போது கற்றார்.தனது நாடகப் பயிற்சியின் குருநாதராக அவர் எம்.கந்தசாமி முதலியாரிடம் பயின்று மூன்றே மாதங்களில் "அபிமன்யூ சுந்தரி" என்ற நாடகத்தில் சூரியபகவானாக நடித்தார்.

வீரபத்திரன் என்ற நடிகரிடமிருந்து பாடல் கற்றார்.சங்கீத மேதை சம்பந்த மூர்த்தி ஆச்சாரியரிடம் ஹார்மோனியம் கற்றார்.மேடை அமைப்பில் தேர்ச்சிபெற்றவராய் இருந்தார்.

அதனாலேயே..சென்னையில் கட்டப்பட்ட "ராஜா அண்ணாமலை மன்றம்". "ராணி சீதை ஹால்", "கலைவாணர் அரங்கம்" ஆகியவை அவரது ஆலோசனையின் படியேக் கட்டப்பட்டது.

நாடகத்திற்காகவே வாழ்ந்தவர்களில் சஹஸ்ரநாமமும் ஒருவர் ஆவார்.பாரதியாரிடம் ஈடுபாடு கொண்ட இவர்...பாரதியின் வார்த்தைகள் இப்படி மாற்றி தன்னைப் பற்றிக் கூறினார்.

"எனக்குத் தொழில் நாடகம்.நாட்டுக்கு உழைத்தல். இமைப்பொழுதும் சோராதிருத்தல்" என.

இவரது சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவில் நடித்து..பின் பிரபலமான நடிகர்கள் பட்டியல் நீண்டது.அதில் சிலர்...

சிவாஜி, முத்துராமன்,குலதெய்வம் ராஜகோபால்,வி.கோபால கிருஷ்ணன்,சத்தியராஜ்,பி.ஆர்.துரை,எஸ்.என்.லட்சுமி,எம்.என்.ராஜம்,பண்டரிபாய்,தேவிகா, மைனாவதி,ஜி.சகுந்தலா,ஏ.கே,வீராச்சாமி,ஏ.வீரப்பன், கம்பர் ஜெயராமன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், காந்திமதி...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்

இவரது குழுவின் நாடகங்கள் சில...

என்.வி.ராஜாமணி எழுதிய "கண்கள்", "இருளும் ஒளியும்"
தி ஜானகிராமனின், "நாலு வேலி நிலம்'
பி.எஸ்.இராமய்யாவின், "மல்லியம் மங்களம்"
குஹனின் "புகழ்வழி"
கல்கி எழுதிய , "மோகினித் தீவு"
பாரதியாரின் , "பாஞ்சாலி சபதம்"(கவிதை நாடகம்)
சேவாஜ்ஸ்டேஜ் கடைசியான நாடகம் பி.எஸ்.இராமய்யா எழுதிய "தேரோட்டி மகன்" ஆகும்.

1957ல் சேவா ஸ்டேஜ் , நாடகக் கல்வி நிலையம் என ஒன்றை நிறுவி, பாடத்திட்டங்களை வகுத்து மூன்று மாத காலம் இளைஞர்களுக்கு நாடகக் கல்வி வழங்கியது. தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் இந்த நிலையத்திற்கு 3000 ரூபாய் மானியம் வழங்கியது

தனது சகோதரி மகன் வி.என்.ராஜாமணியின் உதவியோடு தாகூரின் கதையை "கண்கள்" என்ற தலைப்பில் நாடகமாக்கினார்
நார்வேவைச் சேர்ந்த  ,எழ்த்தாளர் இப்சன் நாடகங்களால் கவரப்பட்டு "எனிமீஸ் ஆஃப் பீப்புள்ஸ்" என்ற நாடகத்தை மக்கள் விரோதி என்ற பெயரில் நாடகமாக்கச் சொன்னார்

1974 மார்ச் மாதம் முதல் 1988 ஃபெப்ருவரி வரை ஐந்து முறை இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.கிருஷ்ணமணி என்பவர் எழுதிய  "நந்தாவிளக்கு" என்ற நாடகத்திற்கான ஒத்திகைக்கு 21-2-88 அன்று வரச்சொல்லி நடிகர்களுக்கு செய்தி அனுப்பியவரின் உயிர் 19-2-1988 மாலை 4-30 அளவில் பிரிந்தது,

எஸ்.வி.எஸ்., அவர்களுக்கு தமிழ் நாடக வரலாற்றில் சிறப்பான இடம் உண்டு.

இன்று இவரது மகன் எஸ்.வி.எஸ்.குமார், தொலைக்காட்சித் தொடர்களிலும், திரைப்படங்களிலும் கலைப்பணியாற்றி வருகிறார். 

Monday, March 14, 2016

8 - டி.கே.எஸ்.சகோதரர்கள்

                     

டி.எஸ்.கண்ணுசாமிப் பிள்ளை-சீதையம்மாள் தம்பதியருக்கு நான்கு மகன்கள். டி.கே.சங்கரன், டி.கே.முத்துசாமி, டி.கே.ஷண்முகம், டி.கே.பகவதி., இந்த நால்வரும் நாடக உலகில், திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் நுழைந்த போது பள்ளிச் சிறுவர்கள்.ஆறாவது வகுப்பு, நான்காவது வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று முறையே படித்துக் கொண்டிருந்தனர்.கடைசி மகன் பகவதி கைக்குழந்தை.

ஷண்முகம் இளமையிலேயே ,துடிப்பு, ஆர்வம்,சிந்தனைக் கூர்மை, உடையவராய் விளங்கினார்.சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த "அபிமன்யு சுந்தரி" நாடகத்தில் அபிமன்யுவாக நடித்து புகழ் பெற்றார். தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர், எம்.கந்தசாமி முதலியார் ஆகிய நாடக ஆசிரியர்களிடம் ஷண்முகம் நடிப்புப் பயின்றார்.

1925 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் நாள் டி.கே.எஸ்.சகோதரர்களின் "ஸ்ரீ பால ஷண்முகானந்த சபை" என்ற நாடகக் குழுவைத் தொடங்கி 1950 வரை தமிழ் நாட்டிலும், மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் தொழில் முறை நாடகக்குழுவாக ஏராளமான நாடகங்களை நடத்தி நாடக உலகிற்கு மறுமலர்ச்சியை அளித்தனர்.

1937ல் சமுதாயத்தில் உள்ள குறைபாடுகளைக் கலைக் கண்ணோடு எடுத்துக் காட்டி திரு டி.கே.முத்துசாமி எழுதிய "குமாஸ்தாவின் பெண்"நாடகத்தை அரங்கேற்றினார்கள். 'அன்ன பூர்னிகா மந்திர்" என்ர வங்காளி நாவலைத் தழுவி எழுதப்பட்டது இந்நாடகம்.

பின்னர் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் "வித்யா சாகரர்" என்ற நாவலும் முத்துசாமி அவர்களால் நாடக மாக்கப்பட்டு நடந்தது

தமிழ் மொழிக்கும், தமிழ் இசைக்கும் சிறப்புச் செய்யும் வகையில் சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் எழுதிய "சிவலீலா" நாடகத்தை நடத்தினர்.இந்நாடகம் தொடர்ந்து 108 நாட்கள் நடந்தது.108ஆவது நாள் மதுரை தமிழ்ச் சங்கப் புலவர்கள் வருகை புரிந்து "முத்தமிழ்க் கலா வித்துவ ரத்தினங்கள்" என்ற பட்டத்தை வழங்கினர்.

1942ஆம் ஆண்டு ஃபெப்ருவரி 2ஆம் தேதி மதுரையில் , பி.எத்திராஜுலு அவர்கள் எழுதிய ஔவையார் நாடகம் அரங்கேறியது. இந்நாடகத்தில் கதாநாயகன் கிடையாது.கதாநாயகி உண்டு...ஆனால் கதாநாயகியும் ஒரு மூதாட்டி.காதல் காட்சிகள் இல்லை.நாடக இலக்கணப்படி தோன்றல், திரிதல் ஆகிய முறைகளை அனுசரித்து எழுதப்படாத புதுமை நாடகம்.இந்நாடகம் மகத்தான வெற்றி பெற்றது. தமிழ் நாடக உலகிற்கே மாபெரும் வெற்றி எனலாம்.இந்நாடகத்தில் ஔவையாராக நடித்தார் டி.கே.சண்முகம் அவர்கள்.இது அவரது நாடக வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த மாபெரும் பேறு எனலாம்.இதற்கு பின்னர் ஔவையார் என்ற அடைமொழியோடு "ஔவை சண்முகம்' என்று அழைக்கப்பட்டார் அவர்.

கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை, டி.கே,எஸ். சண்முகத்தின் ஔவையார் நடிப்பைப் பாராட்டி கவி ஒன்று புனைந்தார்

மந்திரமோ தந்திரமோ மாயமோ சண்முகத்தின்
விந்தை நடிப்பு விசித்திரமோ? - செந்தமிழ்நாடு
அன்றுகண்டு போற்றி அடிபணிந்த ஔவையைநாம்
இன்று கண்ட காட்சி இது

ஔவையின் நடிப்பை விமரிசித்த கல்கி அவர்கள்-

"நடிப்புத் திறமையை பொறுத்த வரையில் இந்நாடகத்தில் ஔவைப்பாட்டியாக நடிக்கும் திரு டி.கே.சண்முகம் அவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என சிபாரிசு செய்கிறேன்.வேஷம்,பேச்சு,நடை, உடை, பாவனை எல்லாம் அவ்வளவு பொருத்தம்.நடிப்பு அபாரம்" என்று கல்கியில்  (3-6-42)விமரிசித்தார்

திரு ஏ.எஸ்.ஏ.சாமி எழுதிய பில்ஹணன், டி.கே.முத்துசாமி எழுதிய காளமேகப் புலவர்,கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய அந்தமான் கைதி, ப.நீலகண்டன் எழுதிய முள்ளில் ரோஜா, ஆகிய நாடகங்களை அரங்கேற்றினர்.

நாடு சுதந்திரம் அடைந்தபின், முதல் வரலாற்று நாடகமாக ரா.வெங்கடாசலம் எழுதிய இமயத்தில் நாம் நாடகமும், (இது சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்தை அடிப்படையாகக் கொண்டது),, தொடர்ந்து திரு நாரண துரைக்கண்ணன் எழுதிய உயிரோவியம் என்ற தமிழ்ச்சுவையும்.நகைச்சுவையும் நிறைந்த நாடகங்கள் அரங்கேறின.

"மனுஷ்யன்" எனற பா.ஆதிமூலம், நா.சோமசுந்தரம் ஆகியோர் மலையாள நாடகத்தைத் தழுவி எழுதிய "மனிதன்" நாடகம் சமுதாய நாடகங்களில் புரட்சியை ஏற்படுத்தியது எனலாம்.

அடுத்ததாக இவர்கள் அரங்கேற்றிய நாடகம் அகிலன் எழுதிய "புயல்".தமிழ் நாடகப் போட்டியில் பரிசு பெற்றது.

திரு ரா.வெங்கடாச்சலம் எழுதிய முதல் முழக்கம் என்ற நாடகத்தை நடத்தி னர் 1950ல் டிகேஎஸ் "ஸ்ரீ பால ஷண்முகானந்த சபை"  நாடகக் குழு தன் நிறைவு விழாவை நடத்தியது.

அதற்கான காரணம் என்ன? பின்னர் என்ன செய்தார்கள் சகோதரர்கள் என  பார்ப்போம்

தொலைக்காட்சி வந்தப் பிறகு நாடகங்கள் அழிந்துவிடும் என ஆங்காங்கே கூக்குரல் கேட்டுக் கொண்டே இருந்தது போல....அன்று..பேசும்படம் வந்த காலகட்டத்தில்..நாடக மேடை அழிந்துவிடும் என்றனர்.

இது குறித்து திரு சண்முகம் அவர்களின் கருத்துக் கேட்கப்பட்டது.அவர் சொன்னார்....

"நாடக மேடையை நல்ல முறையில் கையாண்டவர்கள் யாரும் அழிந்து விடவில்லை.திரைப்பட வளர்ச்சியால் நாடக மேடையும் புதிய புதிய நுணுக்கங்கள் பலவற்றை கையாண்டு போட்டிப் போட்டுக் கொண்டு வளர்ச்சி பெற்றது" என்றார்

இன்றும் அது பொருந்துகிறது அல்லவா? ஆனால் என்ன ஒன்று...

"அந்த நாட்களில் நாடகக் கொட்டகை எல்லாம்...திரைப்பட கொட்டகைகளாக மாற்றிவிட்டனர்.ஆகவே நாடகம் நடத்துபவர்களுக்கு அரங்குகள் கிடைக்கவில்லை.அப்படியே கிடைத்தாலும் பலமடங்கு வாடகை அதிகமாக கொடுக்க வேண்டியிருந்தது.அது நாடக வளர்ச்சிக்கு தடையாய் இருந்தது.டி.கே,சண்முகம் அவர்களின் நாடகசபையும் இந்த காரணத்தினாலேயே மூடுவிழா கண்டது.

பின்னர் 1950ல் நாடகக் கழகம் தோன்றியது.நாடக அரங்குகள் இல்லாத குறையைத் தீர்க்க திறந்தவெளி அரங்குகள் தோன்றின.கலைவிழாக்கள் நடந்தன.ஐயாயிரம் நாற்காலிகள் போடப்பட்டு....முதல் வகுப்பு எட்டணா...இரண்டாம் வகுப்பு நாண்கனா என்று குறைந்த கட்டணத்தில் நாடகங்கள் நடந்தன.பம்மல் முதலியார், டி.கே.எஸ்., ஆகியவர்கள் முயற்சியால் நாடகங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்குக் கிடத்தது.

மீண்டும் டி.கே.எஸ்., குழுவினர் நாடகம் நடத்த ஆரம்பித்தனர்.நா.சோமசுந்தரம் எழுதிய, "இன்ஸ்பெக்டர்". ரா.வெங்கடாசலம் எழுதிய "மனைவி". கல்கியின் "கள்வனின் காதலி" (இதை எஸ்.டி.சுந்தரம் நாடகமாக்கினார்), டி.கே.கோவிந்தனின் :'எது வாழ்வு', ஸ்ரீதரின் "ரத்தபாசம்" (எம்.எஸ்.திரௌபதி முக்கிய வேடம் ஏற்றார்)ஆகிய நாடகங்களை அரங்கேற்றம் செய்தனர்.தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் "தமிழ்ச்செல்வம்" என்ற கல்வி பிரச்சார நாடகம் எழுதினார்.

இந்நேரத்தில்தான் அரு.ராமநாதன் எழுதிய "இராஜ ராஜ சோழன்" எழுதிய நாடகத்தையும் டி.கே.எஸ்.நடத்தினார்.(பின்னர் இன்றுவரை பல நாடகக் குழுக்கள் இந்நாடகத்தை மேடையேற்றி வருகின்றனர்)தஞ்சையில் நடந்த இந்நாடகம் காண 21000க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனராம்.

பின்னர் அகிலன் எழுதிய"வாழ்வில் இன்பம்" நாடகமும் நடந்தது. குழந்தைகளுக்காக "அப்பாவின் ஆசை" என்ற நாடகத்தையும் சிறுவர்கள் நடிக்க அரங்கேற்றினார் சண்முகம்.இந்நாடகத்தில் தான் கமல்ஹாசன் சிறுவனாக இருக்கையில் நடித்தார்.

டி.கே.சண்முகத்தின் நண்பர் பொதுவுடமைக் கட்சி ஜீவானந்தம்.அவருடன் சேர்ந்து பாரதியாரின் பாடல்களை நாட்டுடமையாக்க முயன்று வென்றார்.

இனி டி.கே.சண்முகம் அடைந்த பொறுப்புகளும், விருதுகளும்-

1950ல் நாடகக் கழகம் அமைக்கப்பட்டு...முதல் தலைவர் ஆனார்.நாடகங்களுக்கு கேளிக்கைவரி பெற்று தந்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திவந்த "நடிகன் குரல்" பத்திரிகைக்கு பொறுப்பாசிரியராக மூன்றாண்டுகள் பணியாற்றினார்

தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் பொருளாளராக நான்காண்டுகள் இருந்தார்.

தவிர்த்து, தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம், தில்லி சங்கீத நாடக அகடெமி ஆகியவற்றில் செயற்குழு உறுப்பினராக பணியாற்றினார்

1941ல் மதுரை தமிழ்ச் சங்கத்தின் "முத்தமிழ்க் கலாவித்துவ ரத்தினம்" , 1944ல் ஈரோட்டில் நாடகக் கலை மகாநாட்டில் "ஔவை" பட்டம்,புதுவை ராமகிருஷ்ணா பாடசாலை வழங்கிய "நாடக வேந்தர்:" பட்டம்,குன்றக்குடி அடிகளாரால், "நாடகக் கோ" பட்டம்,1960ல் தமிழ்நாடு சங்கீத நாடகக் கழகம் வழங்கிய,"சிறந்தத் தமிழ் நாடக நடிகர்" பட்டம்,1962ல். புதுதில்லி சங்கீத நாடக அகடெமி வழங்கிய , "சிறந்த நாடக நடிகர்" விருது, 1966ல் கோலாலம்பூரில் நடந்த முதல் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு, அம்மாநாட்டில்"தமிழ் நாடக வரலாறு" என்னும் தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரையை வழங்கினார்.

திரு அண்ணாதுரை அவர்கள் தமிழக முதல்வர் ஆனபோது சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவி அளித்தார்

1971ல் இந்திய அரசின் தேசிய விருதான "பத்மஸ்ரீ" விருது பெற்றார்.

தமிழ் நாடகத் தலைமையாசிரியர், நாடகக் கலை, நெஞ்சு மறக்குதில்லையே, எனது நாடக வாழ்க்கை ஆகிய நூல்களை எழுதினார்.

1973 ஃபெப்ருவரி 15ல் மறைந்தார்.

இவரது நூற்றாண்டை இவரது மகன்கள் டி.கே.எஸ்.கலைவாணன், புகழேந்தி ஆகியோர் 26-4-2012 அன்று சிறப்பாகக் கொண்டாடினர்.இன்று நாடக உலகில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நூறு கலைஞர்களுக்கு "நாடகச் செல்வம்" என்று விருது கொடுத்து கௌரவித்தனர்.

அன்று விருது பெறும் பேறு அடியேனுக்கும் கிடைத்தது.



7 - கதரின் வெற்றி


1922ல் சென்னையில் சதாவதானம் திரு தெ.பொ.கிருஷ்ணசுவாமி பாவலர் அவர்கள் பால மனோகர சபாவை நடத்தி வந்தார்.டி.கே.எஸ்., சகோதரர்களும், இவரது நாடகங்கள் சிலவற்றில் பங்கேற்றனர்.

"ராஜா பர்த்ஹரி" என்ற சரித்திர கற்பனை நாடகத்தையும்,, "கதரின் வெற்றி" என்ற சமூக நாடகத்தையும் இவரே எழுதி தயாரித்து நடித்தார்.இவர் ஒரு தேசியவாதி.

"கதரின் வெற்றி" என்ற நாடகம்தான் முதன் முதலாக நடைபெற்ற தேசிய சமுதாய நாடகம்.இந்நாடகம் பல எதிர்ப்புகளுக்கு இடையே நடைபெற்றது.

நாக்பூர் கொடிப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, "தேசியக் கொடி" என்ற நாடகத்தையும் அரங்கேற்றினார்.

கிருஷ்ணசுவாமி பாவலர் அவர்கள், பம்மல் சம்பந்த முதலியாரிடம் பயின்றவர்.இவர் தமிழ் நாடகக் குழுவை அழைத்துக் கொண்டு லண்டன் சென்று நாடகங்களை நடத்தி வெற்றி கண்டவர்..மகத்தான நெஞ்சுறுதியும்,புலமையும் கொண்டவர்

இவரது பால மனோகர சபை சில ஆண்டுகளே நீடித்தது.பின்னர் மதுரை பாய்ஸ் கம்பெனியில் ஆசிரியராக அமர்ந்து, "பதிபக்தி', பம்பாய் மெயில்', :கதர் பக்தி", "கவர்னர்ஸ் கப்" ஆகிய நாடகங்களை நடத்தினார்.டிகேஸ் சகோதரர்களை தவிர்த்து இவர் குழுவில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.எம்.சிதம்பரநாதன் ஆவார்.

சுதந்திரப் போராட்டத்தில் நாடகக் கலைஞர்கள்
----------------------------------------------------------------------------------

விடுதலை முழக்கம்
--------------------------------

நாட்டில் விடுதலை முழக்கம் ஏற்படுவதற்கு பல நூற்றாண்டுகள் முன்னரே நாடகங்கள் தெருக்கூத்துப் பாணியில் அமைந்திருந்தது.இந்த நாடகக் கூத்துகள் மக்களிடம் விடுதலை வேட்கையைத் தூண்டியது.

பாமர மக்களுக்கும் புரியும் வகையில் எளிய நடையில் அமைந்த பாடல்கள் தெருவெங்கும் முழங்கின

"வாராண்டா வாராண்டா வெள்ளைக்காரன்
வரட்டும் பார்க்கிறேன் தொப்பிக்காரன்
போராண்ட மன்னர் பிறந்த மண்ணில் - அவன்
பொட்டை அதிகாரம் பண்ண வாரான்
வெள்ளைக்காரன் போட்ட வெள்ளிப்பணம் - இங்கே
வேடிக்கைக் காட்டுதாம் நொள்ளைப்பணம் - அந்த்
வெள்ளைப் பணத்துக்கு ஆசைப்பட்டு - நீ
வேஷங் குலையாதே ஆண்டியப்பா"

வெள்ளைககரனின் பணத்துக்கு ஆசைப்பட்டு எவ்வளவு காலம் அடைமையாய்க் கிடப்பது.கிளர்ந்து எழுவீர் என்னும் விடுதலை வேட்கையை இப்பாடல் உணர்த்துகிறது

வீரக்கனல் தெறிக்கும் பாடல்களைப் பாடி மக்களை உணர்ச்சி பிழம்புகளாக மாற்றினர்.மற்றொரு பாடல் இதோ...

ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருவன் போட்டான் வெள்ளரிக்காய்
காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லிக்
காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்
யாரோ ஒழைச்சி பாடுபட்டான் - இவன்
யாரு வந்து வரி கேக்கறது - இங்கே
நேரா வரட்டும் பாத்துக்கிறேன்
சங்கை நெறிச்சு உசிரே மாய்ச்சுடுறேன்

இப்படி பல பாடல்களை நாடக மேடைகளில் பாடி, மக்களிடையே விடுதலை வேட்கையைத் தூண்டினர் நாடகக் கலைஞர்கள்.

பாஸ்கரதாஸ் என்பவர் நாடகமேடையில் தாமே தோன்றி நடிகர்களுக்குப் பயிற்சி அளித்தார்.அந்த நாளிலேயே ஆங்கில ஆட்சியைக் கடுமையாகத் தாக்கி நாடகமேடையை விடுதலை இயக்கச் சாதனையாக மாற்றினார். காந்திஜியின் சிறப்புகளை அடுக்கடுக்காகக் கூறி மக்களை காந்தியத்தில் ஈர்த்த பெருமை இவருக்கு உண்டு .

Sunday, March 13, 2016

6 - குறுஞ்செய்திகள்



1) புளியமாநகர் திரு சுப்பா ரெட்டியார் என்பவர் பாலர் சபை ஒன்றை நடத்தினார்.அவர்கள், இலங்கை,மலேயா,போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று நாடகம் நடத்தினர்.நெடுங்காலம் இயங்கி வந்த இந்தக் குழுவில் நடித்தவர்களில் திரு பி.எஸ்.கோவிந்தன் என்ற நடிகர் குறிப்பிடத்தக்கவர்

2)திருச்சி பால பாரதி சபை "பட்டினத்தார்" நாடகத்தை மேடையேற்றினர்

30எட்டயபுரம் இளையராஜா காசி விஸ்வனாத பாண்டியன்  சிறுவர் நாடகக் குழு என்ற பெயரில் நாடகங்கள் நடத்தினார்.இவர் நுண்கலைகளில் ஆரவமிக்கவர்.நாடகம் எழுதுவதிலும் திறமைசாலி..இராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டு'தயாளன்" என்ற பெயரிலொரு நாடகம் நடத்தினார்.

4)நாடகாசிரியர் டி.பி.பொன்னுசாமி பிள்ளை, "ஸ்ரீ மங்கள பால கானசபா" என்ற குழுவைத் தொடங்கினார்.இவர்கள், "இழந்த காதல்". விமலா அல்லது விதவையின் கண்ணீர்" ஆகிய அரிய சமூக நாடகங்களை நடத்தினர்.இந்த நாடக சபையில் சிவாஜி கணேசன் நடித்துள்ளார்.இந்த நாடக சபையை திரு என்.எஸ்.கிருஷ்ணன் வாங்கி, என்.எஸ்.கே., நாடக சபை எனப் பெயரை மாற்றி நாடகங்களை நடத்தினார்.இந்த நாடக சபையின் பொறுப்பை ஏற்ற எஸ்.வி.சஹஸ்ரநாமம், ப.நீலகண்டன் எழுதிய "நாம் இருவர்" என்ற நாடகத்தையும்,"பைத்தியக்காரன்" என்ற பெயரில் தானே எழுதிய சமுதாய சீர்திருத்த நாடகத்தையும் நடத்தினார்.

5)1944ல் நவாப் ராஜமாணிக்கம் குழுவிலிருந்து விலகிய திரு டி.கே.கிருஷ்ணசாமி, சக்தி நாடக சபையைத் தோற்றுவித்தார்.எஸ்.டி.சுந்தரம் எழுதிய "கவியின் கனவு" என்ற சரித்திர கற்பனை நாடகத்தை அரங்கேற்றினார்.காட்சியமைப்பில் பல புதுமைகளைச் செய்தார்.விதி, தோழன், ஜீவன் ஆகிய நாடகங்களை தங்கள் குழுவிற்காக தயாரித்தார்

6)காரைக்குடி வைரம் அருணாசலம் செட்டியார், "ஸ்ரீராம பால கான சபா"வைத் தோற்றுவித்தார்.திருமழிசையாழ்வார்,பக்த சாருகதாசர்,தாகசாந்தி, குடும்ப வாழ்க்கை முதலிய சில புதிய நாடகங்களை அரங்கேற்றினார்.இதன் மூலம் பல புதிய நடிக, நடிகைகளை உருவாக்கினார்

7)திரு கே.என்.ரத்தினம் தேவி நாடக சபையை உருவாக்கி, கலைஞர் கருணாநிதி எழுதிய "மந்திரிகுமாரி" நாடகத்தையும், திரு ஏ,கே.வேலனின் "சூறாவளி" நாடகத்தையும் அரங்கேற்றினார்

8)இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் "கீசகன்""பிருதிவி ராஜன்", ஆகிய நாடகங்களை கா.நமசிவாய முதலியார் எழுதினார்

9)காந்திஜி பார்த்த ஒரே தமிழ் நாடகம் நந்தனார்.அதில் கூறியிருந்த தீண்டாமை அவரது மனதைத் தொட்டது

10)நவாப் ராஜமாணிக்கம் தனது இன்பசாகரன் என்ற நாடகத்தில் மேடையில் சர்க்காவில் நூல் நூற்பதைக் காட்டினார்

11)எஸ்.வி.ஸகஸ்ரநாமம் தன் சேவா ஸ்டேஜ் மூலம் ரபீந்திர நாத் தாகூரின் 'விஷன்" என்ற சிறுகதையை கண்கள் என்ற பெயரில் நாடகமாக்கினார்

12)அந்த நாளில் புகழ் பெற்ற நாவல்கள் திரைப்படமாவத்ர்கு முன் நாடகங்களாக நடத்தப்பட்டன.தி.ஜானகிராமனின் , நாலு வேலி நிலம், கு.அழகிரிசாமியின் பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், பி.எஸ்.ராமையாவின் போலீஸ்காரன் மகள், கல்கியின் கள்வனின் காதலி ஆகியவைஅவற்றுள் சில

13) சுதந்திர போராட்ட காலத்தில் நாடகங்கள் பெரும் பங்கு பெற்றன."கதரின் வெற்றி" தேசபக்தி" ஆகிய நாடகங்கள் தேசிய உணர்வைச் சொல்லின.

இதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

Thursday, March 10, 2016

5) தமிழ் நாடக முன்னோடிகள்



1)சி.கன்னையா

                     

தமிழ் நாடகத் துறையில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்களுள் திரு சி.கன்னையா குறிப்பிடத்தக்கவர்"

இவர் ஸ்ரீகிருஷ்ண விநோத சபா என்ற பெயரில் நாடகக் குழுவினை அமைத்திருந்தார்."சம்பூர்ண ராமாயணம்"."அரிச்சந்திரா". "தசாவதாரம்',"கிருஷ்ணலீலா"."ஆண்டாள் திருக்கல்யாணம்", "துருவன்","சக்கு பாய்". "பக்த குசேலா","சாகுந்தலா","பகவத் கீதை", முதலான நாடகங்களை நடத்தினார்.

இவர், மேடை அமைப்பிலும், காட்சி அமைப்பிலும் பல சீர்த்திருத்தங்களையும், சிறப்புகளையும் செய்தார்.

அந்நாட்களில், பின்திரைப் பற்றியும், அரங்கப் பொருட்கள் குறித்தும் கவலைப் படாமல் இருந்தனர்."திரௌபதி வஸ்திரா பஹரணம்'நாடகத்தில்,மன்னன் துரியோதனனும், சகுனியும் உரையாடும் காட்சியில், பின்னணித் திரையாக சென்னை போஸ்ட் ஆஃபீசும், மின்சார..டிராம் வண்டிகள் அடங்கிய திரைச்சீலை தொங்க விடப்பட்டிருந்தது.
சுப்பிரமணியன், அரிச்சந்திரன், விதூஷகன் முதலான பாத்திரங்களுக்கு உடைகள் பொருத்தமாக இல்லை.இவற்றையெல்லாம் கன்னையா மாற்றியமைத்தார்.

இவரது நாடகக் காட்சிகளில், குதிரை,யானை,தேர், காளை என அனைத்தையும் கொண்டு வந்தார்.அரச சபையில் இரண்டு தூதர்கள் நின்றுக் கொண்டிருக்க...அவர்களுக்குப் பின்னால் ஐம்பதிற்கும் மேலானோர் நிற்பது போல வெட்டுரு ("கட் அவுட்" )களை வைத்துக் காட்டினார்.

"அரிச்சந்திரா:" நாடகத்தில், மயானக் காட்சியில் பிணம் போல உருவம் செய்து அதற்கு இறுதிச் சடங்குகள் செய்வதைக் காட்டினார்.

இவரது குழுவில் நாற்பதற்கும் மேற்பட்ட அரங்கக் கலைஞர்களும், பத்து லாரிகளுக்கும் மேற்பட்ட அரங்கப் பொருட்களும் இருந்தன.காட்சிச் சிறப்பைப் பார்ப்பதற்கே இவரது நாடகங்களுக்கு கூட்டம் அலை மோதும்.டிக்கட் கிடைக்காமல் திரும்பிச் செல்வர் மக்கள். அதைத் தவிர்க்க முன்பதிவு முறையையும் அறிமுகப் படுத்தினார்.

இவரது "தசாவதாரம்" நாடகம் 1008 நாட்கள் நடைபெற்றது.சென்னையில் நடந்த நாடகத்திற்கு , 700 கிலோமீட்டருக்கும் அப்பால் இருந்த திருநெல்வேலியில் விளம்பரம் செய்யப்பட்டது.மக்கள் அவ்வளவு தொலைவிலிருந்தும் நாடகம் பார்க்க வந்தனர் என இதன் மூலம் தெரிகிறது.

இவரைப் பார்த்து, "மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி", "பால மீன ரஞ்சனி சங்கீத சபை", "ஸ்ரீபால ஷண்முகானந்த சபா", முதலிய நாடக சபைகளும் காட்சியமைப்பில் தங்களது கவனத்தைச் செலுத்தின எனலாம்.

காட்சிகளை பொறுத்தவரை தமிழ் நாடக மேடைக்கு திரு சி.கன்னையா அவர்கள் முன்னோடியாய் திகழ்ந்தார் எனலாம்.

2)நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை
                                   
மதுரை பாலமீனரஞ்சனி சபா என்றும், மதுரை தேவி பால விநோத சங்கீத சபா என்றும் பால நாடக சபைகளை நடத்தியவர் ராஜ மாணிக்கம் பிள்ளை ஆவார்.

"பக்த ராமதாஸ்" நாடகத்தில் நவாப் ஆக நடித்ததால் நவாப் ராஜமாணிக்கம் அன அழைக்கப்பட்டார்.இவரும் நாடகக் காட்சி அமைப்புகளில் சாதனை புரிந்தவர் எனலாம்.

"கிருஷ்ண லீலா", "தசாவதாரம்"."இராமாயணம்"."ஐயப்பன்","ஏசுநாதர்", "பக்த ராமதாஸ்","குமார விஜயம்","சக்தி லீலா", என புராண நாடகங்களை நடத்தியவர்.

மேடையில் இவர் உருவாக்கிக் காட்டிய தந்திரக் காட்சிகள் பல ரசிகர்களைக் கவர்ந்தன.

"குமார விஜயம்" என்ற நாடகத்தில் முருகன் பிறப்பைக் காட்டுகையில்  ஆறு சுடர்கள் ஆறு குழந்தைகளாக மாறுவதைக் காட்டினார்.

"கிருஷ்ண லீலா" நாடகத்தில் குழந்தை கண்ணனைக் கூடையில் வைத்துக் கொண்டு வசுதேவர் கொட்டும் மழையில் செல்வதும், ஐந்து தலை நாகம் வந்து குடை பிடிப்பதையும் காட்டினார்

யமுனை நதி பிளந்து  வழி விடுவதையும், நதிநீர் அலம்புவதும், மீன்கள் துள்ளி விளையாடுவதும் காட்டப்பட்டது.

தசாவதாரம் நாடகத்தில் சிறைக் காவலர்கள் மயங்கி இருக்க, இரும்புச் சாவி தானே நகர்ந்து பூட்டைத் திறப்பதும்,கதவு தானாக திறந்து கொள்வதும் காட்டப்பட்டது

இந்தத் தந்திர முறைகளே பின்னாட்களில், ஆர்.எஸ்,மனோகரும், ஹெரான் ராமசாமியும் தங்கள் நாடகங்களில் பின்பற்றினர் எனலாம்.

தந்திரக் காட்சிகளின் சிறப்புக்காகவே இவரது நாடகங்கள் ஆயிரம் முறைகளுக்கு மேல் நடத்தப் பட்டன.

இவரது ஐயப்பன் நாடகம் நடத்திய போது ஐயப்ப ஊர்வலம் நடத்தப் பட்டது.ஐயப்ப பக்தியும் பரவத் தொடங்கியது எனலாம்.

இவரது ராமாயணம் நடந்த காலகட்டத்தில், அது நடந்த இடத்தில் இருந்த பஸ் நிறுத்த இடம் ராமாயணம் ஸ்டாப் என்றே சொல்லப்பட்டது

திரு எஸ் எஸ் வாசன் அவர்கள் தனது ஔவையார் திரைப்படத்தின் வெளியீட்டை  ராமாயணம் நாடகக் கூட்டத்தைப் பார்த்து தள்ளி வைத்தார் என்றும் சொல்வர்.

3) எம்.கந்தசாமி முதலியார்

தொழில்முறைநாடகக் குழுக்களுக்கு ஆசிரியராகக் கிடைத்த மற்றொரு மேதை திரு எம்.கந்தசாமி முதலியார் ஆவார்கள்.இவர் எம்.கே.ராதா அவர்களின் தந்தை ஆவார்.
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிக்கு ஆசிரியராக வந்த இவர், திரு ஜே.ஆர்.ரங்காராஜு அவர்களின் புகழ் பெற்ற நாவல்களான "இராஜாம்பாள்", "இராஜேந்திரா","சந்திரகாந்தா",ஆனந்தகிருஷ்ணன்","மோகனசுந்தரம்", ஆகிய நாவல்களை நாடகமாக்கினார்.

1925ஆம் ஆண்டு இறுதியில் திரு.எம்.கந்தசாமி முதலியார் தன் மகன் எம்.கே.ராதாவுடன் டி.கே.எஸ்., சகோதரர்கள் நடத்தி வந்த நாடகக்குழுவிற்கு ஆசிரியராக வந்தார்.

புகழ்பெற்ற நாவலாசிரியராய் திகழ்ந்து கொண்டிருந்த வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய, "மேனகா" என்னும் நாவலை அவர்களுக்காக நாடகமாக்கித் தந்தார்.

நடிப்புக் கலையைப் பயிற்றுவிப்பதில் கந்தசாமி முதலியார் நிபுணராய்த் திகழ்ந்தார்.மாதக் கணக்கில் ஒத்திகைப் பார்த்த பின்னரே நாடகங்கள் அரங்கேறின.

பம்மல் சம்பந்த முதலியார் நடத்தி வந்த "சுகுண விலாச சபையில்" இவர் முதன் முதலாய் பெண் வேடத்தில் இவர் நடித்தார் எனலாம்.பின்னர் பாலாமணி அம்மையார் நாடக சபையில் ஆசிரியரான இவர் "மனோகரா" நாடகத்தைத் தயாரித்தார்

பின் இதே நாடகத்தை திரு பி.எஸ்.வேலு நாயர் நாடக சபையினருக்கு பயிற்றுவித்தார்.

பொதுவாக பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகங்கள், மற்றும் ஏனைய சமுதாய நாவல் நாடகங்களையும் தொழில் முறை நாடக சபைகளிடம் பரப்பியவர் இவர்.1939ல் இயற்கை எய்தினார்.
இவரை நாடக மறுமலர்ச்சித் தந்தை எனக் கூறுவர்

4) பாலாமணி அம்மாள்

                         

பெண்களைக் கொண்டே நாடகக் குழுவை நடத்தியவர் பாலாமணி அம்மையார். ஆவார்.தனது நாடகக் குழுவிற்கு"பாலாமணி அம்மாள் நாடகக் குழு" என்றே பெயரிட்டார்.
கும்பகோணத்தில் நடைபெறும் இவர் நாடகத்திற்கு மாயவரத்திலிருந்து சிறப்பு ரயிலே விடப்பட்டது.இந்த ரயிலுக்கு, "பாலாமணி ஸ்பெஷல்" என்று பெயர்.

இவரைத் தவிர்த்து, பி.பி.ஜானகி அம்மாள், பி.இரத்தினாம்பாள்,வேதவல்லித் தாயார்,விஜயலக்ஷ்மி கண்ணாமணி,பி.இராஜத்தம்மாள் முதலான பெண்மணிகளும் நாடகத் துறையில் சாதனைப் படைத்த பெண்கள் ஆவர்.

Wednesday, March 9, 2016

4) தமிழ் நாடகத் தந்தை



தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என சங்கரதாஸ் சுவாமிகள் போற்றப் பட்டார் என்றால்....தமிழ் நாடகத் தந்தை என போற்றப் பட்டவர் பம்மல் சம்பந்த முதலியார் ஆவார்.

தமிழ் நாடகங்களை முதன் முதலில் உரை நடையில் எழுதிய வழக்கறிஞர்,நீதியரசர்,நாடக ஆசிரியர், மேடை நாடக நடிகர்,எழுத்தாளர்,நாடக இயக்குநர் என பல பரிமாணங்களைக் கொண்டவர் பம்மல் சம்பந்த உதலியார்.

சென்னையில் பம்மல் விஜயரங்க முதலியாருக்கும், மாணிக்க வேலு அம்மையாருக்கும் 1873ஆம் ஆண்டு ஃபெப்ரவரி 9ஆம் நாள் சம்பந்தம் பிறந்தார்,விஜயரங்க முதலியார், அரசுப் பணியில் இருந்தாலும், தானே செலவு செய்து பல தமிழ் புத்தகங்களை வெளியிட்டு வந்தார்.அதன் காரணமாக அவரது வீட்டில் தமிழ், ஆங்கிலம் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன.சம்பந்தம் எல்லாப் புத்தகங்களையும் ஆர்வத்துடன் படித்தார்.சட்டக் கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் 1924 ஆம் ஆண்டு முதல்1928 வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி புரிந்தார்

சிறுவயதிலேயே ஆங்கில, தமிழ் நாடகங்களைப் பார்த்தவர், அதன் நினைவாகவே இருந்தார்.1891ல் பெல்லாரியிலிருந்து வந்த கிருஷ்ணமாச்சார்லு என்ற ஆந்திர நடிகர் நடித்த நாடகங்களை பார்த்து இவர் தமிழ் நாடகப் பற்று அதிகரித்தது.அவரது நாடகக் குழுவில் படித்தவர்கள் எல்லாம் சேர்ந்திருப்பதைக் கண்ட சம்பந்தம் தாமும் அப்படி ஒரு குழுவை ஆரம்பிக்க எண்ணினார்.அதில் உருவானதுதான் "சுகுண விலாச சபா".1891 ஜூலை முதல் நாள் இந்த சபா ஆரம்பிக்கப்பட்டது.

இதில் பலதரப்பட்ட அறிஞர்களையும் சேர்த்து, நாடகங்களில் நடிக்கச் செய்தார்.இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள், சிர் சி.பி.ராமசுவாமி ஐயர்,எஸ்.சத்திய மூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார் (எம்.கே ராதாவின் தந்தை),சிர் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீநிவாச ஐயங்கார்,வி.சி.கோபாலரத்தினம் ஆகியோர் ஆவர்.

சம்பந்த முதலியார், 90க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்.ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்களை மொழி பெயர்த்துள்ளார்.

As You like it
macbeth
Cymbeline
Merchant of Venice

ஆகிய நாடகங்களை சுவைகுன்றாமல் முறையே, "அமலாதித்யன்". :"நீ விரும்பியபடியே", "மகபதி","சிம்மளநாதன்","வணிபுர வாணிகன்" என்ற பெயர்களில் மொழி பெயர்த்துள்ளார்.

தவிர்த்து, வடமொழியிலிருந்து காளிதாசரின், "மாளவிகாக்னிமித்திரம்", ஹர்ஷவர்த்தனரின், "இரத்தினாவளி" ஆகியவற்றை தமிழில் மொழி பெயர்த்தார்..

தன் கற்பனையிலிருந்து பல நாடகங்களை எழுதினார்.குறிப்பாக, "மனோகரன்" , "இரண்டு நண்பர்கள்". சபாபதி" ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

இன்றும் போற்றப்படும், மனோகரன் நாடகத்திற்கு, சுவாமி சங்கரதாஸ் சுவாமிகளும், உடுமலை முத்துசுவாமி கவிராயரும் பாடல்களை எழுதியுள்ளனர்.

எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் என நாடகங்கள் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில்,ஐந்து மணி நேரத்தில் நாடகம் முடியும்படி மாற்றியவர் பம்மல் சம்பந்த முதலியார் ஆவார்.

எதிர்க்கதை நாடகம் என்ற வகையை உருவாக்கியவர் இவர்.சமுதாயத்தில் பரவலாக வழங்கிவரும் பழைய கதையின் மூலக்கருத்திற்கு எதிரான கருத்தைக் கொண்டு நகைச்சுவையாகவே எழுதப்படுவது எதிர்க்கதை நாடகம் எனலாம்.இதற்காக அரிச்சந்திரன் கதையை சந்திரஹரி என மாற்றி எழுதினார்.

எந்நிலையிலும் பொய் பேசாத ஒருவனைப் பற்றியது அரிச்சந்திரன் கதை. எந்நிலையிலும் பொய்யே பேசும் ஒருவனைப் பற்றிய வேடிக்கைக் கதை சந்திரஹரியாகும்.

பின்னர்...இதையே என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் திரைப்படமாக்கினார். ;

இவரைப் பற்றி மேலும் சில குறிப்புகள்_

22 வயதில் இவர் எழுதிய முதல் நாடகம், "லீலாவதி சுலோசன"
சங்கீத நாடக விருது 1959ல் பெற்றார்
1916ல் நாடகப் பேராசிரியர் விருது பெற்றார்
1963ல் இந்திய அரசின் பத்மபூஷன் விருது பெற்றார்.

இவரது நூல்கள் பல நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.அவற்றுள் சில

இந்தியனும் ஹிட்லரும்
இல்லறமும் துறவறமும்
ஒன்பது குட்டி நாடகங்கள்
கள்வர் தலைவன்
சபாபதி
நான் குற்றவாளி
மனோகரா

இன்றும் தமிழ் நாடகங்கள் மக்களின் பார்வையில் உயர்ந்த மதிப்பிற்குரியவனாய்த் திகழ இவர் முதல் காரணமாகும்.ஆகவேதான் "நாடகக் கலைப் பிதாமகர்" எனப் போற்றப்பட்டார்.

1967ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 24ஆம் நாள் அமரர ஆனார்.இவரது இழப்பு தமிழ் நாடக மேடைக்கு ஈடுசெய்ய முடியா இழப்பாகும்.

Tuesday, March 8, 2016

3) தமிழ் நாடகத் தலைமையாசிரியர்



19ஆம் நூற்றாண்டு இறுதியில் கும்பகோணம் நடேச தீட்சிதர் என்பவர் துவக்கிய கல்யாணராமய்யர் நாடகக் குழுவினர்தான் நாடகத்துறையில் புதிய பாதை கண்டவர்கள் எனலாம்.

தமிழ் நாடகக் கலைக்கு மகத்தானபணி ஆற்றிய தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் இக்குழுவில்தான் நடிகராகவும், நாடக ஆசிரியராகவும் இருந்தார்.

அந்தக் காலக்கட்டத்தில், நாடகத்தைத் தொழிலாகக் கொண்ட, தமிழ்நாட்டு நாடகக் குழுக்கள் அனைத்திலும் பெரும்பாலும் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்களே நடந்தன எனலாம்.

"ஒரு நாடகம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், அந்த நாடகத்தில் பங்கு கொள்ளும் நடிகர்களிடையே ஒழுங்கும், நியதியும், கட்டுப்பாடும் இருக்க வேண்டும்"..இப்படிக் குரல் கொடுத்தவர் சுவாமிகள்

சுவாமிகள் என்றாலே அது சங்கரதாஸ் சுவாமிகளையேக் குறித்தது அந்நாளில்.அவருடைய நாடக அமைப்புத் திறன்,அதில் காணப்பட்ட நுணுக்கம்,காணப்பட்ட அழகு,நாடக பாத்திரங்கள் வாயிலாகப் பாடல்களிலும், உரையாடல்களிலும் அவர் வெளியிட்ட கருத்து...அதனால் நாடகம் பார்த்தோர் அடைந்த பயன்.இவற்றின் மூலம் சுவாமிகளின் புலமை நன்கு வெளிப்பட்டது.

அவர் சுமார் நாற்பது நாடகங்கள் எழுதியுள்ளார்.அவர் எடுத்துக் கொண்ட கதைகள் பெரும்பாலும் பழங்கதைகளே ஆகும்.

"அபிமன்ய சுந்தரி,பவளக்கொடி,சீமந்தினி,சதி அனுசியா,பிரகலாதா,சிறுத்தொண்டர்,வள்ளித்திருமணம்,சத்தியவான் சாவித்திரி,சுலோசன சதி" இப்படிப்பட்ட கதைகள் ஆகும்.
வடமொழி நாடகமாகிய "மிருச்சகடி" யையும்ஷேக்ஸ்பியரின் "ரோமியோ ஜூலியட்' "சிம்பலைன்" ஆகிய நாடகங்களையும், "மணிமேகலை","பிரபுலிங்க லீலை" ஆகிய நாடகங்களயும்...தமிழில் நாடகமாக்கித் தந்தார் சுவாமிகள்.இவர் எழுதிய நாடகங்கள் ஆயிரக் கணக்கில் நடிக்கப்பட்டவைகளாகின.

இவரது நாடகங்களில், வெண்பா,கலித்துகை,விருத்தம்,சந்தம், சிந்து,வண்ணம், ஓரடி,கும்பி,கலிவெண்பா, தாழிசை,கீர்த்தனை இப்படி பலவகைப்பட்ட பாடல்களும், சிறுபகுதி உரையாடல்களும் நிறைந்திருக்கும்.அப்போது உரைநடை அதிகமாக நாடகங்களில் வராத காலமாதலால், பெரும்பகுதி பாடல்களாகவே இருந்தன.

நாடகங்களில் பாட்டா...என இளைய தலைமுறையினர் நினைக்கக்கூடும்.

அந்நாட்களில் குறைந்தது நூறு பாடல்களாவது ஒரு நாடகத்தில் இருக்கும்.இரவல் குரலில் பாடும் வழக்கம் இல்லை.நாடகத்தில் நடிப்பவர்களே பாடியும் நடிக்க வேண்டும்.சிரித்தால், அழுதால், கோபித்தால், சண்டை போட்டால் எல்லமே பாட்டுகள்தான்..உரையாடல்கள் என ஏதேனும் இருந்தால், அவை பாட்டின் பொருளை விளக்குவதாகவே இருக்கும்.

இந்நிலையில் , நடிப்பைத் தொழிலாகக் கொண்ட குழுக்களுக்கு, உரையாடல்களாக எழுதிக் கொடுத்து நடிக்கும் முறையைக் கொணர்ந்தார் சுவாமிகள்.இதனால் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றப்பட்டார்.

ஒரு காலகட்டத்தில் நாடகத்தில் நடித்த பெரிய நடிகர்கள்...யாருக்கும் கட்டுப்படாமல் வசந்ங்ளை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பேசும் நிலை ஏற்பட சங்கரதாஸ் சுவாமிகள் "சமரச சன்மார்க்க சபை" என்ற ஒரு சபையை 1910 ஆம் ஆண்டு தொடங்கினார்.இதில், மதுரை மாரியப்ப சுவாமிகள், எஸ்.ஜி.கிட்டப்பா ஆகியோர் நடிகர்களாக விளங்கினர்.

இதைத் தொடர்ந்து பல நாடகசபைகள் தோன்றின. இவற்றில் எல்லாம் சிறுவர்களே நடிகர்களாகத் திகழ்ந்தனர்

மதுரை பாலமீன ரஞ்சனி சங்கீத சபை
மதுரை ஒரிஜினல் பாய்ஸ்
மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபா

ஆகியவை குறிப்பிடத்தக்கன..

தமிழ் நாடகக் கலையை வளர்த்த பெருமையில் முக்கிய இடம் பெற்றவர்கள் பலர் பாலர் நாடக சபையினர் எனலாம்.

எம்.ஜி.சக்கரபாணி, எம்.ஜி.ராமசந்திரன்,காளி என்.ரத்தினம்,பி.யூ.சின்னப்பா மற்றும் கே.பி.காமாட்சி, கே.பி.கேசவன்,எம்.கே.ராதா,பக்கிரிசாமி பிள்ளை முதலியோர் இவர்களில் சிலர் ஆவர்.

மதுரை பலமீன ரஞ்சனி சபா மூலம், கே.சாரங்கபாணி,நவாப் ராஜமாணிக்கம்,பி.டி.சம்பந்தம், பொன்னுசாமி பிள்ளை, எம்.ஆர்.ராதா, எஸ்.வி.வெங்கட்ராமன், சிதம்பரம் ஜெயராமன் ஆகியவர்கள் வந்தனர்

1914ல் சிறுவர்களை நடிகர்களாகக் கொண்ட நாடக சபைக்கு சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய நாடகங்களுக்கு உரையாடல்களை முறையாக எழுதினார்.இவரது அனைத்து நாடகங்களும் தருமநெறியை வலியுறுத்தப் பெற்றிருக்கும்.இவரது நாடகப் பாடல்களில் உணர்ச்சி முதன்மை பெற்றிருக்கும்

ஒரேநாள் இரவில் நான்கு மணி நேரம் நாடகம் முழுவதையும், அடித்தல், திருத்தல் இல்லாமல் .பாடல்கள் வசனங்களுடன் எழுதும் தெய்வீக ஆற்றல் பெற்றவர் சுவாமிகள்.

பின்னாளில், என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள், சுவாமிகள் நினைவு நாள் ஒன்றில்,"சங்கரதாஸ் சுவாமிகள் நாடக உலகின் இமயமலை" என்று குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் 1867ல் பிறந்து , நாடக உலகின் இமயமாகத் திகழ்ந்த சுவாமிகள் 1922ல் அமரர் ஆனார். 

Sunday, March 6, 2016

2) நாடக வரலாறு

தமிழ் நாடகங்களின் தோற்றம்
--------------------------------------------------------

தமிழ் நாடகங்களின் தோற்றத்தை விவரிக்கும், தலைச் சங்ககாலத்து நூல் அகத்தியம். நாடகம் என்பது பாட்டும், நடிப்பும் கொண்டது என்று தமிழ்மரபு வழி கூறுகிறது.சங்கக் காலத்தில் குணநூல், கூத்த நூல், சயந்தம் நூல், மதிவாணர் நாடகத் தமிழர்,முறுவல் போன்ற நாடக நூல்கள் இருந்தன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றது.

மேலும், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் தமிழ் நாடகக்கலை பற்றிய சான்றுகள் உள்ளன.

நாடகத் தோற்றம்
-----------------------------------

இறைவன் ஆடிய கூத்தின் உடுக்கையிலிருந்து பிறந்தது ஓசை.ஓசையின் சுழலிலிருந்து இசையின் உயிர்ப்பும்,அதினின்று ஆட்டமும், ஆட்டத்திலிருந்து கூத்தின் ஒழுங்கும், நாட்டியக் கோப்பும், நாடக வகைகளும் தோன்றின எனக் கூத்த நூலில் சொல்லப்படுகிறது.இவாறு பிறந்த நாடகம் தொல்காப்பியர் காலத்தில் வளர்ச்சியடைந்து புகழ் பெற்றது.தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில்,
"பாடல் சான்ற புலநெறி வழக்கம்" என்கிறார். இவ்வரிகள், தொல்காப்பியர் வாழ்ந்ததற்கு முற்பட்ட காலகட்டங்களிலேயே தமிழில் நாடகமும்,நாடகங்களில் பாடல்களும் இடம் பெற்றிருந்ததை அறியலாம்.நாடக வழக்கைப் பற்றி மேலும் தொல்காப்பியம் கூறுகிறது....

"நகையே அழுகை இனிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பா லெட்டாம் மெய்ப்பா என்பர்"

சுவைபடவருவதெல்லாம் ஓரிடத்தில் வந்தன.பொருளின் தன்மையினை மட்டும் உணர்த்தி, வடிவம் உணர்த்தபடாதது.
பொருளின் தன்மையினையும் உணர்த்தி, வடிவத்தையும் உணர்த்துவது என பொருள்கள் இருவகைப் படும்.
பொருளின் த்ன்மையினை உணர்த்தி, வடிவம் உணர்த்தப்படாதது...காமம், வெகுளி(சினம்),மயக்கம்,இன்பம்,துன்பம் முதலியன.இவையே நடிப்பின் இன்றியமையாக் கூறுகளாக , அனைத்து நாடுகளின் மொழி,நாடகம், திரைப்படம் போன்ற கலைவடிவங்களில் காணப்படுகின்றன.

இப்படி நாடகச்சுவைகளைக் கூறுவதால்...நாடகக்கலை தொல்காப்பியர் காலத்திற்கும் முற்பட்டது எனலாம்.

நாடக அரங்கம்
---------------------------

நாடகம் நடைபெறும் அரங்கம் இந்தந்த அளவில்தான் இருக்க வேண்டும் என்கிறது சிலப்பதிகாரம்

"நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோலளவு இருப்பத்து நல்விரலாக
எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பின தாகி
உத்திரப் பலகையோடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோ லாக
ஏற்ற வாயில் இரண்டுடன்
தோன்றிய அரங்கில்"
    (சிலப்பதிகாரம்.அரங்கேற்று காதை)

அரங்கம் அளக்கப்படும் கோலானது, ஒரு சாண் மூங்கிலைக் கொண்டு, மனிதர் ஒருவர் பெருவிரல் இருபத்தினான்கு கொண்ட அளவில் ஒரு கோல் நறுக்கினர்( அதுவே அக்கால அளவு கோலாகும்)

எட்டு அணுக்கள் கொண்டது ஒரு தேர்ந்துகள்.எட்டு தேர்ந்துகள் ஒரு இம்மி.எட்டு இம்மிகள் ஒரு எள்.எட்டு எள் கொண்டது ஒரு நெல்.எட்டு நெல் ஒரு பெருவிரல்.

இதன்படி சிலப்பதிகாரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அரங்கின் அகலம் ஏழு கோலாகவும்..நீளம் எட்டு கோலாகவும்..உயரம் ஒரு கோலாகவும் அரங்கின் மேற்பகுதியில் பலகை பதித்து அதற்கும் தூண்களின் மேல் பாவிய உத்திரப்பலகைக்கும் இடையே நான்குகோல் உயரம் இருக்கச்செய்து அரங்கினுள் செல்லவும், வெளியேறவும் இருவாயில்கள் அமைத்துத், தூண்களின் நிழல்கள் ஆடும் இடத்தில் விழாமல்நிலை விளக்கினைப் பொறுத்தினராம்.

நாடகத்திரைகள்
--------------------------

மூன்றுவகையான திரைகள் பண்டைகாலந் தொட்டு பழக்கத்தில் உள்ளன.அவை...

1) ஒருமுக எழினி -  ஒருமுகமாக சுரிக்கிக் கட்டப்பெற்ற திரையாகும் (இன்றும் சென்னை நாடகக் குழுக்களால் நாடகமேடைகளில் பயன்படுத்தப் படுகின்றன)

2)பொருமுக எழினி - ஒரு திரை இரண்டாகப் பிரிக்கப்பட்டு  ஒன்றோடொன்று சேரவும், பிரிக்கவும் கூடியதாக அமைந்த திரையாகும் (இம்முறை இப்பொழுது தட்டி என அழைக்கப் படுகிறது.இம்முறை பயிற்றுமுறை நாடகக் குழுக்கள் மற்றும் அரங்க அமைப்பாளர்களால் பயன்படுத்தப் படுகிறது)

3)கந்து வரல் எழினி- மேற்கட்டிலிருந்து கீழே விரிந்து விடவும்,பின்னர் சுருக்கிக் கொள்ளவும் கூடியதாகத் தொங்கும் திரையாக அமையப் பெற்றுள்ள திரை..

இவற்றைத் தவிர்த்து, முத்து மாலைகள்,பூமாலைகளை வளைவாகத் தொங்கவிட்டு நாடக ரங்கினை அலங்கரித்தனர்

அரங்கைப் பயன் படுத்தும் முறை
-----------------------------------------------------------------

இன்றும் நாடக மேடையில், ஒரு நடிகர் வீட்டின் உள்ளே செல்ல வலப்புறமும், வெளியே செல்ல இடப்புறமும் பயன்படுத்துகின்றனர்.இம்முறை சிலப்பதிகாரக் காலத்திலிருந்து வருவதை இப்பாடலால் காணமுடிகிறது

"இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப
வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்கு எனப் பொருந்தி
இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த
தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்"

இப்பாடலில், குயிலுவர் என்பது இசைக்கருவிகளை வாசிப்பவர்கள்.நிலையிடம் ஒருகோல் என்ற ஒழுங்குபடி நின்றனர்.அனைத்தும் ஒழுங்கானதும், மாதவி தன் வலதுகாலை முன் வைத்து....பொருமிக எழினியுள்ள வலத்தூண் பக்கம் சேர்ந்தாள்.ஒருமிக எழினியுள்ள இடதுத்தூண் பக்கம் தோரிய மடந்தையர் என்ற...ஆடி மூத்தவர்,நாட்டியத்திற்கு துணை செய்பவர் , மாதவி வந்தபடியே வலக்காலை முன்வைத்து வந்து நின்றனர் "என்கின்றது இப்பாடல் வரிகள்.

நடிப்பும், இசையும்
---------------------------------------

இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினில் புணர்ந்து
பதினோர் ஆடலும், பாடலும், கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து - ஆங்கு
ஆடலும், பாடலும், பாணியும், தூக்கும்,
கூடிய நெறியின் கொளுத்தும் காலை,
பாண்டியும், பிணையலும், எழில் கையும், தொழில் கையும்
கொண்டவகை அறிந்து, கூத்து வரு காலை
கூடை செய்த கை பிண்டியில் களைதலும்
ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும்
குரவையும் வரியும் விரவல செலுத்தி
ஆடற்கு அமைந்த ஆசான்- தன்னோடும்
                     (அரங்கேற்ற காதை)
இப்பாடல் வரிகளின் பொருள் வருமாறு-

கூத்து வகைகள் இரண்டு
அகக்கூத்து - அரசனுக்காக ஆடும் கூத்தை "வேத்தியலை:" அகக்கூத்து என்பர்
புறக்கூத்து- பிறருக்காக ஆடும் பொதுவியல்

நாடகம், நாட்டியம் இரண்டும் கூத்து என்றே அழைக்கப் பெற்றது.அகக்கூத்து இரு வகைகளைக் கொண்டிருந்தது.சாந்திக் கூத்து, மற்றும் விநோதக் கூத்து.

சாந்திக் கூத்து நான்கு வகைப்படும்

சாக்கம்- தாளத்தின் அடைப்படையைக் கொண்டது
மெய்க் கூத்து- அகச்சுவையினை அடிப்படையாகக் கொண்டது
அபிநயக்கூத்து- பாட்டின் பொருளை அபிநயத்து கதையை தழுவாது வருவது
நாடகக் கூத்து- கதையினைத் தழுவி நடிக்கும் கூத்தாகும்
விநோதக் கூத்து- பொது மக்களின் பொழுது போக்கு கூத்தாக ஆடல் பெற்றது...இந்த விநோதக் கூத்து ஏழு வகைப்படும்
குரவைக் கூத்து- ஒன்பது கலைஞர்கள் காதல் அல்லது வெற்றிப்பாக்கள் பாடி கை கோர்த்து ஆடும் கூத்தாகும்
கழாய்க்கூத்து- கலை நடனம் என அழைக்கப்படும் கூத்தாகும்
குடக்கூத்து- கரகம் எனாழைக்கப்படும் கூத்து
கரணம்- பாய்ந்து ஆடப்படும் கூத்தாகும்
பார்வைக்கூத்து- கண்களினால் நோக்கப்படும் கூத்தாகும்
வசைக்கூத்து- நகைச்சுவை உணர்வுகளை மையமாகக் கொண்ட கூத்தாகும்
சாமியாட்டம் அல்லது வெறியாட்டம்
வென்றிக் கூத்து- மாற்றான் ஒடுக்கப்படுதலும் மற்றும் மன்னனின் உணர்ச்சியினைப் பற்றியும் வெளிக்காட்டக் கூடிய கூத்தாகும்
இந்தக் கூத்தில் தாளத்திற்கேற்ப இசைந்து நடிக்கப்படுவது நாடகம் எனப்பட்டது

கடைச்சங்கக் காலத்தில் நாடகத்தழிழ்
----------------------------------------------------------------------

கழைவளர் அடுக்கத்து இயலி யாடுமயில்
விளைவுகள விறலியிற் தோன்று நாடன்

என்ற கபிலரின் அகநாநூற்றுப் பாடல், "மூங்கில்கள் வளர்ந்திருக்கும் மலையடுக்குகளிலே உலவி ஆடுகின்ற மயில் இனங்கள், களத்திலே புகுந்து ஆடும் விறலியைப் போலத் தோன்றும் நாட்டினன் என்கிறது இவ்வரிகள்

:படுகண் இமிழ்கொளை பயின்றனர் ஆடும்
களிநாள் அரங்கின் அணிநலம் புரையும்"

என்ற வரிகளில் ஆடல் அரங்குகள் பற்றிய சான்றுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.இதிலிருந்து கடைச்சங்கக் காலத்தில் தமிழ் நாடகம் செழுமைப் பெற்று விளங்கியது குறிப்பிடத்தக்கது

பின்னர், கடைச்சங்கக் காலம் வரை செழுமையுடன் இருந்தது நாடகக்கலை. கிபி 3ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி 5ஆம் நூற்றாண்டுவரை நாட்டில் புத்த-சமண மதங்கள் பரப்பப்பட்டன.அச்சமயம் இருந்த நாடகங்களை "சிற்றின்ப வேட்கையினை எழுப்புவது" என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.ஆகவே, இக்காலக்கட்டத்தில் தமிழ் நாடகக் கலை தழைக்க வாய்ப்பில்லாமல் போனது.

பின் கிபி 900 முதல் 1300 வரை சோழமன்னர்களின் ஆட்சியில் தமிழகத்தின் கலைகள் வளர்ச்ச்யடையத் தொடங்கின.

கிபி 846ஆம் ஆண்டு விஜயாலய சோழனால் எழுச்சிப் பெற்ற சோழப்பேரரசு முதலாம் பராந்தக சோழன் ஆட்சியின் பின்னர் வலுப்பெற்றது.கிபி1246 முதல் 1272 வரை ஆட்சி செய்த மூன்றாம் ராஜேந்திர சோழன் காலத்தில் நாடகக்கலை வளர்ச்சி பெற்றது.

கிபி 17ஆம் நூற்றாண்டின் காலப்பகுதியில் சோழ அரசர்களின் ஆதரவில் அரண்மனைகள், கோயில்கள் போன்றவற்றில் நடத்தப்பெற்ற நாடகங்கள் மக்கள் மன்றங்களில் நடத்தப்பட்டன. சங்ககாலத்தில் நடைபெற்ற பொதுவியற் கூத்துகள் போலவே நாடகக்கலை மக்களின் கலையாக வளர்ச்சிப் பெற்றது.

பின்பள்ளு,குறவஞ்சி,நொண்டி, போன்ற நாடகங்கள் இக்காலக்கட்டத்தில் தோன்றின

இன்றைய தமிழ் நாடகங்களுக்கு வித்திட்டவர்கள்
---------------------------------------------------------------------------------------------

கிபி 19ஆம் நூற்றாண்டில் "தெருக்கூத்து" என்ற நாடக வடிவம் தோன்றியது.இதற்கு கோவிந்தசாமி ராவ் என்பவர் வித்திட்டார்.நாடகத்தின் நேரத்தையும் காலத்திற்கேற்ப மாற்றி அமைத்தார்.1891ல் பம்மல் சம்பந்த முதலியாரால் தமிழ் உரை நாடகங்கள் தமிழ் நாடக மேடையில் அறிமுகம் செய்யப்பட்டது.நாடகமேடையில் கட்டிடம் போன்ற செயற்கையில் செய்யப்பட்ட அமைப்பு மேடையில் கீழும், மேலும் ஏறுவது, இறங்குவது போன்ற யுக்திகள் அறிமுகமாகின

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்,  மின்விளக்கு ஒளிகளால் வண்ணத்திரைகளுடன் புதிய விஷயங்களை மேடையில் தோற்றுவித்த முதல் நாடக மைப்பாளர் ஆனார்.இவரது நாடகங்களில் உயிருள்ள மான், காளை, பசு, யானை போன்ற விலங்குகளை நடிக்க வைத்து புதுமை படைத்தார்.

நாடக அரங்குகள் மேடைகளாக இருந்து வந்ததை சி.கன்னையா அவர்கள் முக்கோண கனபரிமாண அமைப்பின் மூலம் அரங்குகளை அமைத்து ஒரு அரங்கில் காட்சி நடந்து கொண்டிருக்கும் போதே அடுத்த அரங்கில் அடுத்தக் காட்சிக்கான தேவையான ஏற்பாடுகளை செய்யப்பட்டிருக்கும் முறையினைத் தோற்றுவித்தார்.காட்சியமைப்புகளின் வழிகாட்டி கன்னையா எனலாம்.

இருபதாம் ஆண்டின் தொடக்கம் முதல் ஐம்பது ஆண்டுகள், தமிழ் வரபுமொழி நாடகங்கள் வளர்ச்சி பெற்றன.

இவற்றை இனிவரும் அத்தியாயங்களில் விரிவாகக் காணலாம்

தமிழ் மொழியை இயல், இசை, நாடகம் என மூவகையாக முன்னோர் வகுத்ததையும், நம் தமிழ் முத்தமிழ் என வழங்கப்படுவதையும், இசைத் தமிழ் கேட்டு இன்புறத்தக்கது  என்றும், நாடகத் தமிழ் பார்த்து மகிழத்தக்கது என்றும் முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம்.

இவ்வாறு ஒரு மொழியை மூன்று கூறாகப் பாகுப்படுத்திப் பாராட்டிய பெருமை உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லை.


இந்தக் காலக் கட்டத்தில், இராமாயணம், மகாபாரதம் ஆகிய கதைகளை சிலர் நாடகமாக்கினர்.அருணாசலக் கவிராயரின் இராம நாடகம், சுவாமினாத பிள்ளையின் இராம நாடகம் ஆகியவை இராமாயணத்தை ஒட்டித் தோன்றிய நாடகங்கள் ஆகும்.

அல்லி நாடகம், அர்ச்சுன நாடகம்,அபிமன்யூ நாடகம், அதிரூப அமராவதி ஆகிய நாடகம் பாரதத்தினின்று தோன்றின.

தவிர்த்து, 'அரிச்சந்திர விலாசம்", "மதுரை வீரன் விலாசம்". "வள்ளித் திருமணம்" ஆகிய நாடகங்களும் நடத்தப்பட்டன.



பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஷேக்ஸ்பியர்,காளிதாசர், பவபூதி ஆகியோரின் ஆங்கில, வடமொழி நாடகங்களைத் தழுவியும், மொழி பெயர்த்தும் தமிழ் நாடகங்கள் இயற்றப்பட்டன.பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களின் மனோன்மணீயம் நாடகம் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஒப்பும், உயர்வும் பெற்று விளங்கியது.

ஆங்கிலப் புலவர் லார்ட் லிட்டன் என்பவர் எழுதிய "இரகசிய வழி" என்ற கதையைத் தழுவியது "மனோன்மணீயம்".இது ஒரு தழுவல் நாடகமாக இருந்தாலும், மூல நாடகத்தை மிஞ்சும் வகையில் இருந்தது எனலாம்..ஆனாலும் "மனோன்மணீயம்" படிக்க எழுதிய நாடகமாகவே இருந்ததே தவிர, நடிக்க எழுதிய நாடகமாக இல்லை.

மகாகவி காளிதாசரின் சாகுந்தலம் நாடகத்தை வடமொழியிலிருந்து தமிழில் அழகாக மொழிபெயர்த்துத் தந்துள்ளார் மறைமலையடிகள் அவர்கள்.

பரிதிமாற் கலைஞர் என்று தன் பெயரை தமிழின் பால் கொண்ட மையலால் மாற்றிக் கொண்ட வி.கே.சூரிய நாராயண சாஸ்திரியார் ,நாடகக் கலைக்கு ஆற்றிய தொண்டும் சிறப்பானது..நாடகம் அமையும் முறைகளை விளக்கும் வகையில் அரிய "நாடகவியல்" என்னும் நூலை இவர் எழுதியுள்ளார்.

தவிர்த்து, "கலாவதி:", மான விஜயம்" "ரூபாவதி" ஆகிய நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார்.

அடுத்து, சங்கரதாஸ் சுவாமிகள் நாடக உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்  எனலாம்.

நாடகக் கலை என்றால் என்ன?


இலக்கியம் என்றால் படித்து மகிழ்வது.
நாடக இலக்கியம் என்றால் பார்த்து மகிழ்வது.
நாடகம் கலைகளுக்கெல்லாம் அரசன்.மக்கள் பயன்படுத்தும் ஒரு மகத்தான கலை.
எது ஒருவனை மகிழ்விக்கிறதோ..அது கலை.எது சமுதாயத்தை அப்படியே பிரதிபலிக்கிறதோ அது கலை.
மிகைப்பத்தப்படாதது எதுவோ..அது கலை.அதனால் தான் தத்ரூபமாக வரும் படங்களை art film
என்கிறோம்.நாடகங்களை நாடகக்கலை என்கிறோம்.
நாடகம்...நாடு+அகம்..நாட்டை அகத்தில் கொண்டதே நாடகம்.அதாவது நாட்டின் சென்ற காலத்தையும்,நிகழ்காலத்தையும் தன்னகத்தே காட்டுவதால்..நாடு..அகம்..நாடகம் என பெயர் பெற்றது எனலாம்.
நாடு..அகம்..அதாவது அகம் நாடு..உன்னுள் நோக்கு,உன்னை உணர்..சுருங்க ஒரு வரியில் சொல்ல
வேண்டுமென்றால்..நாடகம் உலக நிகழ்ச்சிகளை காட்டும் கண்ணாடி எனலாம்.
நாடகக் கலை என்பது என்ன? சிந்தித்துப் பாருங்கள்..
நாம் வெளியே போகும்போது எத்தனையோ காட்சிகளைப் பார்க்கிறோம்.ரசிக்கிறோம்.சில காட்சிகள்
நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன.
அப்படிப் பதிந்துவிட்ட காட்சியை ஒரு ஓவியன் ஓவியமாக வரைகிறான்.
நம் வீட்டில் குழந்தைகள் செய்யும் குறும்புகளை..மழலை பேச்சுகளை எப்படி ரசிக்கிறோம்.அந்த குழந்தையை
புகைப்படம் எடுத்து..அதைப்பார்த்து எவ்வளவு மகிழ்கிறோம்?கடைகளில் பலகாய்கறிகளைப் பார்க்கிறோம்.
ஆனால் அவற்றை அதிசயமாகவோ..ஆர்வமாகவோ..பார்ப்பதில்லை.ஆனால் அவற்றை மண்ணாலோ..
காகிதத்தாலோ..செய்து வர்ணம் பூசி பார்க்கும் போது..அடடே..நிஜ மாம்பழம் போல இருக்கிறதே
என மகிழ்கிறோம்.
இப்படி நாம் தினசரி பார்க்கும் காட்சிகளை ஓவியமாகவோ..புகைப்படமாகவோ..மண்ணால் உருவான
படைப்புகளாகவோ பார்க்கும் போது தனி மகிழ்ச்சி அடைகிறோமே..அது ஏன்? அந்த உணர்ச்சிக்குப் பெயர் என்ன?அதுதான் கலை உணர்வு.
முதன் முதலில் பண்டைக்காலத்தில் நாடகக்கலை எப்படி தோன்ற ஆரம்பித்தது?

நம் முன்னோர்கள்..மரத்தால் பொம்மைகளை செய்து அவற்றை ஆடி..ஓடி விளையாட வைத்தார்கள்.
பின்னர் மண்ணாலும்..துணியாலும் மனிதர்களைப்போல் அழகான பொம்மைகள் செய்து அந்த பொம்மைகளின் கை..கால்..தலை..முதலியவற்றை கயிற்றால் கட்டி..பின்னர் ,,அதற்கு பொம்மலாட்டம் என பெயர் வைத்தனர்,இது பொம்மலாட்டக்கலை.நாள் பட நாள்பட இப்படி உயிரில்லா பொம்மைகளை கொண்டு நடத்துவதை விட உயிருள்ள மனிதர்களுக்கு வேடம் போட்டுஇந்த விளையாட்டை அவர்களைக் கொண்டு நடிக்க வைத்தால் எப்படி இருக்கும் என்ற
எண்ணம் தோன்ற..இன்று நாம் காணும் நாடக விளையாட்டு தோன்றியது.அதனால் தான் கிராமங்களில்
நாடகத்தை விளையாட்டு என்கிறார்கள்.அதன் காரணமாகத்தான் நாடகத்தை ஆங்கிலத்தில் play என்கிறோம்.
மனிதன் தன் எண்ணங்களை மற்றவர்களுக்கு வெளியிடும் ஒலிக்குத்தான் மொழி என்று பெயர்.தமிழ் மொழியில் இதை விளக்க முத்தமிழை வகுத்தார்கள்.
அதாவது....இயல்..இசை..நாடகம்
நான் இப்போது பேசிக்கொண்டிருப்பது வார்த்தைகளால்..இது இயல்
இதையே ஒரு பாட்டாக நான் பாடினால் அது இசை
இயலும்..இசையும் மேடையில் சேரும்போது..அதுதான் நாடகம்.
இயல்..இசை..இரண்டும் சேர்ந்தால் நாடகம்.
ஆகவே தான் இயல்..இசை..நாடகம்..என நாம் நாடகத்தை கடைசியில் வைத்தோம்.
ஆம்..நாடகத்தை ஏன் கலை என்கிறோம்?ருசிக்கத்தக்கது..ரசிக்கத்தக்கது..உணரத்தக்கது..மகிழத்தக்கது
எல்லாவற்றையும் நாம் கலை எங்கிறோம்.
ஆய கலைகள் அறுபத்தினான்கினையும் என சரஸ்வதியை ஔவை விளிக்கிறார்.
மகிழத்தக்கதான கலை-மன்மதக்கலை
ருசிக்கத்தக்கது-சமையல் கலை
பார்த்து ரசிப்பது-ஓவியக்கலை
மகிழத்தக்கது-இசை மற்றும் ஓவியக்கலை
ரசிக்கத்தக்கது-நாடகக்கலை
நாடக்கலையில் பங்குபெறுபவர்கள் கலைஞர்கள்.நாடகக்கலை சிறப்புற இவர்கள் முழு ஒத்துழைப்பும் தேவை.

நடிகர்களிடையே ஒழுங்கும்..கட்டுப்பாடும் இருக்க வேண்டும்.நாடகத்தில் நடிகன் நவரசங்களையும்
காட்ட வேண்டும்.அதாவது சுபாவத்தில் சாதுவாக இருப்பவன்..நடிக்கும் போது..காதல்,வீரம்,சிரிப்பு,கோபம்,
வியப்பு,இழிப்பு,சோகம்,பயம்,சாந்தம் ..இப்படி நவரசங்களையும் காட்ட வேண்டும்.அந்தக் கலை அவனுக்குத்
தெரிந்திருக்க வேண்டும்.அதனால்தான் நாடகத்தை கலை என்கிறோம்.

பெர்னாட்ஷா...எப்போது உலகப் புகழ் பெற்றார் தெரியுமா?
நாடகங்கள் எழுதி செல்வாக்கு பெற்ற பின்னர்தான்..சிறுகதை,நாவல் எழுதுவதைவிட நாடகம் எழுதுவது கடினம்.
நாடகம் மக்களுக்கு அதிகப் பயனைத் தரக்கூடியது என்பது உண்மையான கூற்று.இவ்வளவு பெருமையான
நாடகக்கலையை வெறும் வேடிக்கை நிகழ்ச்சியாகக் கருதக்கூடாது.நல்ல நாடக நிகழ்ச்சிகள் உங்கள் உள்ளத்தை
உயர்த்திச் சென்ற கால சிந்தனைகளையும்,நிகழ்காலத்து உண்மைகளையும்,வருங்காலத்தின் வளமைகளையும்
எடுத்துக் காட்டுகின்றன.ஷேக்ஸ்பியரின் ஹாம்லட் நாடகம்..உங்களுக்குத் தெரிந்திருக்கும்.அந்த நாடகத்தினுள்
ஒரு நாடகம் வரும்.தன் தந்தையைக் கொலை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க எண்ணுகிறான் ஹாம்லட்.
அதற்கு நாடகம் தான் நல்ல வழி என்று எண்ணி ..உணர்ச்சி மிக்க நடிகர்களைக் கொண்டு தன் தந்தையின்
கொலை நிகழ்ச்சியை நாடகமாக்கி நடிக்க வேண்டும்.தன் சிற்றப்பன் கிளாடியசும்,தன் அன்னையும் அதை
பார்க்கவேண்டும்.அவர்கள் மன உணர்ச்சி எப்படி மாறுகிறது எனப் பார்க்க வேண்டும் என விரும்புகிறான்.
தானே, கதை எழுதி..நடிகர்களை நடிக்கச் சொல்கிறான்.நாடகம் பார்க்கும் சிற்றப்பன் முகம் மாற..
அவனே கொலையாளி என காண்கிறான் ஹாம்லட்.
நாடகத்தின் மூலம் ஒரு கொலையாளியையும் கண்டுபிடிக்கலாம் என்கிறார் ஷேக்ஸ்பியர்.
நம் நாடு சுதந்திரம் அடைய..நாடகங்கள் ஆற்றிய பணியை யாரும் மறுக்கவோ,மறக்கவோ முடியாது.
பேசும்படம் வந்த போது..நாடக மேடை இறந்துவிடும் என்றார்கள்.இன்றும் நாடகங்கள் அழிந்து வருகிறது
என்கிறார்கள்.ஆனால்..அது அழியாது..
நாடக மேடையை நல்ல முறையில் கையாண்டால்..அதை யாராலும் அழிக்கமுடியாது.

நடிப்புக்கலை..
-------------------------------

வீட்டில் குழந்தைகள் நாய்,பூனை இவற்றுடன் பயமின்றி விளையாடுகின்றன.அந்த நாயும்,பூனையும் தன் கூரிய நகங்களைக் கொண்டு..குழந்தைகளுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி எப்படி விளையாடுகின்றன..அதுவும் அவற்றின் நடிப்புத்தானே?
பெண் குழந்தைகள் பொம்மைகளை வைத்துக் கொண்டு..சமையல் செய்வது போல விளையாடுகின்றனவே..
அதுவும் நடிப்புத்தானே?
உலகம் ஒரு நாடக மேடை..நாம் அனைவரும் நடிகர்கள் என்கிறார்களே..அப்படியெனில் நாம் ஒவ்வொருவரும் நடிகர்கள்தானே?நடிப்புக்கலை தெரிந்தவர்கள் தானே?
ஒரு பிச்சைக்காரன்..தனது..நல்ல காலை மடக்கி முடம்பொல காட்டுகின்றானே..அது அவன் நடிப்பு.நன்கு தெரியும்
கண்களை..தெரியாதது போல குருடாக்கிக் காட்டுகின்றானே..அதுவும் நடிப்புத்தானே?
மனிதன் மொழியை உருவாக்குவதற்கு முன்..பேசத்தொடங்குமுன்..நடிப்பின் மூலம் தானே தன் எண்ணங்களை
வெளிப்படுத்தி இருப்பான்.ஹிந்தி தெரியாத நாம் இன்றும் வடக்கே சென்றால்.. நெருக்கடி சமயங்களில்..நடிப்புத்
தானே நம்மை காப்பாற்றி உதவி செய்கிறது.புரிய வைக்க வேண்டியதை கை கால்கள் அசைவு மூலம் புரிய
வைப்பது கலைதானே.நடிகனுடைய கண்கள்தான் மற்ற உறுப்புக்களை விட மிகவும் முதன்மையானது.
கண்கள் இருளிலே ஒளியாக..நடிப்பிலே உயிராக விளங்குகின்றன என்று சொல்லலாம்.சபையிலிருக்கும் மக்கள்
நடிகனின் பாத்திரத்தின்தன்மையை புரிந்துக் கொள்கிறார்கள்.ஒவ்வொரு நடிகனும் நடிப்புக் கலையில் தேர்ச்சிபெற
பேசும் கண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
மேடையில் நடிக்கும் போது நடிகன் ஒருவன் அதற்குரிய பாவத்தைக் கண்களில் காட்டாது..வேறு எங்காவது
சுழல விட்டுக் கொண்டிருந்தால் சுவை கெட்டு விடும்.பாவத்தைக் காட்டும் கலையை பயில வேண்டும்.
அழும் போது அழகாக அழுவது ஒரு கலை.கோபம் கொண்டாலும் அழகாகக் கோபப் பட வேண்டும்.எந்த வகையிலும்
தன்னை விகாரப்படுத்திக் கொள்ளக்கூடாது.விகாரப்படுத்திக் கொள்ளாமல் கோபப்படுவது ஒரு கலை.குரல் பயிற்சி
..மிக முக்கியமானது.வார்த்தைகளிலே ஏற்றத்தாழ்வு இருக்க வேண்டும்.குழைவு இருக்க வேண்டும்.அன்பு காட்டி
பேசுவதும்..ஆத்திரத்தோடு பேசுவதும் குரலிலேயே தெரிய வேண்டும்.அடுத்த படியாக பேச்சிலே தெளிவு இருக்க
வேண்டும்.அதுவும் ஒரு கலை.ஒரு பாத்திரத்தின் வசனங்களை மனப்பாடம் செய்யும் போது வார்த்தைகளை
நன்கு கவனிக்க வேண்டும்.எந்தெந்த இடத்தில் தெளிவும்..அழுத்தமும் வேண்டும் என உணர வேண்டும்.ஒரு நடிகனின் பேச்சிலிருந்து மற்றொரு நடிகனுக்கு பேச்சு தொடங்கும்.அது போன்ற சமயங்களில் அழுத்தமாக
சொல்லாவிட்டால் மக்களுக்கு புரியாது.அழும் காட்சிகளில் உண்மையாக அழக்கூடாது.அழுதால் பேச்சு தெளிவாக
இருக்காது.அழுகை நடிப்பாக இருந்தால்தான் பேச்சு தெளிவாக இருக்கும்.அப்படி அழ தெரிந்திருக்க வேண்டியது
ஒரு கலை
எந்த ஒரு நடிகரையும்,எந்த சமயத்திலும் காப்பி அடிக்கக்கூடாது.தனக்கென தனி பாணி வேண்டும்.காப்பியடிக்கும் கலை மட்டும் வேண்டாம்.
நாடகக்கலையை பொறுத்தமட்டில்..புதுமைக் கருத்து அல்லது மறுமலர்ச்சிக் கருத்து என்பது ரசிகர்களின் கை தட்டலின் வாயிலாக வெளிப்பட்டால் போதாது..பார்ப்பவர் உள்ளத்தில் அது பாய்ந்து நம் பண்புக்கேற்ற வகையில் அது செயலாக வெளிப்பட வேண்டும்.
கலை என்பது நன்மைக்காக வளர வேண்டும்.மனிதரின் அறிவை நல்ல வழியிலும் திருப்பலாம்.கெட்ட வழியிலும் திருப்பலாம்.நல்லதைவிட தீயதைத்தான் மனித மனம் விரைவில் ஏற்றுக்கொள்ளும் தன்மை வாய்ந்தது.ஆகவே பொழுது போக்கு என்ற பெயரில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் கூட மக்களின் நலன் கருதியே வரவேண்டும்.
நாடக கலாசாலைப்போல நல்ல கலாசாலை நீடுலகில் உண்டோ?என்றார் கவிமணி.ஆம்..நாடகத்தை நல்ல கலாசாலையாக அந்த கவிஞன் நினைத்தான்.
இக்கருத்தின்படி நாட்டில் நாடக நற்கலாசாலைகள் அமைக்க வேண்டும்..நடிப்புக்கலையை போதிக்க வேண்டும்.
அதன் மூலம் மக்களின் கண்களையும்,செவிகளையும் கவர்ந்து,அவர்களுடைய வாழ்வை வளமுடையதாக்க
வேண்டும்.தூய்மைப்படுத்த வேண்டும்.
புராண நாடகம்,இதிகாச நாடகம்,வரலாற்று நாடகம்,கற்பனை நாடகம்,பக்தி நாடகம்,இலட்சிய நாடகம்,சமுதாய நாடகம்,சமுதாய சீர்திருத்த நாடகம்,தேசிய நாடகம்,நகைச்சுவை நாடகம் என நாடகங்கள் நடத்தப்பட வேண்டும்.
நடிப்புக்கலைக்கு உரிய தனிச்சிறப்பு என்ன தெரியுமா?ஒரு ஓவியன்..தன் கலையை செய்து முடித்ததும்..அவன்
வேறாகவும்..அவன் வரைந்த ஓவியம் வேறாகவும் அமைந்து விடுகிறது.அதுபோன்றதுதான் சிற்பக்கலையும்.ஆனால்
நடிகன் நிலை முற்றிலும் மாறுபட்டது.நடிகன் வேறாகவும்..அவன் படைப்பு வேறாகவும் இருக்க முடியாது.நடிகன் படைக்கும் பாத்திரம் அவனுக்குள்ளேயே அடங்கிக்கிடக்கிறது.நடிகனும் அவனே..பாத்திரமும் அவனே..
இந்த சிறப்பை கலைஞர்கள் அனைவரும் உணர வேண்டும்.இது நடிப்புக் கலைக்கே உரிய தனி சிறப்பாகும்.
நாடகத்தில் சொல்லப்படும் கதை அழகோடு,கலையழகோடு..மனித குலத்தின் நல்வாழ்வுக்கும் வழிகோல வேண்டும்.

இப்படி அழகாக சொல்லிச் சென்றவர் ஔவை ஷண்முகம் ஆவார்.

1)தெருக்கூத்து
----------------------

தெருவில் நடத்தப்படும் கூத்து தெருக்கூத்து ஆகும். இது தமிழர்களின் பழங்க்கலைகளில் ஒன்று ஆகும். கதை சொல்லல், நாடகம், ஆடல், பாடல் என பலதரப்பட்ட அம்சங்கள் தெருக்கூத்தில் கலந்திருக்கும். பொதுவாக ஒரு தொன்மம், நாட்டார் கதை, சீர்திருத்தக் கதை, அல்லது விழிப்புணர்வுக் கதை ஒன்றை மையமாக வைத்து தெருக்கூத்து நிகழும். சிற்றூர்ப் புறங்களில் உள்ள கோவில்களில் மேடையின்றி திரைச்சீலை போன்ற நாகரிகச் சாயல்களன்றி மூன்று பக்கமும் மக்கள் சூழ்ந்த ஆடுபரப்பில், ஆடவர் மட்டுமே உடலெங்கும் மரக்கட்டைகளாலாகிய அணிகலன்களைப் பூண்டு, கட்டியங்காரனால் அறிமுகப்படுத்தப்பட்டு நடனம், பாடல் வசனம்ஆகியவற்றால் கதைப் பொருளைக் கூத்துருவமாக்கி, இரவு பத்து மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை முடியும் வண்ணம் இக்கூத்து நிகழ்த்தப்படும். பார்வையாளர்கள் கலைஞர்களுக்கு நன்கொடை வழங்குவர்.

தெருக்கூத்து நடைபெறும் இடம் களரி எனப்படும். ஊரின் புறத்தே அல்லது கோவில் திடல்களில், அல்லது அறுவடை ஆன வயல்களின் நடுவே இக்கூத்தானது நடைபெறும். கூத்து நடைபெறும் இடத்தை முதலில் சுத்தப்படுத்துவர். பின்பு அத்திடலில் இரு கழிகளை நட்டு அவற்றில் விளக்குகளைக் கட்டுவர். கழிகளுக்கு இடையில் உள்ள இடமே கூத்து நடைபெறும் இடமாகும். இதனை விட்டமாகக் கொண்டே மக்கள் வட்டமாகச் சுற்றி அமர்வார்கள். கழிகளுக்கு இடையாக ஓர் ஓரத்தில் ஒரு அகன்ற பெஞ்ச் போடப்பட்டிருக்கும். அதன் பின்னே தென்னங் கீற்றால் அறை அமைக்கப்பட்டிருக்கும். இது கூத்தில் நடிக்கும் நடிகர்களின் ஒப்பனை அறையாகும்.

கூத்திற்கு மிக இன்றியமையாத ஒன்று பின்பாட்டு ஆகும் . ஆடலும் பாடலும் இணைந்த நாட்டிய நாடகமே தெருக்கூத்து. இக்கூத்தில் பின்பாட்டு பாடுபவர்கள் இவர்களே ஆவார்கள். ஒவ்வொரு பாத்திரத்தின் தன்மைக்கேற்ப இவர்கள் பாடுவர். பாட்டின் இடையே வசனம் பேசுவதும் இவர்களே. இவர்கள் இசைக்கருவிகளை வாசிப்பதிலும் திறமை மிகுந்தோராய் இருப்பர். இவர் விசுப்பலகையில் அமர்ந்து இசைக்கருவிகளை இசைப்பர்.

தெருக்கூத்தில் ஆர்மோனியம், மத்தளம், தாளம், முகவீணை(மோர்சிங்) முதலிய கருவிகள் பின்னனி இசைக்காகப் பயன் படுத்தப்படும்.

கட்டியங்காரன் என்பவரே கூத்தின் முக்கிய நபராவார். கூத்தினைத் தொடங்கி வைத்தல், கூத்தின் கதா பாத்திரங்களை அறிமுகம் செய்தல், கூத்தின் இடையே சிறு சிறு பாத்திரங்களை ஏற்று நடித்தல், கூத்தின் கதையை விளக்குவதோடு இடையிடையே மக்களை மகிழ்விக்கும் விதமாக கோமாளி போல நகைச்சுவையைக் கையாளுதல், கூத்தினை முடித்து வைத்தல் ஆகிய பணிகளையும் இவர் செய்வார்.

கட்டியங்காரனுடைய உடை முழுக்கால் சட்டையும் பல வண்ணங்கள் கொண்ட மேல் சட்டையும் கோமாளித் தொப்பியும் ஆகும். மற்றவர் கதைக்கு ஏற்பவும், பாத்திரத்தின் தன்மைக்கேற்பவும், உடலோடு ஒட்டிய முழுக் கால் சட்டை, அதன் மேல் குட்டைப் பாவாடை போன்ற உடையும் அணிவர். பாத்திரத்திற்கேற்ற மேல் உடையும் கட்டைகளால் ஆன மகுடம், மார்புப் பதக்கம், தோளணிகள், போன்ற அணிகளை அணிவர். வண்ணக் காகிதங்கள், பாசிமணிகள், கண்ணாடித் துண்டுகள் போன்றவற்றால் அணிகலன்கள் அழகுபடுத்தப் பட்டிருக்கும். பெண் வேடதாரிகள் சேலையும் ரவிக்கையும் அணிந்து குறைவான அணிகலன்களை அணிவர்.

கூத்து தொடங்கும் முன் இசைக் கருவிகள் அனைத்தும் ஒருசேர ஒலிக்கும். இதனை களரி கட்டுதல் என்பர். அதாவது கூத்து தொடங்கிவிட்டது என ஊருக்கு அறிவிக்கும் நிகழ்ச்சி இது.

கூத்தாடுகளத்தின் நடுவில் இருவர் வந்து வேட்டியைத் திரையாகப் பிடித்தபடி நிற்பர். கூத்தின் கதாபாத்திரங்கள் அனைவரும் முதல் முறையாக மேடையில் தோன்றுவதற்கு முன்னர், இத்திரையின் பின் நின்று பாடிய பின்பே மக்கள் முன் காட்சி தருவர்.

தெருக்கூத்தில் பெண்கள் நடிக்கும் வழக்கம் இல்லை. ஆண்களே பெண்வேடமிட்டு நடிப்பர்.

பல நாட்கள் தொடர்ந்து நடக்கும் கூத்துகளில், கூத்து தொடங்கி முடியும் வரை கூத்தில் நடிப்பவர்கள் நோன்பிருப்பர்.

தெருக்கூத்தானது வெறும் பொழுது போக்காக மட்டுமன்றி கோவில் விழாவின் ஒரு பகுதியாகவும், பக்தியை பரப்பும் கருவியாகவும் அமைகின்றது. கூத்தர்கள் விரதமிருந்து ஆடுவதும் கடவுள் கோலத்தில் வருகின்ற கூத்தர்களை கடவுளராக எண்ணி பார்வையாளர்கள் வணங்குவதும், இக்கலை ஒரு புனிதமான கலை என்பதை உணர்த்தும். அக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்டு வந்த தெருக்கூத்து பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் காரணமாக தற்காலத்தில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலும் சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும் புதுசேரிப் பகுதிகளிலும் வேறு சில இடங்களிலும் மட்டுமே நிகழ்ந்து வருகின்றது. தற்காலத்தில் கோவில் திருவிழாக்களில் மட்டுமே இடம்பெறும் இக்கூத்துக் கலை இன்றைய காலகட்டத்தில் அருகி வருகிறது

வில்லுப்பாட்டு
---------------------------------

வில்லுப்பாட்டு (அல்லது வில்லிசை) என்பது தமிழர் கலை வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டு பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டு எனப் பெயர் பெற்றது. துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை: உடுக்கை, குடம், தாளம், கட்டை என்பனவாகும்.

வில்லுப்பாட்டின் தோற்றம் குறித்த காலத்தை வரையறுத்துக் கூற முடியவில்லை. மனிதன் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்த நேரம் அவனுக்கு உதவியது வில்லாகும். அதில் கட்டப்பட்டிருந்த மணி ஓசையில் மயங்கி அதனடிப்படையில் வில்லுப்பாட்டிசை உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

வீரர்களின் பொழுதுபோக்குச் சாதனமாக முதலில் விளங்கிய வில்லுப்பாட்டு, காலப்போக்கில் வளர்ச்சி பெற்று மக்களின் பொழுது போக்கிற்காகவும், குறிப்பாகச் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை சொல்வதற்கும் பயன்பட்டது.

‘’’வில்லுப்பாட்டு’’’ எப்படி உருவானது என்பதற்கு செவிவழிக்கதை ஒன்று உண்டு. பாண்டிய மன்னர் வில்லுடன் வேட்டைக்குப் போனார். பல விலங்குகளை வேட்டையாடினார். மாலை நேரம் வந்ததும், மன்னர் மனதில் கலக்கம். அமைச்சரிடம் ‘’இந்த உயிர்களை இப்படிக் கொல்லுகிறோமே... நமக்கு சந்தோஷம், அவற்றுக்கோ துன்பம். மானைக் கொன்ற பின், அதன் குட்டி எப்படித் தவிக்கிறது பார்த்தீர்களா?’’ என்றார். ‘’சரி, இதற்கெல்லாம் பரிகாரம் உண்டா?’’ ‘’உண்டு ராஜா... இறைவன் மீது மனமுருகப் பாடி பாவ மன்னிப்புக் கோருங்கள். இசை ஒன்றுக்குத் தான் இசைவான்’’ என்றார் அமைச்சர். உடனே காட்டிலேயே கச்சேரி நடத்த முடிவானது. ஆனால் பக்க வாத்தியங்கள் இல்லை. கொண்டு வந்த பொருட்களை இசைக்கருவிகளாக்கினர். வில்லைத் தரையில் வைத்து அம்பால் தட்டி இசை எழுப்பினார் மன்னர். அப்படி தட்டும் போது வில் சரிவர நிற்காத்தால். தண்ணீர் கொண்டு போயிருந்த மண் குட்த்தைக் கட்டித் தட்டினார். டும் டும் என்று நாதம் பிறந்துவிட்டது. ராஜா பாடத் துவங்கும் முன், ‘தந்தனத்தோம்’ என்று அடியெடுத்துக் கொடுத்தார் அமைச்சர். மன்னர் பாடும் போது, ஆமோதிக்க வேண்டாமா? அதனால் மன்னரின் உதவியாட்கள் ‘ஆமாம்’ போட ஆரம்பித்தனர். அந்தப் பழக்கம் வில்லுப்பாட்டில் இன்னும் தொடர்கிறது.


வில்லுப்பாட்டின் கட்டமைப்பு பெரும்பாலும் பின்வரும் ஏழு வகைகளாக வகுக்கலாம்:


இறைவணக்கம் செய்தல் தமிழர் மரபாகும். அந்த முறையில் வில்லுப்பாட்டின் முதல் பகுதி காப்புப் பகுதியாக அமைகிறது. பெரும்பாலும் இது விருத்தமாக அமையும்.


குறிப்பிட்ட கதையை இன்று வில்லில் கூறப்போவதாக ஆசிரியர் முன்கூட்டியே குறிப்பிடுவது வருபொருள் உரைத்தலாகும். இதனை நுதலிப்பாடுதல் எனவும் கூறுவர். இது பாடலாக அமையப்பெறும்.

தனக்கு ஆசிரியனாக இருந்தவரை நினைத்து வணங்கி நலம் உண்டாக உதவுமாறு கோருவது குருவடி பாடுதல் எனப்படுகிறது.


கதை கூறுவோர் தன்னை எளியோனாகவும், கேட்போரைச் சான்றோராகவும் கருதி கூறப்பெறுவது அவையடக்கம் ஆகும். பிழை நேருமிடத்துப் பொருத்துக்கொள்ள வேண்டுவதாக அப்பகுதி அமையப்பெறும்.


கதையின் தொடக்கத்தில் பொதுவாக நாட்டு வளமே கூறப்படும்.


நாட்டுவளத்தினை அடுத்து கதை முழுமையாகக் கூறப்பெறும். கதையின் தலைவன், தலைவியரின் சிறப்பு இதில் புகழ்ந்துரைக்கப்படும்.


இறுதிப் பகுதியாக வாழ்த்துப் பகுதி அமையும். கதை கேட்போர், கதை மாந்தர், கதை கூறுவோர் என அனைவரும் நலம்பெற வாழ்த்துவதாக மங்களமாக முடிவு பெறும் நிலை வாழிபாடுதல் என்பது.